"டாஸ்மாக் ஊழல் விசாரணையை சீர்குலைக்க முயற்சி.." தமிழக அரசுக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் ED பதில்

Subscribe to Oneindia Tamil

சென்னை: டாஸ்மாக் அலுவலகத்தில் கடந்த மாதம் நடந்த அமலாக்கத் துறையின் சோதனையை எதிர்த்து டாஸ்மாக் நிறுவனம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், அமலாக்கத் துறையின் சட்டப்பூர்வமான விசாரணையைச் சீர்குலைக்கும் வகையில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என அமலாக்கத் துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் அமலாக்கத் துறை அதிகாரிகள் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் சோதனை நடத்தியிருந்தனர். 3 நாட்கள் நடந்த இந்த சோதனைக்குப் பிறகு டாஸ்மாக் நிறுவனத்துக்கு மதுபானங்கள் கொள்முதல் செய்தது, பார் உரிமம் வழங்கியது உள்ளிட்ட பல விஷயங்களில் 1000 கோடி ரூபாய்க்கு முறைகேடு நடந்துள்ளதாக அறிவிக்கை வெளியிடப்பட்டது.

Tasmac ED Chennai high court

சென்னை ஐகோர்ட்டில் வழக்கு

இருப்பினும், இந்த சோதனையை எதிர்த்து டாஸ்மாக் நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அரசியலமைப்பு சட்டத்தின் கூட்டாட்சி கட்டமைப்புக்கு விரோதமானது என அறிவிக்கக் கோரியும், விசாரணை என்ற பெயரில் டாஸ்மாக் அதிகாரிகளைத் துன்புறுத்தக் கூடாது என உத்தரவிடக் கோரியும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

அமலாக்கத் துறை பதில்

இந்த வழக்கை முதலில் விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் என்.செந்தில் குமார் ஆகியோர் வழக்கு விசாரணையில் இருந்து விலகுவதாக அறிவித்தனர். இதையடுத்து இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம் சுப்ரமணியன், ராஜசேகர் அமர்வுக்கு மாற்றப்பட்டது. இதற்கிடையே இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், இதில் அமலாக்கத் துறை பதில் மனு தாக்கல் செய்திருந்தது.

அந்த பதில் மனுவில், அமலாக்கத் துறையின் சட்டப்பூர்வமான விசாரணையைச் சீர்குலைக்கும் வகையில், முன்கூட்டியே தமிழக அரசு தாக்கல் செய்துள்ள வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சோதனை நடத்துவதற்கான வாரண்டை காட்டி, வலுக்கட்டாயமாகக் கையெழுத்து பெற்றதாகத் தமிழக அரசு கூறிய குற்றச்சாட்டை மறுத்த அமலாக்கத் துறை, சோதனைக்காக வாரண்டை சமர்ப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை எனத் தெரிவித்துள்ளது.

புகாரின் அடிப்படையிலேயே சோதனை

சோதனைக்கு எதிராக அமலாக்கத் துறையிடம் முறையிடும் மாற்று வாய்ப்பு உள்ள போதும், அதை அணுகி நிவாரணம் கோராமல் நேரடியாக உயர் நீதிமன்றத்தை நாடியது தவறு எனவும் கூறப்பட்டுள்ளது. டாஸ்மாக்கில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை பதிவு செய்த வழக்குகளின் அடிப்படையில் மட்டுமே சோதனை நடத்தியதாகவும், அந்த ஆதாரங்களும் இல்லாமல் சோதனை நடத்தவில்லை எனவும் அமலாக்கத் துறை சுட்டிக்காட்டியுள்ளது.

சோதனையின் போது அதிகாரிகள் உணவருந்த, ஓய்வெடுக்க அனுமதி வழங்கிய பிறகே வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டதாகவும், டாஸ்மாக் அதிகாரிகளின் சுதந்திரத்தை மீறியதாக டாஸ்மாக் நிர்வாகம் வழக்கு தொடர முடியாது, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தான் வழக்கு தொடர முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது. பெண் அதிகாரிகள் பாதுகாப்பான முறையில் தான் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும், ஆதாரங்களைச் சேகரிக்க மட்டுமே அதிகாரிகளின் மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும்

சட்டப்பூர்வமான சோதனையை முடக்கும் நோக்கில், சட்டவிரோதமாகச் சிறை பிடித்ததாகவும், துன்புறுத்தியதாகவும் குற்றச்சாட்டுகளைக் கூறி தமிழக அரசு தாக்கல் செய்துள்ள இந்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என அமலாக்கத் துறை கோரியுள்ளது. அமலாக்கத் துறையின் மனுவுக்குப் பதில் அளிக்கத் தமிழக அரசுக்கு அனுமதி அளித்து, வழக்கு விசாரணை ஏப்ரல் 8ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+