ஓப்பனிங் பேட்ஸ்மேன்.. எம்ஜிஆர் பாயிண்ட்.. ஓபிஎஸ் பிடித்த பிடி! எடப்பாடிக்கு எதிராக திரும்பிய வழக்கு?
சென்னை: அதிமுக பொதுக்குழு வழக்கில் எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம் இருவரும் இன்னும் வாதம் வைத்து முடிக்கவில்லை. ஓ பன்னீர்செல்வம் தனது வாதத்தை பாதி மட்டுமே முடித்து உள்ள நிலையில், மீதம் உள்ள வாதத்தை செவ்வாய் கிழமை வைப்பார்.
இன்று ஓ பன்னீர்செல்வம் தனது வாதத்தில் பல முக்கிய பாயிண்டுகளை சொன்னார். இன்னொரு பக்கம் எடப்பாடி தனது வாதத்தை 3 நாட்கள் இடைவெளிக்கு பின் செவ்வாய் கிழமை வாதம் வைப்பார். அதிமுக பொதுக்குழு ஜூலை 11ம் தேதி கூடியது. ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழுவில் அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டார். இந்த பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் நீக்கப்பட்டன.
இதை எதிர்த்து ஓ பன்னீர்செல்வம் மற்றும் ஓ பன்னீர்செல்வம் ஆதரவாளர் வைரமுத்து ஆகியோர் வழக்கு தொடுத்தனர். உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கின் 3ம் நாள் தொடர் விசாரணை இன்று நடந்தது.

உணவு இடைவேளை
நேற்று அலுவல் நேரத்தை தாண்டி அரை மணி நேரம் விசாரணை நடந்தது. இன்று 12 மணிக்கு விசாரணை தொடங்கியது. இன்று உணவு இடைவேளை 1 மணிக்கு விட வேண்டும். ஆனால் இன்று நீதிபதிகள் உணவு இடைவேளை விடப்படவில்லை. மாறாக உணவு இடைவேளைக்கு செல்லாமலே நீதிபதிகள் வழக்கை விசாரணை செய்து வருகின்றனர். முதல் நாளில் மனுதாரர்கள் தரப்பு சொன்ன நேரத்தை விட கொஞ்சம் கூடுதல் நேரம் வாதம் வைத்தனர். முக்கியமாக ஓபிஎஸ் ஆதரவாளர் வைரமுத்துதான் இதில் முதலில் மேல்முறையீடு செய்தவர் என்பதால் அவர் நீண்ட நேரம் வாதம் வைத்தார்.

வழக்கு
அவரே நேற்று முதல்நாள் வாதத்தில், நான்தான் ஓப்பனிங் பேட்ஸ்மேன் என்பதால் வழக்கின் அனைத்து விவரங்களையும் வைத்து விடுகிறேன் என்று கூறினார். அதை நீதிபதிகள் இருவரும் ஏற்றுக்கொண்டனர். இதையடுத்து கடந்த ஒன்றரை நாட்களாக வைரமுத்து தரப்பு வழக்கறிஞர் ரஞ்சித் குமார் வாதம் வைத்தார். அதிமுக பொதுக்குழு, விதிகள், கட்சியில் உள்ள பொறுப்புகள் பெயர்கள், அதன் விளக்கங்கள் என்று பலவற்றையும் அவரே விளக்கினார். அவரின் வாதங்கள் சற்று முன்தான் நிறைவு பெற்றது. இந்த நிலையில் ஓ பன்னீர்செல்வம் தரப்பு தற்போது வாதம் வைக்கிறது.

ஓ பன்னீர்செல்வம்
ஓ பன்னீர்செல்வம் தரப்பும், வைரமுத்து தரப்பும் ஒரே கோரிக்கைகளை வைக்கிறது. இதனால் வழக்கில் ஓ பன்னீர்செல்வம் வைரமுத்து தரப்பு வைத்த அதே வாதங்களை வைக்க கூடாது என்று உச்ச நீதிமன்றம் கூறியது. இதை ஓ பன்னீர்செல்வம் தரப்பு ஏற்றுக்கொண்டது. இதையடுத்து ஓ பன்னீர்செல்வம் தரப்பு வைத்த வாதத்தில், அதிமுக பொதுக்குழு சட்டப்படி கூடவில்லை. பொதுக்குழுவில் விதிகள் மீறப்பட்டு உள்ளன. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் மட்டுமே பொதுக்குழுவை கூட்ட முடியும். ஜூன் 23ம் தேதி பொதுக்குழுவில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

பொதுக்குழு
பின்னர் ஜூலை 11ம் தேதி பொதுக்குழுவை சட்டப்படி கூட்டப்படவில்லை. கட்சியில் தொண்டர்களுக்கே அதிக உரிமை உள்ளது. திமுகவிலிருந்து பொதுகுழு உறுப்பினர்களால் வெளியேற்றப்பட்டதால் தான் எம்ஜிஆர் அதிமுக என்ற தனிக்கட்சியை ஆரம்பித்தார். அப்போதே பொதுக்குழு உறுப்பினர்கள் மட்டுமே முடிவு எடுப்பதை எம்ஜிஆர் எதிர்த்தார். எம்ஜிஆருக்கு அது கசப்பான அனுபவமாகவே அவருக்கு இருந்தது. அதனால் கட்சியில் தொண்டர்களுக்கு அதிக பலம் இருக்க வேண்டும் என்று எம்ஜிஆர் நினைத்தார். எப்போதும் கட்சி முடிவுகளை அடிப்படை தொண்டர்கள் மூலமே எடுக்க வேண்டும் என்பதை அவர் விரும்பினார்.

தொண்டர்கள்
அதனால் தொண்டர்கள் பொதுச்செயலாளரை தேர்வு செய்ய வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது. ஜெயலலிதாவும் இதைதான் கடைபிடித்தார். எனவே ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை உருவாக்கிய போதும் இதேபோல் உருவாக்கினோம். அப்படி இருக்கும் போது எடப்பாடி பழனிச்சாமி பொதுக்குழு மூலமாக இடைக்கால பொதுச்செயலாளர் ஆகி உள்ளார். எம்ஜிஆர் கொண்டு வந்த விதியை, அவரின் எண்ணத்தை, கட்சி உருவாக்க எம்ஜிஆர் வைத்து இருந்த மூல காரணத்தையே எடப்பாடி மீறிவிட்டார், என்று ஓபிஎஸ் தரப்பு வாதம் வைத்தது.

இரண்டு பேர் முக்கியமா?
இதில் ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பின் நலனை கவனத்தில் கொள்ள வேண்டுமா? கட்சியின் நலன் பற்றி கவனத்தில் கொள்ள வேண்டுமா என்று பார்க்க வேண்டும் என்று நீதிபதிகள் கூறினர். இதன் அடிப்படையிலேயே ஓபிஎஸ், இபிஎஸ் இரண்டின் தரப்பும் இன்று வாதம் வைக்கிறது. இதனால் வழக்கு எங்கே எடப்பாடிக்கு எதிராக செல்கிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் எடப்பாடி தரப்பு இதற்கு அடுத்து வாதம் வைக்க உள்ளது. அதில் வழக்கில் திருப்பங்கள் ஏற்படலாம். எடப்பாடி வாதம் வைக்க நேரம் எடுக்கும் என்பதால் வழக்கு செவ்வாய் கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications