அதிமுகவின் உள்கட்சி விவகாரத்தில் தலையிட முடியாது.. ஹைகோர்ட்டில் தேர்தல் ஆணையம் பரபரப்பு பதில்
சென்னை: அதிமுகவின் உள்கட்சி விவகாரத்தில் தலையிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சூர்யமூர்த்தி என்பவர் சென்னை நகர உரிமையியல் நீதிமன்றத்தில் அதிமுக கட்சி விதியின்படி பொதுச் செயலாளர் பதவியை நீக்க யாருக்கும் அதிகாரம் இல்லை என்றும் உள்கட்சி தேர்தலை முறையாக நடத்தாமல் நிர்வாகிகள் நியமனம் செய்ததற்கு தடைக் கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.

2021 ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு மீது விசாரணை நடத்தப்பட்டது. அப்போது எடப்பாடி பழனிசாமி, "சூர்ய மூர்த்தி அதிமுக உறுப்பினரே இல்லை, முகத்தை காட்ட விரும்பாத சிலர் பின்னால் இருந்து கொண்டு மனுதாரரை இயக்குகிறார்கள். இது போல் டெல்லி உயர்நீதிமன்றத்திலும் உச்சநீதிமன்றத்திலும் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டதுடன் இரட்டை இலை சின்னத்தையும் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த நியமனம் குறித்து யாரும் கேள்வி கேட்க முடியாது என பதில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு குறித்து விசாரிக்க தேர்தல் ஆணையத்திற்கு ஹைகோர்ட் உத்தரவிட்டது. இந்த நிலையில் ஹைகோர்ட்டில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அதிமுக உள்கட்சி விவகாரத்தில் தலையிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து வழக்கை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும் இது தொடர்பாக சிவில் நீதிமன்றத்தை நாடுமாறும் சூர்யமூர்த்திக்கு நீதிபதி அறிவுறுத்தினார்.












Click it and Unblock the Notifications