மோடி வரும் அதே நாளில்! அமலாக்கத்துறை ரெய்டு.. ஜாபர் சாதிக் டூ அமீர் டூ புகாரி! நூல் பிடித்து போன ஈடி
சென்னை: சென்னை மயிலாப்பூர் சாந்தோம் பகுதியில் உள்ள ஜாபர் சாதிக் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை செய்து வருகின்றனர். ஜாபர் சாதிக் வழக்கு தொடர்பாக இயக்குநர் அமீர் வீட்டிலும் அமலாக்கத்துறை ரெய்டு நடக்கிறது.
இந்த வழக்கில் சமீபத்தில் அமீர் விசாரணை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. போதைப் பொருள் கடத்தல் வழக்கில் ஏற்கனவே ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கடந்த வாரம்தான் இது தொடர்பான விசாரணைக்காக இயக்குநர் அமீர் டெல்லி என்சிபி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். 11 மணி நேரம் அமீரிடம் தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் நடத்தினர்.

ஜாபர் சாதிக் இப்போது தயாரிக்கும் திரைப்படத்தை இயக்குநர் அமீர் தான் இயக்கி வருகிறார். மேலும், அவருடன் இணைந்து ஹோட்டல் மற்றும் சில தொழில்களையும் செய்து வருவதாகக் கூறப்பட்டது. இதற்கிடையே போதைப்பொருள் கடத்தலில் அமீர் உள்ளிட்ட 3 பேருக்கு என்சிபி அதிகாரிகள் சம்மன் அனுப்பினர். அமீர் உடன் சேர்த்து அப்துல் பாசித் புகாரி, சையது இப்ராஹிம் ஆகிய 3 பேருக்கு டெல்லி என்சிபி அதிகாரிகள் சம்மன் அனுப்பி இருந்தனர்.
அவர்கள் மூன்று பேரும் டெல்லியில் உள்ள போதைப் பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி ஆஜராகச் சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி இன்று இயக்குநர் அமீர் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். சுமார் 11 மணி நேரம் அமீரிடம் தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நடத்திய விசாரணை நிறைவடைந்தது.
இந்த விசாரணைகளில் பெறப்பட்ட தகவல்கள், செய்திகள் அடிப்படையில் நூல் பிடித்து வந்து அமலாக்கத்துறை சோதனை செய்து வருகின்றது.
மோடி வரும் நாளில்: சென்னையில் 30க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தி வருகிறது. ஜாபர் சாதிக் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை செய்து வருகின்றனர். மேலும் பல இடங்களில் சோதனை நடந்து வருகிறது. புகாரி ஹோட்டல் நிறுவனத்திலும் அமலாக்கத்துறை சோதனை நடைபெறுகிறது.
போதை பொருள் மூலம் வந்த பணத்தில் நிதி தொடர்பான முறைகேடுகள் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. பிரச்சாரத்திற்காக பிரதமர் சென்னை வரும் அதே நாளில் அமலாக்கத்துறை ரெய்டு நடக்கிறது.
வழக்கு பின்னணி: போதைப் பொருள் கடத்தல் வழக்கில் ஏற்கனவே ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த ரெய்டு நடந்து வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன் வெளிநாடுகளில் இருந்து வந்த தகவலின் அடிப்படையில் என்சிபி அதிகாரிகள் நடத்திய சோதனையில் டெல்லியில் ரூ 2 ஆயிரம் கோடி மதிப்பிலான போதைப் பொருள்களை அதிகாரிகள் பிடித்தனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பிரபல சினிமா தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் என்பவர் தான் இதன் பின்னணியில் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து டெல்லி போதைப் பொருள் தடுப்பு பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டார். மேற்கு டெல்லியின் கைலாஷ் பார்க் பகுதியில் உள்ள குடோனில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் ரெய்டு நடத்தினர். வெளிநாடுகளில் உள்ள அதிகாரிகள் அளித்த தகவலின்படி நடந்த இந்த ரெய்டில் போதைப் பொருட்கள் தயாரிக்கப் பயன்படும் ரூ 2 ஆயிரம் கோடி மதிப்பிலான 50 கிலோ ரசாயனப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதில்தான் அடுத்தடுத்து கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ரூ.2000 கோடி ரூபாய் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக்கை டெல்லி மத்திய போதைப்பொருள் தடுப்புப்பிரிவு அதிகாரிகள் சென்னை அழைத்து வந்துள்ளனர். ஜாபர் சாதிக்கிடம் மத்திய போதைப் தடுப்பு பிரிவு அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ள நிலையில் அடுத்தடுத்து சிக்கப்போகும் விஐபிக்கள் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications