பால் பாக்கெட்லாம் போகுதே.. இரவு தலைமை செயலகத்திலேயே தங்கும் ED அதிகாரிகள்! அருகே ஸ்டாலின் ஆபிஸ்
சென்னை: தமிழ்நாடு தலைமை செயலகத்தில் செந்தில் பாலாஜி அலுவலகத்தில் சோதனையில் ஈடுபட்டு வரும் அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு பால் பாக்கெட், உணவு பொருட்கள் சென்றுள்ளதால் இரவு விடிய விடிய ரெய்டு நடக்க இருப்பதாக கூறப்படுகிறது.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் அறைக்கு நேற்று மதியம் 1.30 மணியளவில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையிட சென்றனர். முதலில் 3 அதிகாரிகள் மற்றும் 2 இந்தியன் வங்கி அதிகாரிகள் சோதனைக்கு சென்றார்கள். அறைக்கு உள்ளே செந்தில் பாலாஜியின் 2 உதவியாளர்கள் உள்ளனர். துறை சார்ந்த அலுவலர்களும் உள்ளனர்.

தொடர்ச்சியாக இவர்களிடம் விசாரணை நடப்பதாக கூறப்படுகிறது. மாலை 2 அமலாக்கத்துறை அதிகாரிகள் வெளியே வந்த நிலையில், வங்கி அதிகாரிகள் உட்பட 3 பேர் தொடர்ந்து உள்ளே சோதனையிட்டு வருகிறார்கள். அமைச்சர் செந்தில் பாலாஜி அலுவலகத்துக்கு அருகில்தான் முதலமைச்சர் ஸ்டாலினின் அலுவலகமும் உள்ளது.
அருகில் உள்ள அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அலுவலகத்திற்கு மட்டும் துறை சார்ந்த அதிகாரிகள் சென்று வருகிறார்கள். தமிழ்நாடு தலைமைச் செயலக வரலாற்றில் கடந்த 2016 ஆம் ஆண்டு தலைமை செயலாளர் அலுவலகத்தில் சோதனை நடைபெற்றது. தற்போது 8 மணி நேரமாக அமைச்சர் அறையில் சோதனை நடக்கிறது.

செந்தில் பாலாஜி அறையில் இருக்கும் கணினிகளை சோதித்து வருவதாக கூறப்படுகிறது. இது போக்குவரத்துத் துறை ஊழல் வழக்கு தொடர்பாக சோதனையா அல்லது ஐடி நடத்திய சோதனையின் நீட்சியா என்ற கேள்வி எழுந்து உள்ளது. இரவு 9 மணியளவில் சோதனையில் ஈடுபட்டு அதிகாரிகளுக்கான உணவு பொருட்கள் கொண்டு செல்லப்பட்டு உள்ளன.
அதேபோல் அமலாக்கத்துறை அதிகாரிகள் அருந்துவதற்காக பால் பாக்கெட், தேநீர் போன்றவையும் கொண்டு செல்லப்பட்டு உள்ளன. நாளை காலை உணவுக்கு தேவையான உணவுப் பொருட்களையும் தலைமை செயலகத்துக்கு உள்ளே கொண்டு சென்று இருப்பதாக கூறப்படுகிறது.
இதனை வைத்து பார்க்கையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்று வரும் அமலாக்கத்துறை அதிகாரிகளின் சோதனை விடிய விடிய தொடரும் என்று தெரிகிறது. சோதனை நடைபெறும் பகுதிக்கு தமிழ்நாடு காவல்துறையை சேர்ந்தவர்களும் அனுமதிக்கப்படவில்லை. அதேநேரம் தலைமை செயலகத்தை சுற்றி காவல்துறை எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை கடந்த மே மாதம் நடைபெற்றது. இந்த நிலையில் நேற்று காலை முதல் அவருடைய வீடு உட்பட அவருக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெறுகிறது.
மத்திய துணை ராணுவ படையினர் பாதுகாப்புடன் செந்தில் பாலாஜியின் வீட்டுக்கு சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை அடையாறு பசுமை வழிச் சாலையில் இருக்கும் செந்தில் பாலாஜி வீடு, அவரது சகோதரரின் வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். கரூரில் உள்ள செந்தில் பாலாஜியின் வீட்டில் நடைபெற்ற சோதனை இரவு நிறைவடைந்தது.












Click it and Unblock the Notifications