இதுதான் தரமான சம்பவம்.. ஸ்டாலினின் 'டாக்டர் பேச்சு'.. கலகலத்த சட்டசபை.. ஆச்சர்யத்தில் எம்எல்ஏக்கள்
சென்னை: அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டச்சொன்னதற்கு என்னை டாக்டரா என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அன்று கேட்டார். ஆனால் கொரோனாவிற்கு பிறகு அனைத்து மக்களும் டாக்டராகிவிட்டார்கள். எல்லோருமே பாதி டாக்டராகத்தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் கலகலப்பாக பேசினார்.
Recommended Video
ஆளுநர் உரை மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு இன்று சட்டசபையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்து பேசினார். அப்போது அவர் கூறும் போது,
"கொரோனா வந்தபோது அதுபற்றி எதுவும் தெரியவில்லை, மருத்துவர்களுக்கே தெரியவில்லை, மருந்தும் இல்லை, தடுப்பூசியும் இல்லை என்று இப்போதிருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி (அன்று முதல்வர்) என்று சொன்னார்.
கேட்டார் எடப்பாடி பழனிசாமி
அந்தக் குழப்பமான சூழ்நிலையில் நான், அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டுமாறு அவரிடம் பல முறை வலியுறுத்தினேன். ஆனால் "ஸ்டாலின் என்ன டாக்டரா?" என்று இப்போதிருக்கிற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அன்று கேட்டார். நான் உள்ளபடியே அதற்காக கோபப்படவில்லை.
எல்லோரும் டாக்டர்கள்
உண்மை என்னவென்றால், கொரோனாவுக்குப் பிறகு தமிழ்நாட்டில் பொதுமக்கள் எல்லோருமே டாக்டர் போல் ஆகிவிட்டார்கள். அதுதான் உண்மை. எல்லோருமே பாதி டாக்டராகத்தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள். எனவே, இனிமேல் நாம் யாருமே, யாரையுமே நீங்கள் டாக்டரா என்று கேட்க முடியாது. அந்த அளவுக்கு நிலைமை இன்றைக்கு ஆகிவிட்டது.
ஆலோசனை தாருங்கள்
நான் அன்றைக்கு அனைத்துத் தரப்பினரது ஆலோசனைகளையும் கேட்க வேண்டும் என்று தான் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டச் சொன்னேன்.திமுக ஆட்சி அமைந்ததும், சட்டமன்ற அனைத்துக் கட்சிக் குழுவை உள்ளடக்கி ஒரு குழுவை நியமித்தேன். அதிமுக சார்பில்கூட முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் அதில் இடம் பெற்றுள்ளார். இந்தக் குழுவின் ஆலோசனைகளைப் பெற்றுதான் இன்றைய அரசு கொரோனா தடுப்பு பணிகள் விஷயத்தில் . எனவே, கொரோனா தடுப்புப் பணிகள் குறித்த உறுப்பினர்கள் அனைவரது கோரிக்கைகளையும், ஆலோசனைகளையும் தங்கள் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் மூலமாக அரசுக்கு நீங்கள் தொடர்ந்து சொல்ல வேண்டும் என்று இந்த நேரத்திலே நான் உரிமையோடு வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன்.
ஸ்டாலின் உருக்கம்
ஏனென்றால், இது அரசியல் பிரச்சினை அல்ல, கட்சிப் பிரச்சினையும் அல்ல, ஆட்சியின் பிரச்சினையும் அல்ல, மக்கள் பிரச்சினை. மக்கள் நலன் சார்ந்திருக்கக்கூடிய பிரச்சினை. எதிர்க்கட்சித் தலைவர் பேசும்போது, 'நான் தவறாகச் சொல்லவில்லை, அனைவரும் சேர்ந்து செயல்பட வேண்டும்' என்று சொன்னார். அதற்காக அவருக்கு நான் மீண்டும் மீண்டும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆலோசனை அவசியம்
அனைவரும் சேர்ந்து செயல்பட்டு - அனைத்துத் தரப்பினரது ஆலோசனைகளையும் பெற்று கொரோனாவுக்கு முழுமையான முற்றுப்புள்ளியை இந்த அரசு வைக்கும் என்று நான் உறுதிபட இந்த அவையிலே தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்" இவ்வாறு முதல்வர் மு.க. ஸ்டாலின் கலகலப்பாக பேசினார்.