‛‛அமலாக்கத்துறையிடம் ஆஜரான ஜாபர் சாதிக்கின் சகோதரர்’’.. ரூ.2000 கோடி தொடர்பாக தீவிர விசாரணை
சென்னை: வெளிநாடுகளுக்கு ரூ.2000 கோடிக்கு போதைப்பொருள் கடத்திய வழக்கில் திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக அமலாக்கத்துறையினர் நேற்று ஜாபர் சாதிக்கின் மனைவிடம் விசாரித்தனர். இதையடுத்து இன்று ஜாபர் சாதிக்கின் சகோதரர் முகமது சலீம் அமலாக்கத்துறை முன்பு ஆஜரானார். அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சென்னை சாந்தோம் பகுதியை சேர்ந்தவர் ஜாபர் சாதிக். சினிமா தயாரிப்பாளர். இவர் உணவு பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தொழிலையும் செய்து வந்தார். இதற்காக அவர் டெல்லி கைலாஷ் பார்க் பகுதியில் குடோன் அமைத்திருந்தார். அங்கிருந்து அவர் பல்வேறு வெளிநாடுகளுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்து வந்தார்.

மேலும் ஜாபர் சாதிக் திமுகவில் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளராகவும் செயல்பட்டார். இதற்கிடையே தான் கடந்த பிப்ரவரி மாதம் டெல்லி கைலாஷ் பார்க் குடோனில் போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அங்கிருந்து வெளிநாடுகளுக்கு போதைப்பொருள் ஏற்றுமதி செய்யப்படுவது தெரியவந்தது. போதைப் பொருள் தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலபொருளான சூடோபெட்ரின் தான் ஏற்றுமதியாவது தெரியவந்தது. இதையடுத்து சென்னையை சேர்ந்த முகேஷ், முஜிபுர், விழுப்புரம் அசோக் குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக இருந்த ஜாபர் சாதிக் ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார். அதன்பிறகு இன்னொரு கூட்டாளியான சதானந்தம் கைது செய்யப்பட்டார்.
ஆமா.. ‛போதைப்பொருள் கடத்தினேன்’ குற்றத்தை ஒப்புக்கொண்ட ஜாபர் சாதிக்! குற்றப்பத்திரிகையில் திடுக்
இதையடுத்து ஜாபர் சாதிக் திமுகவில் இருந்து நீக்கப்பட்டார். ஜாபர் சாதிக்கை போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவினர் காவலில் எடுத்து தீவிரமாக விசாரித்தனர். மேலும் அவருக்கு நெருக்கமானவர்களுக்கு சம்மன் அனுப்பி தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில் திரைப்பட இயக்குநர் அமீரும் ஒருவர். தற்போது ஜாபர் சாதிக் மீது சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஜாபர் சாதிக் வழக்கை போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு மட்டுமின்றி அமலாக்கத்துறையும் விசாரித்து வருகிறது. அதாவது போதைப்பொருள் கடத்தலில் சம்பாதித்த பணம் சட்டவிரோதமான முறையில் பரிமாற்றம் செய்யப்பட்டது தொடர்பாக அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. ஏற்கனவே ஜாபர் சாதிக்கிடம் அமலாக்கத்துறை விசாரித்துள்ளது.
இயக்குநர் அமீர் + ஜாபர் சாதிக் .. இருவருக்கும் பழக்கமானது எப்படி? குற்றப்பத்திரிகையில் முக்கிய தகவல்
இதையடுத்து ஜாபர் சாதிக்கின் குடும்பத்தின் பக்கம் அமலாக்கத்துறையின் கவனம் திரும்பி உள்ளது. அந்த வகையில் நேற்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் வைத்து ஜாபர்சாதிக் மனைவி அமீனாவிடம் 6 மணிநேரம் வரை அமலாக்கத்றை அதிகாரிகள் விசாரித்தனர். இந்த விசாரணை முடிவடைந்த நிலையில் தான் ஜாபர் சாதிக்கின் சகோதரர் முகமது சலீமிடம் இன்று விசாரணை தொடங்கி உள்ளது.
அதாவது முகமது சலீம் விசாரணை ஆஜராக வேண்டி அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது. அதில் இன்று காலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து முகமது சலீம் இன்று அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் அமலாக்கத்துறையினர் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
ஜாபர் சாதிக்கின் சகோதரரான முகமது சலீம் திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் செயல்பட்டு வந்தார். ஜாபர் சாதிக் போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட நிலையில் முகமது சலீமை விடுதலை சிறுத்தைகள் கட்சி அதிரடியாக நீக்கியது. இந்நிலையில் தான் முகமது சலீமை இன்று விசாரணைக்கு ஆஜராகக்கோரி அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications