திண்டுக்கல் ரத்தினம் உள்ளிட்ட மணல் குவாரி அதிபர்களின் சொத்துகளை முடக்கிய அமலாக்கத்துறை.. சிக்கல்!
சென்னை: கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழ்நாடு முழுவதும் மணல் குவாரிகளில் நடந்த அதிரடி சோதனையைத் தொடர்ந்து ரூ.130.60 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்கியுள்ளது அமலாக்கத்துறை.
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மணல் ஒப்பந்ததாரர்கள் பலர் அரசிடம் ஒப்பந்தம் எடுத்து மணல் விற்பனையில் ஈடுபட்டு வந்தனர். இதில் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்து வந்தது. அதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களுக்கு மணல் குவாரி ஒப்பந்ததாரர்களின் வீடுகளில் அமலாக்கத்துறை சார்பில் அதிரடி சோதனை நடைபெற்றது.

மணல் குவாரி அதிபர்களான திண்டுக்கல் ரத்தினம், சண்முக ராமச்சந்திரன், பன்னீர்செல்வம் கரிகாலன் உள்ளிட்ட பல்வேறு நபர்கள் தொடர்புடைய இடங்களிலும், நீர்வளத்துறை அதிகாரிகள் வீடுகளிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில், முக்கியமான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்நிலையில், அரசுக்கு எந்த அளவுக்கு இழப்பீடு ஏற்பட்டுள்ளது என தொடர்ந்து ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு தற்போது, மணல் குவாரி ஒப்பந்ததாரர்களின் 130.60 கோடி சொத்துகளை முடக்கியிருப்பதாக அமலாக்கத்துறை அதிகாரப்பூர்வ தகவல் வெளியிட்டுள்ளது. மணல் குவாரி அதிபர்கள் ராமச்சந்திரன், திண்டுக்கல் ரத்தினம், கரிகாலன் உள்ளிட்டோரின் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள தகவலில், “சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த மணல் குவாரிகளில் பயன்படுத்தப்பட்ட 209 மணல் அள்ளும் கருவிகள் உட்பட ஏறத்தாழ ரூ.128.34 கோடி மதிப்புள்ள அசையும் சொத்துகள் உட்பட சுமார் ரூ.130.60 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது.
மேலும், சட்டவிரோத மணல் குவாரி நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஒப்பந்ததாரர்களான ராமச்சந்திரன், திண்டுக்கல் ரத்தினம், கரிகாலன் உள்ளிட்டவர்களின் ரூ.2.25 கோடி பணம் முதலீடு செய்யப்பட்டிருப்பது பண மோசடி தடுப்புச் சட்டவிதிகளின்படி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications