இது விவசாயிகள் பிரச்சனை... அதனால் ஏற்க முடியாது... இலவச மின்சார விவகாரத்தில் முதல்வர் கறார்
சென்னை: மத்திய அரசை பல்வேறு விவகாரங்களிலும் அனுசரித்து செல்லும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இலவச மின்சாரத் திட்டத்தில் மத்திய அரசுடன் கருத்து வேறுபடுகிறாராம்.
இது விவசாயிகள் பிரச்சனை என்பதால் இதில் மத்திய அரசின் போக்குக்கு தன்னால் செல்ல முடியாது என தனக்கு நெருக்கமானவர்களிடம் திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார்.
விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரத்தில் கை வைத்து அவர்களின் சாபத்திற்கு கட்சியும், ஆட்சியும் ஆளாக கூடாது என்பதில் முதல்வர் தரப்பு மிக உறுதியுடன் இருக்கிறதாம்.

இலவச மின்சாரம்
இந்தியாவிலேயே முதன்முறையாக, தமிழகத்தில் தான் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டது. 1990-ல் திமுக ஆட்சியின் போது அப்போதைய முதல்வர் கருணாநிதியால் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது. இதையடுத்து அந்த திட்டம் பல்வேறு மாநிலங்களிலும் அமல்படுத்தப்பட்டு விவசாயிகளின் பேராதரவையும், பெரும் வரவேற்பையும் பெற்றது. இந்நிலையில் இந்த திட்டத்தை மையமாக வைத்து கடந்த 10 நாட்களாக சர்ச்சைகள் எழுந்துள்ளன.

நிபந்தனை
புதிய மின்சார திருத்தச் சட்டம் தொடர்பாக மாநிலங்களிடம் கருத்து கேட்டுள்ள மத்திய அரசு, மின்சார மானியங்களை ரத்து செய்யும் வகையில் நிபந்தனைகளையும் விதித்தது. இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு துளியும் விருப்பமில்லையாம். இதனால் தான் என்ன வந்தாலும் பார்த்துக்கொள்வோம், இலவச மின்சாரத்தை மட்டும் ரத்து செய்யக்கூடாது என நினைக்கிறாராம் அவர். இதன் வெளிப்பாடாக தான் சேலத்தில் நேற்று பேட்டியளித்த அவர், இலவச மின்சாரத்தை நிறுத்தப்போவதில்லை எனக் கூறி மத்திய அரசுக்கு தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.

மக்கள் அதிருப்தி
மத்திய அரசு எடுத்த பல்வேறு முடிவுகளை நாம் ஏற்றுக்கொண்டிருக்கிறோம். அப்படி ஏற்றுக்கொண்டதால் இங்கு நம் மீது தான் மக்களின் கோபமும் அதிருப்தியும் திரும்பியிருக்கிறது. இந்த சூழலில் இலவச மின்சாரம் விவகாரத்தில் மத்திய அரசு எடுத்திருக்கும் முடிவை உறுதியாக நான் ஏற்கப்போவதில்லை என கூறிவிட்டாராம் முதல்வர். இது விவசாயிகளுக்கு எந்தளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை விளக்கி மீண்டும் ஒரு கடிதம் எழுதும் திட்டத்தில் இருக்கிறாராம் அவர்.

ஏற்க வேண்டியதில்லை
பாஜகவுடன் நாம் கூட்டணி தான் வைத்திருக்கிறோம், அதற்காக அந்த கட்சியின் அரசு எடுக்கும் அனைத்து முடிவுகளையும் நாம் ஏற்க வேண்டியதில்லை என ஏற்கனவே கே.பி.முனுசாமி போன்ற முன்னணி நிர்வாகிகள் முதலமைச்சரிடம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இலவச மின்சார ரத்து விவகாரத்தில் விவசாயிகளுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கமாட்டேன் என முதல்வர் தனது பேட்டிகள் மூலம் உறுதிப்படுத்தி வருவது கவனிக்கத்தக்கது.












Click it and Unblock the Notifications