ஆர்.கே.நகர் பண மழை.. சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கு.. தேர்தல் ஆணையம் அறிக்கை தாக்கல்
சென்னை: ஆர்.கே நகர் இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரிய வழக்கின் இந்திய தேர்தல் ஆணையம் சீலிடப்பட்ட கவரில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் ஆர்.கே.நகர் தொகுதிக்கு கடந்த 2017-ம் ஆண்டு இடைதேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக அதிமுக தரப்பினர் பணப்பட்டுவாடா செய்ததாக புகார் எழுந்ததையடுத்து அமைச்சர் விஜயபாஸ்கர் இல்லத்தில் வருமான வரித்துறையினர் சோதனையில் நடத்தினர்.

இதில் 89 கோடி ரூபாய் பணப்பட்டுவாடா செய்ததற்கான ஆவணங்கள் பறிமுதல் செய்தனர். வருமான வரித்துறை அறிக்கையின் அடிப்படையில் ஆர்.கே நகர் தேர்தல் அதிகாரி அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் யார் பெயரையும் குறிப்பிடாமல் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அபிராமபுரம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை சிபிஐ-க்கு மாற்ற கோரி வழக்குரைஞர் வைரகண்ணன் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதேபோல, பணப்பட்டுவாடா-வை தடுக்க புதிய விதிமுறைகளை உருவாக்க வேண்டும் என திமுக வை சேர்ந்த மருது கணேஷ் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, அபிராமபுரம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துவிட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, கடந்த 2017 ம் ஆண்டு நடந்த ஆர் கே நகர் இடைத்தேர்தலின் போது பணப்பட்டுவாடா புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து இந்திய தேர்தல் ஆணையம் ரகசிய அறிக்கை தாக்கல் செய்தது.
அதே போல், சிபிஐ விசாரணை கோரிய வழக்கில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கி அக்டோபர் 30 ம் தேதி தள்ளி வைத்து உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications