ராஜ்யசபா பதவி.. தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் காலியாகவுள்ள 6 ராஜ்யசபா உறுப்பினர்கள் பதவிக்கு அரசியல் கட்சிகள் போட்டா போட்டி போட்டு வருகின்றன. இந்நிலையில் ராஜ்சபா உறுப்பினர்களுக்கு வருகிற ஜூன் 19 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வேட்புமனுத்தாக்கல் ஜூன் 2 ஆம் தேதி தொடங்கவுள்ளது.
நாடாளுமன்றதில் மக்களவை, மாநிலங்களவை என்று இரண்டு அவைகள் உள்ளன. லோக் சபா எனப்படும் மக்களவை உறுப்பினர்கள் மக்களால் தேர்வு செய்யப்படுவார்கள். மாநிலங்களவை உறுப்பினர்களை பொறுத்தவரை சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படுவார்கள். மாநிலங்களவை உறுப்பினருக்கு மொத்தம் 6 ஆண்டுகள் பதவிக்காலம். தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு ஒரு வருடம் கூட முழுமையாக இல்லாத நிலையில், மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் பரபரப்பாகியுள்ளது.

தமிழகத்தில் இருந்து மொத்தம் 18 மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். திமுக வில்சன், சண்முகம், அப்துல்லா, மதிமுக வைகோ, அதிமுக சந்திரசேகரன், பாமக அன்புமணி ராமதாஸ் ஆகிய 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் வருகிற ஜூலை மாதத்துடன் நிறைவடைகிறது. இதனால் அந்தப் பதவிகளுக்கு திமுக, அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளிடையே கடுமையான போட்டி நிலவுகிறது.
இந்நிலையில் ராஜ்யசபா தேர்தல் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பை, செய்தி மக்கள் தொடர்புதுறை மூலம் இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து செய்தி மக்கள் தொடர்புத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் 24.07.2025 தேதியுடன் முடிவடைகிறது. அந்த காலி இடங்களை நிரப்புவதற்காக, இந்தியத் தேர்தல் ஆணையம் தேர்தல் கால அட்டவணையை வெளியிட்டுள்ளது:-
அதன்படி வேட்புமனுத்தாக்கல் வருகிற 02.06.2025 (திங்கட்கிழமை) தொடங்குகிறது. வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் 09.06.2025 (திங்கட்கிழமை) ஆகும். 10.06.2025 (செவ்வாய்க்கிழமை) வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும். வேட்பு மனுக்களை திரும்பப் பெற்றுக் கொள்வதற்கான 12.06.2025 (வியாழக்கிழமை) கடைசி நாளாகும்.
இதனை தொடர்ந்து வாக்குப் பதிவு 19.06.2025 (வியாழக்கிழமை) தினம் நடைபெறும். அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறும். அன்றைய தினமே மாலை 5 மணி முதல் வாக்குகள் எண்ணப்படும். தேர்தல் நடவடிக்கைகள் 23.06.2025 (திங்கட்கிழமை) தினம் நிறைவடையும்.
இந்தியத் தேர்தல் ஆணையம், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகத்தின் கூடுதல் செயலாளரை தேர்தல் நடத்தும் அதிகாரியாகவும். தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகத்தின் இணைச் செயலாளரை உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியாகவும் நியமனம் செய்துள்ளது. வேட்பு மனுக்களை பிற ஆவணங்களுடன் தேர்தல் நடத்தும் அதிகாரி முன்போ அல்லது உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி முன்போ தலைமைச் செயலகத்திலுள்ள அவர்களது அலுவலகத்தில், 02.06.2025 முதல் 09.06.2025 வரை காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தாக்கல் செய்யலாம்.
1881ஆம் வருட செலாவணி முறிச்சட்டத்தின்கீழ் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ள 07.06.2025 (பக்ரீத் பண்டிகை) மற்றும் 08.06.2025 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 2 நாட்கள் தவிர மற்ற நாட்களில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம். வாக்குப்பதிவு, தேவைப்படின் சட்டமன்ற குழுக்கள் அறையில் 19.6.2025 அன்று நடைபெறும். என்று." கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications