தொண்டர்களை சந்திக்க அச்சம்.. பயந்து நடுங்குகிறார் எடப்பாடி பழனிசாமி.. எச்சரிக்கும் மருது அழகுராஜ்!
சென்னை: அதிமுக கட்சித் தொண்டர்களின் முகத்தை பார்க்க எடப்பாடி பழனிசமி பயந்து நடுங்குகிறார் என்று ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ் விமர்சித்துள்ளார்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்ந்து பரபரப்பிலேயே இருக்கிறது. இருதரப்பும் நீதிமன்றத்தில் வாதங்களை வைத்து வரும் நிலையில், தொண்டர்களை சந்திக்கவும் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பில் தீவிர ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இபிஎஸ் சுற்றுப்பயணம்
அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமி, மாவட்டம் தோறும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இதுவரை சேலம், திண்டுக்கல் என 5 மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள எடப்பாடி பழனிசாமி, சுதந்திர தினத்துக்கு பின் தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார்.

போலீஸ் பாதுகாப்பு
தென் மாவட்டங்களில் சுற்றுப் பயணத்திற்கான ஏற்பாடுகளைச் செய்யும்படி தனது ஆதரவாளர்களுக்கு ஈபிஎஸ் அறிவுறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், முன்னாள் முதலமைச்சரான அவருக்கு சுற்றுப்பயணத்தின்போது போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரி சேலத்தை சேர்ந்த அ.தி.மு.க வழக்கறிஞர் பிரிவு நிர்வாகி ஏ.பி.மணிகண்டன், சென்னை டி.ஜி.பி அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளார்.

மனுவில் என்ன?
அவர் அளித்துள்ள மனுவில், "அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட நபர்கள் மற்றும் ஏனைய சமூக விரோதிகளால் எடப்பாடி பழனிசாமி உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது. சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருக்கு போதுமான போலீஸ் பாதுகாப்பை தமிழக அரசு இதுவரை வழங்கவில்லை. எனவே அவருடைய பாதுகாப்பை அதிகரித்து உரிய உச்சபட்ச போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருது அழகுராஜ் சீண்டல்
தென் மாவட்டங்களில் பயணம் மேற்கொள்ளும்போது ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பிரச்சினைகள் வரக் கூடும் என்பதால், காவல்துறை பாதுகாப்பை அதிகரிக்க மனு வழங்கப்பட்டுள்ளதாகவே பார்க்கப்படுகிறது. இதுகுறித்து ஓபிஎஸ் ஆதரவாளரும், நமது அம்மா நாளிதழின் முன்னாள் ஆசிரியருமான மருது அழகுராஜ், தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்ய எடப்பாடி பழனிசாமி தரப்பு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு கேட்டுள்ளது .

விஷப் பரீட்சை
அச்சத்தோடும், பயத்தோடும் கட்சித் தொண்டர்களின் முகத்தில் விழிப்பதற்கே பழனிசமி பயந்து நடுங்குகிறார். தொண்டர்கள் முதல் மக்கள் வரை தன் மீது கோபத்தில் உள்ளதை பழனிசாமி தரப்பு ஒப்புக்கொண்டதையே காட்டுகிறது. சுற்றுப்பயணம் என்ற பெயரில் எடப்பாடி பழனிசாமி விஷப் பரீட்சையில் இறங்காமல் இருப்பதே நல்லது என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications