கால்நடை மருந்துகள் தட்டுப்பாடு! வாயில்லா ஜீவன்களின் வயிற்றில் அடிப்பதாக எடப்பாடி பரபரப்பு புகார்!
சென்னை: தமிழகத்தில் கால்நடை மருந்துகள் தட்டுப்பாடு உள்ளதாகவும் திமுக அரசு வாயில்லா ஜீவன்களின் வயிற்றில் அடிப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பரபரப்பு புகார் கூறியிருக்கிறார்.
மருந்து தட்டுப்பாட்டால் ஆடுகளுக்கு செலுத்த வேண்டிய தடுப்பூசிகளை தான் மாடுகளுக்கும் செலுத்தப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது;
கண்ணைக் காட்டிய எடப்பாடி.. ஸ்கெட்ச் போட்ட வேலுமணி.. டிச.2ல் இருக்கு.. பலத்தைக் காட்ட 'பலே’ திட்டம்!

வலி -வேதனை
தனக்குள்ள வலி, வேதனைகளை வாய் திறந்து சொல்ல முடியாத அப்பாவி கால்நடைகளின் துயரங்களைக் கண்டறிந்து, அவைகளின் துயர் துடைக்கும் கடவுள்களாக கால்நடை மருத்துவர்களும், மருத்துவப் பணியாளர்களும் பணியாற்றுகிறார்கள். கடந்த 18 மாத கால விடியா திமுக ஆட்சியில், இந்தத் துறை பல்வேறு இன்னல்களைச் சந்தித்து வருகிறது. இன்று இத்துறை, பணியாளர் பற்றாக்குறையால் தள்ளாடுகிறது. முறையான நியமனங்கள் நடைபெறவில்லை என்று புகார்கள் வருகின்றன.

தடுப்பூசி இல்லை
தமிழகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் பருவகால மாற்றத்திற்கு ஏற்ப கால்நடைகளுக்கும், கோழிகளுக்கும் மருத்துவ / விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு தேவையான தடுப்பு மருந்துகள் போடப்படும். கால்நடைகளுக்கான மருந்துப் பொருட்களும் தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் (TNMSC) மூலம் மொத்தமாக வாங்கப்பட்டு, மாநிலம் முழுவதும் அனுப்பப்படும். ஆனால், இதுவரை தடுப்பு மருந்துகள் வாங்கவில்லை. குறிப்பாக மாடுகளுக்கு வேண்டிய மருந்துகளை இதுவரை வாங்காததினால் இந்தாண்டு தமிழகம் முழுவதும் மாடுகளுக்கு கோமாரி நோய்த் தடுப்பூசி போடப்படவில்லை என்றும்; இதனால், மாநிலத்தின் பல பகுதிகளில் மாடுகளுக்கு நாக்கிலும், வாயிலும் அம்மை நோய் தாக்கியுள்ளது என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

அம்மை நோய்
குறிப்பாக ஈரோட்டில் மட்டும் சுமார் நூற்றுக்கணக்கான மாடுகள், தடுப்பூசி போடாததால் அம்மை நோயால் பாதிக்கப்பட்டு உள்ளதாக அப்பகுதி மக்கள் கால்நடை மருத்துவர்களிடம் புகார் தெரிவித்தனர். அப்போது, கால்நடை மருத்துவர்கள் மாடுகளுக்குப் போடவேண்டிய தடுப்பு மருந்து இதுவரை அரசால் வழங்கப்படவில்லை என்றும், ஆடுகளுக்குப் போடவேண்டிய தடுப்பு மருந்து மட்டும் உள்ளதாகவும், எனவே, அத்தடுப்பு மருந்தையே மாடுகளுக்குச் செலுத்தி வருகின்றனர்.

வயிற்றிலும் அடிப்போம்
ஆறறிவு உள்ளவர்கள் மட்டுமல்ல, ஐந்தறிவுள்ள கால்நடைகளின் வயிற்றிலும் அடிப்போம் என்ற குறிக்கோளோடு இந்த விடியா அரசின் முதலமைச்சர் செயல்பட்டு வருகிறார். தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம், மனிதர்களுக்கும் மருந்துகள் கொள்முதல் செய்வதில்லை, கால்நடைகளுக்கும் கொள்முதல் செய்வதில்லை. இதுதான் திராவிட மாடல் ஆட்சி.இதுமட்டுமல்ல, இந்த விடியா திமுக ஆட்சியில் ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை ஆராய்ச்சிப் பூங்கா சுமார் 1,100 ஏக்கரில், ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டு, பகுதி பணிகள் முடிக்கப்பட்டு, நான் முதலமைச்சராக இருந்தபொழுதே இப்பூங்காவின் ஒரு பகுதி திறந்து வைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தது.

கால்நடைப் பூங்கா
தற்போது, மீதமுள்ள பணிகளும் முடிந்துவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. எனவே, உடனடியாக முடிவுற்ற கட்டிடங்களை பயன்பாட்டிற்குக் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.மேலும், இக்கால்நடைப் பூங்காவிற்கு இணையாக மீதியுள்ள சுமார் 300 ஏக்கர் நிலம் ஒரு காலணி தயாரிக்கும் தனியார் நிறுவனத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு, அங்கு தோல் பதனிடும் தொழிற்சாலையினைக் கொண்டு வர இந்த விடியா திமுக அரசு முயற்சிப்பதாக செய்திகள் வருகின்றன. இந்த தோல் பதனிடும் தொழிற்சாலை இங்கு வந்தால், இப்பகுதி முழுவதும் உள்ள நிலத்தடி நீர், சுற்றுப்புறச் சூழல் மற்றும் அருகிலுள்ள நீர்நிலைகள் அனைத்தும் மாசுபட்டு, இப்பகுதியின் முக்கியத் தொழிலான வேளாண் தொழில் முற்றிலும் பாதிக்கப்படும்.