அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைத்ததற்கு எதிர்ப்பு! ஓபிஎஸ், இபிஎஸ் மனு விசாரணை எப்போது? நீதிபதி தகவல்
சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சீல் வைத்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள், தலைமை நீதிபதி ஒப்புதல் பெற்று வழக்கமான நடைமுறைப்படி விசாரணைக்கு பட்டியலிடப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அதிமுகவில் மிகப்பெரிய இடைவெளிக்கு பின் மீண்டும் பொதுச்செயலாளர் சீட் நிரம்பி உள்ளது. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வாகி இருக்கிறார். இப்போது இடைக்கால பொதுச்செயலாளர் என்றாலும் கூட.. பொதுச்செயலாளர் தேர்தல் இன்னும் 4 மாதங்களில் நடக்க உள்ளது.
வானகரத்தில் நேற்று முதல்நாள் நடைபெற்ற பொதுக்குழுவில் இதற்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதோடு அதிமுக அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து ஓ பன்னீர்செல்வமும் நீக்கப்பட்டார்.

சீல்
இந்த நிலையில் பொதுக்குழுவிற்கு இடையே அதிமுக தலைமை அலுவலகத்தில் கடும் மோதல் ஏற்பட்டது . அதிமுக அலுவலகத்தை ஓ பன்னீர்செல்வம் கைப்பற்றிய நிலையில், அங்கு எடப்பாடி - ஓபிஎஸ் தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இரண்டு தரப்பிற்கும் இடையிலான மோதல் வன்முறையாக வெடித்தது. அங்கு நடந்த வன்முறையை தொடர்ந்து சட்டம் - ஒழுங்கு பிரச்னையை காரணம் காட்டி கட்சி அலுவலகத்துக்கு சீல் வைத்து வருவாய் கோட்டாட்சியர் உத்தரவு பிறப்பித்தார்.

வழக்கு
இந்த நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டதை எதிர்த்து கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும், ஒருங்கிணைப்பாளர் எனக் கூறி பன்னீர்செல்வமும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். எடப்பாடி பழனிச்சாமி தனது மனுவில், பொதுக்குழுவின் போது கட்சி அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என கூறி பாதுகாப்பு கோரி கட்சியின் அமைப்புச் செயலாளர் ஜெயக்குமார், மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தும், பாதுகாப்பு வழங்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

ஓபிஎஸ் மீது புகார்
பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்கில் தீர்ப்பளிக்கப்படுவதற்கு முன், பன்னீர்செல்வம் தனது ஆட்களுடன் கட்சி அலுவலகத்துக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியதுடன், அங்கிருந்த கோப்புகளை எடுத்துச் சென்றுள்ளார் எனக் குற்றம் சாட்டியுள்ளார். இதுசம்பந்தமாக புகார் அளித்தும், காவல் துறையினர் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக செயல்பட்டு, அதிமுகவினர் 14 பேரை கைது செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

என்ன சொல்கிறது மனு
சொத்து உரிமை தொடர்பாக பிரச்னை இருந்தால் மட்டுமே சீல் வைப்பதற்கான சட்டப்பிரிவுகளை அமல்படுத்த முடியும் எனவும், அதிமுக தலைமை அலுவலகத்தை பொறுத்தவரை, சொத்து உரிமை தொடர்பாக எந்த பிரச்னையும் இல்லை எனவும், கட்சியின் தலைமை நிலைய செயலாளர், இடைக்கால பொதுச்செயலாளர் என்ற முறையில் கட்சி அலுவலகத்தின் உரிமை தனக்கு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். பொதுக்குழு கூட்டம் நடந்து கொண்டிருந்த போது கட்சி அலுவலகத்தை சீல் வைத்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.
பொதுக்குழு கூட்டம் நடந்து கொண்டிருந்த போது கட்சி அலுவலகத்தை சீல் வைத்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஓபிஎஸ் தரப்பும் மனு
இதேபோல அதிமுக ஒருங்கிணைப்பாளர் எனக் கூறி பன்னீர்செல்வமும், சீல் வைத்த உத்தரவை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த மனுவில் எதிர்மனுதாரராக எடப்பாடி பழனிச்சாமியை இணை ஒருங்கிணைப்பாளர் எனக் குறிப்பிட்டுள்ளார். பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனுவில், எடப்பாடி பழனிச்சாமி, தன்னை பொதுச்செயலாளராக அறிவித்துக் கொண்டது உரிமையியல் நீதிமன்ற ஆய்வுக்கு உட்பட்டது எனவும், இதுநாள் வரை எந்த நீதிமன்றமும் தன்னை ஒருங்கிணைப்பாளர் இல்லை என்றோ, எடப்பாடி பழனிச்சாமியை பொதுச்செயலாளர் என்றோ அறிவிக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

சீல் தவறு
தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் கட்சி தலைமை அலுவலகத்துக்குள் நுழைய தனக்கு எல்லா சட்டப்பூர்வ உரிமைகளும் உள்ளதாகவும், கட்சி தலைமை அலுவலகம் சீல் வைக்கப்பட்ட போது அது தங்கள் கட்டுப்பாட்டில் இருந்ததாகவும் கூறியுள்ளார்.அதிமுக தலைமை அலுவலகத்தின் உரிமை தொடர்பாக பொது அமைதிக்கு பங்கம் ஏற்பட்டது என்பது தொடர்பானன எந்த ஆதாரங்களும் இல்லாமல், முறையாக விசாரணை நடத்தாமல் சீல் வைத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், வருவாய் கோட்டாட்சியரின் உத்தரவை ரத்து செய்து அலுவலகத்தை தங்கள் வசம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டுமெனக் கோரியுள்ளார்.

விசாரணை
இந்த இரு வழக்குகளும் நீதிபதி சதீஷ்குமார் முன் இன்று விசாரணைக்கு வர இருந்தன. ஆனால் இந்த மனுக்கள் இன்று விசாரணைக்கு பட்டியலிடப்படாததால், எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் வழக்கறிஞர் முகமது ரியாஸ், நீதிபதி சதீஷ்குமார் முன் ஆஜராகி, மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என முறையிட்டார்.
இதைக் கேட்ட நீதிபதி, எம்.எல்.ஏ. தாக்கல் செய்த வழக்கு என்பதால் தலைமை நீதிபதி ஒப்புதல் பெற்து, உரிய நடைமுறைகளை முடித்து, வழக்கமான முறைப்படி விசாரணைக்கு பட்டியலிடப்படும் எனத் தெரிவித்தார்.
பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனுவுக்கு எண்ணிடும் நடைமுறைகள் முடிந்த பின் உரிய நடைமுறைகளை பின்பற்றி வழக்குகள் விசாரணைக்கு பட்டியலிடப்படும் எனவும் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications