பஞ்சாயத்து ஓவர்.. அன்புமணிக்கு லட்டு சான்ஸ்! தகித்த தைலாபுரம்! அடுத்து என்ன செய்யப் போகிறார் அய்யா?
சென்னை: பாமகவில் நீண்ட காலமாக நடைபெற்று வந்த மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது. அன்புமணி தான் தலைவர் என தேர்தல் ஆணையம் அங்கீகரிப்பதாக வழக்கறிஞர் பாலு கூறியிருக்கிறார். இந்த நிலையில் தேர்தல் ஆணையத்தின் முடிவை ஏற்றுக் கொள்ள முடியாது எனக் கூறுகிறது ராமதாஸ் தரப்பு. மேலும் இது தொடர்பாக நீதிமன்றத்தை நாடலாம் எனவும் சொல்லப்படுகிறது.
ஒருவழியாக பாட்டாளி மக்கள் கட்சியில் நடைபெற்று வந்த மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது. கட்சியின் தலைவரான அன்புமணி தான் தலைவர் எனவும், 2026 வரை அவரே தலைவராக செயல்படுவார் என தேர்தல் ஆணையம் கூறி இருக்கிறது.
கடந்த சில மாதங்களாகவே தந்தை மகன் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில் அன்புமணியை தலைவர் பதவியில் இருந்தும் அவரது ஆதரவாளர்களையும் நீக்குவதாக அறிவித்தார் ராமதாஸ். ஆனால் அதையெல்லாம் கண்டுகொள்ளாத அன்புமணி தொடர்ந்து பொதுக்குழு கூட்டத்தை கூட்டினார்.

அன்புமணி ராமதாஸ்
அந்த பொதுக்குழுவில் கட்சியின் தலைவராக 2026 வரை அன்புமணியே தொடர்வார், அவர் எடுக்கும் முடிவுகளுக்கு கட்டுப்படுவோம் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த தீர்மானங்கள் அனைத்தும் தேர்தல் ஆணையத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டு இருந்தன. இதற்கிடையே ராமதாஸ் தரப்பும் பொதுக்குழுவை கூட்டிய நிலையில் நாங்கள்தான் உண்மையான பாமக என தேர்தல் ஆணையத்துக்கு தீர்மானம் அனுப்பப்பட்டது.
அன்புமணி ராமதாஸ்
இந்த நிலையில் அன்புமணி ராமதாஸ் தான் தலைவர் என தேர்தல் ஆணையம் அங்கீகரித்து கடிதம் அனுப்பி இருக்கிறது. அதில் தி.நகர் பாமக அலுவலகம் தான் பாமகவின் அலுவலகம், அன்புமணி தான் தலைவர் மற்றும் அவர் தரப்பில் இருக்கும் பொதுச் செயலாளர், பொருளாளர் தான் கட்சியின் நிர்வாகிகளாக செயல்படுவார்கள் எனக் கூறியுள்ளது. அதுமட்டுமல்லாமல் தேர்தலின் போது வேட்பாளர்களுக்கு வழங்கப்படும் ஏ ஃபார்ம், பி ஃபார்ம் ஆகியவற்றிலும் அன்புமணி தான் கையெழுத்திடுவார் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
பாமக தலைவர்
இதற்கு ஆதாரங்களாக தேர்தல் ஆணையத்தின் கடிதம் மற்றும் ஒப்புகைச் சீட்டையும் வழக்கறிஞர் பாலு வெளியிட்டுள்ளார். இன்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் ஊடகங்கள் முன்னிலையில் அதனைக் காட்டியுள்ளார். இதனால் அன்புமணி மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார். நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு பாமகவின் உண்மையான தலைவர் தான் என்பது உறுதியாகி இருக்கும் நிலையில் ராமதாஸ் தரப்பில் இருப்பவர்கள் ஒன்று சேர அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.
தேர்தல் ஆணையம்
இந்த நிலையில் தேர்தல் ஆணையத்தின் தகவலால் மிகுந்த அதிருப்தியில் இருக்கிறது ராமதாஸ் தரப்பு. தேர்தல் ஆணையம் இப்படி ஒரு முடிவை அறிவிக்கும் என அவர்கள் எதிர்பார்த்து இருக்கவில்லை. இது தொடர்பாகப் பேசியிருக்கும் அருள் எம்.எல்.ஏ, தேர்தல் ஆணையம் கொடுத்திருப்பது இறுதி முடிவு அல்ல. நாங்களும் பொதுக்குழுவைக் கூட்டி இருக்கிறோம். அதன் தீர்மானங்களும் அனுப்பி வைக்கப்பட்டு இருக்கின்றன. ஆனால் ஒப்புகையை அங்கீகாரம் எனக் கூறி வருகின்றனர்.
ராமதாஸ்
இது தொடர்பாகச் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனக் கூறியிருக்கிறார். இது சிவில் வழக்கு என்பதால் நீண்ட காலம் விசாரணையில் இருக்க வேண்டிய நிலை இருக்கிறது. அதற்குள் தேர்தலே முடிவடைந்துவிடும் என்பது கவனிக்கத்தக்கது. அன்புமணி தான் தலைமை என உறுதியாகி இருக்கும் நிலையில் அடுத்த கட்டமாக ராமதாஸ் தரப்பு என்ன செய்யப் போகிறது என்பதுதான் எதிர்பார்ப்பு.












Click it and Unblock the Notifications