பாதயாத்திரைக்கு அழைப்பு விடுத்த அண்ணாமலை.. சட்டென நிராகரித்த எடப்பாடி.. காரணம் என்ன தெரியுமா?
சென்னை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நாளை தொடங்கவுள்ள பாதயாத்திரைக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில் அவர் அதை நிராகரித்தார்.
தமிழகத்தில் ஊழலுக்கு எதிராகவும் தமிழக மக்களுக்கு அனைத்து நலத்திட்டங்களும் சென்றடைவதை உறுதி செய்யும் வகையிலும் "என் மண் என் மக்கள்" என்ற பாதயாத்திரையை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நாளை ராமேஸ்வரத்தில் தொடங்குகிறார்.

இந்த யாத்திரையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைக்கிறார். இதன் நிறைவு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. இதில் பிரதமர் வேட்பாளர் மோடியை முன்னிறுத்தி வருகிறார்கள்.
பாஜக 3ஆவது முறையாக ஆட்சியை பிடிக்கும் என்றும் சொல்லி வருகிறார்கள். பிரதமர் மோடி ராமநாதபுரத்தில் போட்டியிடுவார் என்றும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அனைத்து அரசியல் கட்சிகளின் பார்வையும் ராமநாதபுரத்தின் மேல் உள்ளது. சிறிய கட்சிகளை எல்லாம் ஒன்று திரட்டி கடந்த சில தினங்களுக்கு முன்பு டெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்திற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதே நேரம் ஓபிஎஸ்ஸுக்கு அழைப்பில்லை. அந்த கூட்டத்தில் பிரதமர் மோடிக்கு அருகே எடப்பாடி பழனிசாமிக்கு இடம் ஒதுக்கும் அளவுக்கு அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. அதே போல் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிமுகதான் தலைமை என்று அதிமுக நிர்வாகிகள் பேசியிருந்தனர்.
இந்த நிலையில் பாதயாத்திரைக்கு வருமாறு எடப்பாடி பழனிசாமிக்கு அண்ணாமலை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அழைப்பு விடுத்தார். அது போல் ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. டெல்லியில் நடந்த கூட்டணி கட்சி கூட்டத்திற்கு தேமுதிகவுக்கு அழைப்பு இல்லை. மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பிரேமலதா பேசும் போது தேமுதிக எந்த கூட்டணியிலும் இல்லை என்றார். இந்த நிலையில் பாதயாத்திரைக்கு வருமாறு பிரேமலதாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனவே தேமுதிக சார்பில் பிரேமலதா ராமேஸ்வரம் செல்வாரா, தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெறுவாரா என்பதை பார்க்க வேண்டும்.
இந்த நிலையில் திடீர் ட்விஸ்ட்டாக நாளை நடைபெறும் பாதயாத்திரையில் தான் கலந்து கொள்ள போவதில்லை என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதன் மூலம் அண்ணாமலையின் அழைப்பை எடப்பாடி பழனிசாமி நிராகரித்தார். இதுகுறித்து அரசியல் நிபுணர்களிடம் கேட்ட போது அவர்கள் கூறுகையில் ஒரு செய்தி ஊடகத்திற்கு பேட்டி அளித்த போது ஊழல் குற்றச்சாட்டில் சிறை சென்ற முதல்வர்கள் எல்லாம் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள் என முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பெயரை குறிப்பிடாமல் அண்ணாமலை தெரிவித்திருந்தது அதிமுகவினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது.
அதே போல் இந்த பாதயாத்திரைக்கு ஓபிஎஸ்ஸுக்கும் டிடிவி தினகரனுக்கும் அழைப்பு விடுத்ததும் எடப்பாடி பழனிசாமி பாதயாத்திரைக்கு வர மறுத்ததற்கான காரணம் என்கிறார்கள். மேலும் அதிமுகவில் இல்லாத எம்பி ரவீந்திரநாத்தை அதிமுக மக்களவை குழுத் தலைவர் என குறிப்பிட்டு குளிர்காலக் கூட்டத் தொடரின் ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்ததும் எடப்பாடிக்கு கோபத்தை ஏற்படுத்தியதாக தெரிகிறது. அடுத்தடுத்து நடைபெறும் சம்பவங்களால் அதிமுக- பாஜக இடையே கூட்டணியில் விரிசல் குறையவில்லை என்றே தெரிகிறது.












Click it and Unblock the Notifications