அமலாக்கத்துறையின் அடுத்த “அஸ்திரம்”.. செந்தில் பாலாஜி இதயத்தில் என்ன பிரச்னை? தனி மருத்துவ குழு ரெடி
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி நெஞ்சு வலி காரணமாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், அமலாக்கத்துறை மருத்துவக் குழுவை அமைத்து உள்ளது.
தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நள்ளிரவு அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு இருக்கிறார். நேற்று காலை முதல் அவரது வீடுகள், தலைமை செயலகத்தில் உள்ள அவரது அறை, சகோதரர் வீடு, நண்பர்கள், நெருக்கமானவர்களின் இடங்களில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது.

சோதனையின் முடிவில் அவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்து காரில் அழைத்து சென்றபோது நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறி அவர், படுத்துக்கொண்டு அழுதார். இதனை தொடர்ந்து அவர் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
அதிகாலை அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஈசிஜி முடிவில் மாறுதல் இருப்பதை கண்டறிந்தனர். அதனை தொடர்ந்து ரத்த நாளங்களில் அடைப்பு உள்ளதா என்பதை கண்டறிய ஆஞ்சியோகிராம் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. அந்த சோதனையின் முடிவை ஓமந்தூரார் மருத்துவமனை அறிக்கை மூலம் விளக்கியது.
அதில், "மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு.செந்தில் பாலாஜி, வயது 47, அவர்களுக்கு இருதய இரத்த நாள பரிசோதனை 14.06.2023 அன்று காலை 10.40 மணியளவில் செய்யப்பட்டது. அப்பரிசோதனையில் மூன்று முக்கியமான இரத்த குழாய்களில் அடைப்பு உள்ளது கண்டறியப்பட்டது. அதற்கு விரைவில் பை பாஸ் அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைக்கப்படுகிறது." என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், அவரை 28 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மாவட்ட முதன்மை நீதிபதி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து இடைக்கால ஜாமின் கோரி செந்தில் பாலாஜி தரப்பு தொடர்ந்த வழக்கு விசாரணையில் வாதிட்ட அமலாக்கத்துறை, நேற்று ஆரோக்கியமாக இருந்த செந்தில் பாலாஜி, இன்று திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக கூறுகிறார்.
உடனே செந்தில் பாலாஜிக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். அதற்கு அவசியம் இல்லை என்றே நாங்கள் கூறுகிறோம். செந்தில் பாலாஜி உடல்நிலையை கண்காணிக்க சுதந்திரமான மருத்துவக் குழுவை அமைக்க வேண்டும். மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவமனைக்கு செந்தில் பாலாஜியை மாற்றக்கூடாது." என்று தெரிவித்தது.
இந்த நிலையில் அமலாக்கத்துறை தனியாக மருத்துவக் குழு ஒன்றை அமைத்து இருக்கிறது. சென்னையை சேர்ந்த 5 மருத்துவர்களை கொண்ட குழுவை அமைத்து செந்தில் பாலாஜியின் உடல்நிலையை கண்காணிக்க அமலாக்கத்துறை நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications