"பாஜக நின்னு பார்க்கட்டும்".. எடப்பாடி ஆரம்பித்த கேம்.. உள்ளுக்குள்ளேயே எதிர்ப்பாமே.. ஆஹா அப்படியா?
ஈரோடு கிழக்கில் பாஜக நின்றால் நிற்கட்டும் என்று கோர்த்துவிட பார்க்கிறார் எடப்பாடி பழனிசாமி என்று மூத்த பத்திரிக்கையாளர் துக்ளக் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
சென்னை: ஈரோடு கிழக்கில் பாஜக தனியாக நின்றால் அவர்களுக்கு பலம் இல்லை என்று தெரிந்துவிடும். எல்லாம் வெட்ட வெளிச்சம் ஆகிவிடும் என்று மூத்த பத்திரிகையாளர் துக்ளக் ரமேஷ் ஒன்இந்தியா யூடியூபிற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈவெரா திருமகன் மாரடைப்பால் கடந்த ஜனவரி 4ம் தேதி காலமானார். இவர் காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் ஆவார். இதையடுத்து அங்கு இடைத்தேர்தல் நடக்கிறது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய பிப்ரவரி 7 அன்று கடைசி நாளாகும்.
வேட்புமனுவை திரும்ப பெற பிப்ரவரி 10 கடைசி நாளாகும். ஈரோடு கிழக்கு இடைதேர்தல் பிப்ரவரி 27 அன்று நடைபெறும். வாக்கு எண்ணிக்கை மார்ச் 2 அன்று நடைபெறும். அங்கு தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் வேட்பாளரை அறிவிக்க முடியாமல் எடப்பாடி, ஓபிஎஸ், பாஜக தரப்புகள் திணறி வருகின்றன . எடப்பாடி தரப்பில் அப்படி என்னதான் நடக்கிறது என்று மூத்த பத்திரிகையாளர் துக்ளக் ரமேஷ் ஒன்இந்தியா யூடியூபிற்கு பேட்டி அளித்துள்ளார்.
"ஈரோட்டில் நிற்க முடியாது".. எடப்பாடியிடம் "நோ" சொன்ன மாஜி.. அங்கே போய் முட்டிக்கணுமா? என்னாச்சு?
சின்னம் சிக்கல்
அவர் தனது பேட்டியில், ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலில் அதிமுக சார்பாக வேட்பாளரை நிறுத்துவோம் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துவிட்டார். ஆனால் போட்டியிடுவதற்குத்தான் ஆட்கள் இல்லை. சின்னம் கிடைக்கவில்லை என்றாலும் ஆட்களை நிறுத்த மாட்டோம் என்று சொல்ல முடியாது. சின்னம் கிடைக்கவில்லை என்றாலும் அவர் போட்டியிட்டுதான் ஆக வேண்டும். இல்லையென்றால் விமர்சனம் வரும். அவர் என்ன இருந்தாலும் போட்டியிடுவார். ஓபிஎஸ்சுக்கு செல்வாக்கு இல்லை என்று காட்ட வேண்டும். இந்த இடைத்தேர்தலில் அதை காட்ட முடியும்.
பாஜக சிக்கல்
தமிழ்நாட்டில் பாஜக வேகமாக காலூன்றி வருகிறது. திமுகவிற்கு எதிரில் பாஜகதான் இருக்கிறது என்ற நிலைப்பாடு உள்ளது. பாஜக எதிர்க்கட்சி போல செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது. இதனால் பாஜகவின் பேச்சு அதிகமாக உள்ளது. அண்ணாமலையை பற்றிய பேச்சு அதிகம் உள்ளது. அதனால் அதிமுக நிற்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி நினைக்கிறார். அதோடு பாஜகவும் நிற்க வேண்டும். பாஜக நின்றால் அவர்களின் நிலை தெரிந்துவிடும் என்று எடப்பாடி பழனிசாமி நினைக்கிறார். பாஜக நின்றால் நிற்கட்டும் என்று கோர்த்துவிட பார்க்கிறார் எடப்பாடி. அதிமுக கூட்டத்திலும் இதை பேசி இருக்கிறார்கள்.
எடப்பாடி
பாஜக நின்றால் அவர்களுக்கு பலம் இல்லை என்று தெரிந்துவிடும். எல்லாம் வெட்ட வெளிச்சம் ஆகிவிடும். என்பதால் எடப்பாடி பழனிசாமி இப்படி காய் நகர்த்தி வருகிறார்.பாஜகவை வெளியே ஆதரிப்பது உள்ளே எதிர்பார்த்து என்று எடப்பாடி பழனிசாமி நடந்து கொண்டு வருகிறார். ஆனால் இதை அதிமுகவிலேயே சிலர் விரும்பவில்லை. எடப்பாடியிடம் "இப்படி செய்யாதீர்கள்" என்று சிலர் அறிவுறுத்தி வருகிறார்கள். அதிமுக உள்ளே பாஜக எதிர்ப்பு கோஷ்டி, பாஜக ஆதரவு கோஷ்டி என்ற இரண்டு கோஷ்டி உள்ளது. இந்த இரண்டு கோஷ்டிகளில் பாஜக எதிர்ப்பு கோஷ்டிக்கு நெருக்கமாக எடப்பாடி இருக்கிறார்.
கோஷ்டி
இந்த கோஷ்டி மோதலால் எடப்பாடி பழனிசாமி இன்னும் வேட்பாளரை அறிவிக்க முடியாமல் இருக்கிறார். சின்னம் முடங்கினால் கூட ஓபிஎஸ்ஸுக்குத்தான் ஆதரவு. களத்தில் ஓபிஎஸ்ஸுக்கு இல்லை. களத்தில் அவருக்கு வாக்கு கிடைக்காது. அவர்களை விட எடப்பாடி தரப்பு கூடுதல் எடுக்கும். இருந்தாலும் இரு அணிகளும் படுதோல்வி அடையும். திமுக கூட்டணிதான் இங்கே ஜெயிக்கும். இன்னொரு பக்கம் பாஜகவின் ஆதரவு யாருக்கு இருக்கிறது என்று பார்க்க வேண்டும். வெளியே எடப்பாடியை ஆதரிப்பது போல அண்ணாமலை பேசுகிறார்.
பேட்டி
சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் கூட நாங்கள் சுயேட்சையை ஆதரிக்க மாட்டோம் என்று அண்ணாமலை கூறியுள்ளார். இதன் அர்த்தம் எடப்பாடிக்கு இரட்டை இலை இல்லை என்றால் பாஜக அவர்களை ஆதரிக்காது என்று அர்த்தம். அதாவது சின்னம் முடங்கினால் அண்ணாமலை எடப்பாடியை ஆதரிக்க மாட்டார். சின்னம் யாருக்கு கிடைக்கிறது என்பதை பொறுத்து இது இருக்கும். சின்னம் ஒருவேளை எடப்பாடிக்கு போனால் பாஜகவிற்கு தர்மசங்கடமான நிலை ஏற்படும். பாஜகவிற்கு இதில் இரண்டு வாய்ப்புகள் உள்ளது.
அண்ணாமலை
ஒன்று தேர்தலில் தனித்து போட்டியிடுவது. இல்லையென்றால் தேர்தலில் யாருக்கும் ஆதரவு கொடுக்காமல் ஒதுங்கி இருப்பது. எடப்பாடி, ஓபிஎஸ் தரப்பை ஆதரிக்க முடியாமல் போனால் தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்ற முடிவை பாஜக எடுக்கும் வாய்ப்புகள் உள்ளன. தேர்தலை அண்ணாமலை தரப்பு புறக்கணிக்கவும் வாய்ப்புகள் உள்ளன. பாஜக தரப்பு இன்னும் கால அவகாசம் எடுத்துக்கொண்டு பொறுத்திருந்து பார்க்கலாம் என்று காய் நகர்த்திக்கொண்டு இருக்கிறது, என்று துக்ளக் ரமேஷ் குறிப்பிட்டு உள்ளார்.