டேக் டைவர்ஷன் மக்களே.. சென்னை போக்குவரத்தில் இன்று மாற்றம்! காவல்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
சென்னை: சென்னையில் இன்று பிரபல பாடகர் எட் ஷீரனின் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதை அடுத்து தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை உள்ளிட்ட சென்னையின் முக்கிய பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர போக்குவரத்துக் காவல் துறை அறிவித்துள்ளது.
இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல பாடகரும் இசையமைப்பாளருமான எட் ஷீரன் 11 வயதில் இருந்தே இசை துறையில் ஈடுபட்டுள்ளார். அவரது முதல் ஆல்பமான 'பிளஸ்' 2011 ஆம் ஆண்டு வெளியானது. அதற்குப் பிறகு பல ஆல்பங்களை வெளியிட்டுள்ள எட் ஷீரனுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கின்றன.

தொடர்ந்து வெளியான மல்டிபிள், டிவைட் ஆகிய அவரது ஆல்பங்கள் பிரம்மாண்ட வெற்றி பெற்றன. அதனை தொடர்ந்து அவர் உலகம் முழுவதும் பயணித்து இசை நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார். கடந்த மார்ச் மாதம் மும்பையில் நடைபெற்ற அவரது இசை நிகழ்ச்சி மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.
அதில் ஷாருக்கான் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே புனே, ஹைதராபாத் ஆகிய பகுதிகளில் இசை நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில், இன்று சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. தொடர்ந்து பிப்ரவரி 8ஆம் தேதி பெங்களூருவிலும், 12ஆம் தேதி ஷில்லங்கிலும், 14 ஆம் தேதி டெல்லியிலும் இசை நிகழ்ச்சி நடக்க உள்ளது.
சென்னையில் இன்று நடைபெறும் நிகழ்ச்சிக்காக ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் டிக்கெட் புக் செய்துள்ளனர். இந்நிலையில், எட் ஷீரனின் இசை நிகழ்ச்சியையொட்டி தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை உள்ளிட்ட சென்னையின் முக்கிய பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர போக்குவரத்துக் காவல் துறை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில்," சர்வதேச பாடகர் எட் ஷீரனின் 2025 இந்திய சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக, 05.02.2025 அன்று நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 15.00 மணி முதல் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
சென்னையில் எட் ஷீரன்.. களைகட்டப்போகும் இசை நிகழ்ச்சி.. டிக்கெட் ரேட் இவ்வளவா?
நிகழ்ச்சிக்கு ஏராளமான பார்வையாளர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்வின் காரணமாக பின்வரும் போக்குவரத்து மாற்றங்கள் செய்ய உத்தோசிக்கப்பட்டுள்ளன. மேற்படி நிகழ்ச்சிக்கு தேனம்பேட்டை வழியாக பார்வையாளர்களை ஏற்றி வரும் ஆட்டோரிக்ஷா மற்றும் வாடகை வாகனங்கள் (மஞ்சள் பலகை வாகனங்கள்) செனடாப் சாலை/ காந்தி மண்டபம் சாலை, சேமியர்ஸ் ரோடு, லோட்டஸ் காலனி 2வது தெரு (நந்தனம் எக்ஸ்டன்) வழியாக மட்டுமே நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை அடையலாம்.
சைதாப்பேட்டையிலிருந்து வரும் வாகனங்கள் நந்தனம் சந்திப்பு வலதுப்பக்கம் வழியாகச் சென்று சேமியர்ஸ் சாலையில் "யு" டேர்ன் செய்து லோட்டஸ் காலனி வழியாக இலக்கை அடையலாம். அண்ணாசாலையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ பிரதான மற்றும் காஸ்மோபாலிட்டன் நுழைவாயிலில் விவிஐபி பாஸ் மற்றும் திரை கலைஞர்கள் வாகனங்கள் வைத்திருப்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
இந்நிகழ்ச்சிக்கு வரும் பார்வையாளர்கள் மெட்ரோ இரயில், மாநகர போக்குவரத்து பேருந்து மற்றும் மின்சார இரயில் போன்ற பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துமாறும் மற்றும் நடைபாதையை பயன்படுத்தி நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" என கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications