குட்கா வழக்கு.. காவல் துறை முன்னாள் டிஜிபி ராஜேந்திரனுக்கு அமலாக்கத் துறை சம்மன்
சென்னை: குட்கா முறைகேடு வழக்கில் காவல் துறை முன்னாள் டிஜிபி ராஜேந்திரனுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது.
கடந்த 2013-ஆம் ஆண்டு தமிழகம் முழுவதும் குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை விற்க ஜெயலலிதா அரசு தடை விதித்தது. இதனிடையே மதுரவாயலில் ஒரு குடோனில் கடந்த 2016-ஆம் ஆண்டு வருமான வரித் துறையினர் நடத்திய சோதனையில் அங்கு தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அப்போது ஒரு டைரி கைப்பற்றப்பட்டது. அதில் குட்காவை மீண்டும் விற்பனை செய்ய அமைச்சர்கள், மூத்த காவல் துறை அதிகாரிகள், முக்கிய புள்ளிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக குட்கா வியாபாரி மாதவராவ் எழுதியிருந்தார்.
இந்த ஊழல் தொடர்பாக தலைமை செயலாளருக்கு வருமான வரித் துறையினர் கடிதம் 2016-ஆம் ஆண்டு எழுதியிருந்தது. எனினும் அதிமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் உயர்நீதிமன்றம் உத்தரவை அடுத்து இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. குட்கா விற்பனை மூலம் ரூ 639 கோடிக்கு சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடந்ததாக அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.
காவல் துறை டிஜிபியாக இருந்த ராஜேந்திரன், முன்னாள் கமிஷனர் ஜார்ஜ், அமைச்சர் சி விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் பிவி ரமணா ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்ட குட்கா முறைகேடு வழக்கில் சிபிஐ தரப்பில் ஏற்கெனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஓய்வு பெற்ற டிஜிபி ராஜேந்திரன் மற்றும் கூடுதல் ஆணையர் தினகரன் ஆகிய இருவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. டிசம்பர் 2-ஆம் தேதி டிகே ராஜேந்திரனும் டிசம்பர் 3-ஆம் தேதி தினகரனும் ஆஜராகும்படி சம்மன் பிறப்பிக்கப்பட்டுள்ளது. குட்கா வழக்கில் உரிமையாளர்கள் மற்றும் பங்குதாரர்களின் ரூ 246 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications