ஜாபர் சாதிக் வீடு, அலுவலக ரெய்டில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல்! அமலாக்கத் துறை அறிவிப்பு
சென்னை: போதை பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக்கின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின் போது முக்கிய ஆவணங்களும் சொத்து விவரங்கள் அடங்கிய கோப்புகளும் கைப்பற்றப்பட்டதாக அமலாக்கத் துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து அமலாக்கத் துறை வெளியிட்ட எக்ஸ் வலைதள பதிவில் கூறியிருப்பதாவது: கடந்த 2002 ஆம் ஆண்டு அமலான சட்டவிரோத பணபரிவர்த்தனை சட்டத்தின் கீழ், ஜாபர் சாதிக் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களுக்குச் சொந்தமான சென்னை, திருச்சி, மதுரை ஆகிய மாவட்டங்களில் உள்ள வீடுகள், நிறுவனங்களில் சென்னை அமலாக்கத் துறை அதிகாரிகள் ஏப்ரல் 9ஆம் தேதி சோதனை நடத்தினர்.

அப்போது அவருக்கு எதிரான முக்கிய ஆவணங்களும் சொத்து விவரங்களும் கைப்பற்றப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இவ்வாறு அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.
டெல்லியில் உணவு பொருள் டெலிவரி என்ற பெயரில் ரூ 2000 கோடி மதிப்பிலான போதை பொருள்களை டெல்லி போதை பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் பறிமுதல் செய்து அதை கொண்டு வந்த சிலரை கைது செய்தனர். அப்போது அவர்களிடம் விசாரணை நடத்தியதில் அந்த பொருள் ஜாபர் சாதிக்கிற்கு சொந்தமானது என தெரியவந்தது.
உணவு டெலிவரி என்ற பெயரில் நியூசிலாந்து உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு போதை பொருளை அவர் கடத்துவதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து ஜாபர் சாதிக்கை என்சிபி அதிகாரிகள் தேடி வந்த நிலையில் அவர் ராஜஸ்தான் மாநிலத்தில் பதுங்கியிருந்த போது பிடிபட்டார்.

இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இயக்குநர் அமீர், பாசித் புகாரின் பெயர்களை வாக்குமூலமாக ஜாபர் சாதிக் தெரிவித்திருந்தாராம். இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி அமலாக்கத் துறையினர் ஜாபர் சாதிக் வீடு, அலுவலகம், இயக்குநர் அமீரின் வீடு அலுவலகம், பாசித் புகாரியின் வீடு, அலுவலகம் என சென்னையில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டது. இந்த நிலையில்தான் ஜாபர் சாதிக் உள்ளிட்டோரின் வீடுகளில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications