பல்லடம் பயங்கரம்.. 4 பேரை கொன்னுட்டாங்களே! தமிழ்நாடு கொலை மாநிலமா போச்சு - ஸ்டாலினை சாடிய எடப்பாடி
சென்னை: பல்லடம் அருகே மது போதை தகராறு செய்தவர்களை தட்டிக்கேட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் வெட்டிக்கொலை செய்யப்பட்டு இருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்து உள்ளது.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டு உள்ள அவர், "திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கள்ளக்கிணறு பகுதியில் வீட்டின் முன் மது அருந்தியவர்களை தட்டி கேட்டதற்காக மோகன்ராஜ் என்பவரையும், அவரது தாயார் சகோதரர் மற்றும் சித்தி என நான்கு பேரை குடும்பத்துடன், போதை கும்பல் கொடூரமாக வெட்டி படுகொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த விடியா அரசு பதவியேற்றதிலிருந்து நாள்தோறும் நம் மாநிலம் கொலை கொள்ளை என கொலை மாநிலமாகவும், சட்ட ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்த தமிழகமாகவும், போதை பொருட்களின் தலைநகரமாகவும் திகழ்ந்து கொண்டிருக்கிறது. இதனை சரி செய்ய வேண்டிய இடத்தில் உள்ள முதலமைச்சரோ வெற்று விளம்பரத்தில் மட்டும் தனது முழு கவனத்தையும் செலுத்தி கொண்டிருப்பது வெட்கக்கேடானது.
காவல் துறையை கையில் வைத்துக்கொண்டு மக்களைக் காப்பாற்ற துப்பு இல்லாமல், நிர்வாக திறனற்ற பொம்மை முதலமைச்சருக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இனியாவது காவல் துறையை தனது ஏவல் துறையாக மட்டும் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு, காவல் துறைக்கு முழு சுதந்திரம் வழங்கி, சட்ட ஒழுங்கை நிலைநிறுத்த வேண்டுமென்று விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

மேலும் இந்த கொடூர குற்றத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை விரைவாகக் கண்டுபிடித்து, அவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த விடியா அரசை வலியுறுத்துவதோடு, உயிரிழந்த மோகன்ராஜ் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் , வருத்தங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்." என்று குறிப்பிட்டு உள்ளார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்து அமைந்து உள்ளது கள்ளக்கிணறு கிராமம். இப்பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது வீட்டிற்கு அருகே அவருக்கு சொந்தமான நிலத்தில் 4 பேர் மது அருந்தியுள்ளார்கள். இதனை செந்தில் குமாரும் அவரது குடும்பத்தினரும் தட்டிக் கேட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த கும்பல் செந்தில்குமாரையும், அவரது குடும்பத்தைச் சேர்ந்த இரு பெண்கள் உள்ளிட்டோர் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர்.












Click it and Unblock the Notifications