சென்னையில் கட்டுக் கட்டாக சிக்கிய பணம்.. ஓபிஜி குழுமத்தில் ED நடத்திய ரெய்டில் ரூ.8.38 கோடி பறிமுதல்
சென்னை: சென்னையில் ஓபிஜி குழுமம் தொடர்புடைய பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்திய நிலையில், ரூ.8.38 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் 11, 12 ஆம் தேதிகளில் அதிரடி சோதனை நடத்தியது அமலாக்கத்துறை. இதில் ஓபிஜி குழும அலுவலகம் மற்றும் அதன் இயக்குநர்களின் வீட்டில் இருந்து ரூ.8.38 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
அந்நிய செலாவணி மேலாண்மை சட்டம் (FEMA) மற்றும் அந்நிய நேரடி முதலீட்டு (FDI) விதிமுறைகளை மீறியது தொடர்பாக சென்னை உள்ளிட்ட இடங்களில் தனியார் மின் உற்பத்தி நிறுவனம் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தப்பட்டது.

மகாராஷ்டிரா மாநிலத்தை தலைமையிடமாகக் கொண்டு ஒபிஜி மற்றும் பி விண்ட் எனர்ஜி பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. சோலார் தகடுகள், காற்றாலை மின் உற்பத்திக்கு தேவையான இயந்திரங்களை தயாரித்து வெளி மாநிலங்கள், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது.
இந்நிலையில், இந்த நிறுவனங்களில் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை நடந்திருப்பதாக இந்நிறுவனத்தின் மீது புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து, மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அந்நிறுவனத்தின் தலைமை அலுவலகம், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், உள்ளிட்ட இடங்களில் உள்ள அந்நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 11 மற்றும் 12 ஆம் தேதிகளில் ரெய்டு நடத்தினர்.

சென்னை கீழ்ப்பாக்கம் பர்னபி சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு, ராஜா அண்ணாமலைபுரம் பிஷப் கார்டன் பகுதியில் உள்ள ஒரு வீடு, தேனாம்பேட்டை கே.பி. தாஸ் சாலையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு, சைதாப்பேட்டை சின்னமலை எல்டிஜி சாலையில் உள்ள தனியார் நிறுவனம், செங்கல்பட்டில் காற்றாலை மின்சாரம் தயாரிக்கும் தொழிற்சாலை, திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள காயலார்மேடு பகுதியில் அனல் மின் நிலையம் உள்ளிட்ட இடங்களில் 50-க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
சென்னை உட்பட தமிழகத்தில் அந்த தனியார் விண்ட் எனர்ஜி நிறுவனம் செயல்படும் அனைத்து இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. இதில் கைப்பற்றப்பட்ட ரொக்கப் பணம் பற்றிய தகவலை அமலாக்கத்துறை இன்று வெளியிட்டுள்ளது. ஓ.பி.ஜி குழுமத்தின் அலுவலக வளாகங்கள் மற்றும் அதன் இயக்குநர்களின் குடியிருப்பு வளாகங்கள் இரண்டிலிருந்தும் சுமார் 8.38 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications