செந்தில் பாலாஜி சிறையில் ஆளே மாறிட்டாரே .. தாடியுடன் அழைத்து சென்ற ஈடி! இன்று முதல் தொடங்கிய கஸ்டடி
சென்னை: சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு விதிக்கப்பட்ட அமலாக்கத் துறை காவல் இன்று முதல் தொடங்க உள்ளது.
தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜி, ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவி வகித்தார். அப்போது ஓட்டுநர் மற்றும் நடத்துனர் வேலையை பெற்றுத் தருவதாக கூறி சட்டவிரோதமாக பண பரிமாற்றம் செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

செந்தில் பாலாஜி மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் பதிவு செய்த 3 வழக்குகளும் பல ஆண்டுகளாக எம்பி, எம்.எல்.ஏக்களுக்கான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகின்றன. செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு மத்திய அரசின் கீழ் செயல்படும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.
இதற்கு எதிராக செந்தில் பாலாஜி தரப்பு வழக்கு தொடர்ந்தது. இதனை விசாரித்த உயர்நீதிமன்றம் அமலாக்கத்துறையின் சம்மனை ரத்து செய்தது. உச்சநீதிமன்றத்தில் இந்த உத்தரவை எதிர்த்து அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்திருந்தது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் அமலாக்கத்துறை சம்மனை உறுதி செய்தது.
அதன் தொடர்ச்சியாக செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை மற்றும் அமலாக்கத்துறை சோதனைகள் அடுத்தடுத்து நடைபெற்றது. அமலாக்கத்துறை கடந்த ஜூன் 14 ஆம் தேதி சோதனையிட்ட பிறகு செந்தில் பாலாஜியை கைது செய்தது. அப்போது நெஞ்சு வலி ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு இதய அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் அவரது மனைவி மேகலா செந்தில் பாலாஜி கைதை எதிர்த்து ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். இந்த வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை அளித்த நிலையில், 3 வது நீதிபதி, கைது சட்டவிரோதம் இல்லை என தீர்ப்பு வழங்கினார்.
இதனை எதிர்த்து செந்தில் பாலாஜி மனைவி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அமலாக்கத்துறையும் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. இரு தரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் போபண்ணா, சுந்தரேஷ் அடங்கிய அமர்வு நேற்று தீர்ப்பை வழங்கியது.

செந்தில் பாலாஜி தரப்பின் மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம், அமலாக்கத் துறை செந்தில் பாலாஜியை கைது செய்தது சட்டப்படி சரி என்றும், அமலாக்கத் துறை ஒருவரை கைது செய்யும் போது அந்த நபரை காவலில் வைக்கலாம் எனகுற்றவியல் நடைமுறை சட்டம் 167 சொல்வதாக தெரிவித்துள்ளது.
ஆகஸ்டு 8 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தனர். இதனை தொடர்ந்து நேற்று புழல் சிறையில் இருந்த செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனுக்கு அழைத்து சென்றார்கள். தாடியுடன் செந்தில் பாலாஜி அழைத்து செல்லப்பட்ட காட்சிகள் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றன. இன்று முதல் அவரிடம் விசாரணையை அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடங்குகிறார்கள்.












Click it and Unblock the Notifications