வெற்றிடமில்லை..அதிமுகவை உடைக்க நினைத்தவர்களின் கனவு நொறுங்கியது..எகிறி அடித்த எடப்பாடி பழனிச்சாமி
சென்னை: அதிமுகவில் வெற்றிடம் என்பதே இல்லை என்று பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். திமுகவின் பி டீம் ஆக செயல்பட்டு அதிமுகவை உடைக்க வேண்டும் முடக்க வேண்டும் என்று நினைத்த பலரது கனவு நொறுங்கி விட்டது என்றும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது. கூட்டத்தில் ஆகஸ்ட் மாதம் மதுரையில் நடைபெற உள்ள மாநாட்டின் இலட்சினையை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டார்.

2024ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலுக்கு எடப்பாடி பழனிசாமி அணியினர் தயாராகி வருகிறார்கள். எடப்பாடி தலைமையிலான அதிமுக கூட்டணியில்தான் பாஜ கட்சி உள்ளதாக டெல்லி மேலிட தலைவர்கள் கூறி வருகிறார்கள். ஆனால் தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை அதிமுகவையும், ஜெயலலிதாவையும் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இதனால் கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டு வருகிறது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
ஆகஸ்ட் 20ஆம் தேதியன்று மதுரையில் நடைபெற உள்ள அதிமுக மாநாட்டுக்கான இலச்சினையை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். அப்போது பேசிய எடப்பாடி பழனிச்சாமி, தமிழ்நாட்டிலேயே அதிக தொண்டர்களை கொண்ட கட்சி அதிமுகதான் என்று கூறினார். கடந்த ஒன்றரை ஆண்டு காலத்தில் 1.60 கோடி தொண்டர்களை சேர்த்துள்ளோம்.
அதிமுக பல்வேறு பிரிவுகளாக உடைந்து உள்ளதாக பலரும் விமர்சனம் செய்தனர். அப்படி நினைத்தவர்களின் கனவுதான் உடைந்து நொறுங்கி விட்டது என்று கூறினார். திமுகவின் பி டீம் ஆக செயல்பட்டவர்களின் கனவு நொறுங்கி விட்டது என்றும் எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.
மதுரையில் ஆகஸ்ட் 20ஆம் தேதி மாநாடு நடைபெற உள்ளது. வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு என்று பெயரிடப்பட்டுள்ளது.
மதுரையில் நடைபெறும் அதிமுக மாநாடு நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்கு அடித்தளமாக அமையும் என்று கூறினார்.
தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய காவிரி நீரை முதல்வர் கேட்டு பெறதாது ஏன்? உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு ஏன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.
பத்தாண்டு காலம் பொற்கால ஆட்சி நடத்தினோம். அதிமுக ஆட்சி காலத்தில் மருத்துவத்துறை சிறப்பாக இருந்தது. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் முதலிடம் பெற்றிருந்தோம். கொரோனா காலத்தில் சிறப்பாக செயல்பட்டு மக்களின் உயிரை காப்பாற்றினோம் என்றும் எடப்பாடி பழனிச்சாமி கூறினார். அதிமுக ஆட்சி காலத்தில் 11 மருத்துவ கல்லூரிகள் கொண்டு வரப்பட்டது. திமுக ஆட்சி காலத்தில் 3 மருத்துவ கல்லூரிகள் மூடப்பட்டது என்றும் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டினார்.
கூட்டணி பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு தேர்தலுக்கு ஓராண்டு இருக்கிறது காலம் கணிந்து வரும் போது கூட்டணி பற்றி அறிவிப்போம் என்றும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications