வாழ்த்திய எடப்பாடி பழனிசாமி.. சூப்பர் பதில் அளித்து ஆச்சர்யப்பட வைத்த மு.க.ஸ்டாலின்!
சென்னை: தமிழக முதல்வராக பொறுப்பேற்க உள்ள மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதற்கு பதில் அளித்துள்ள முக ஸ்டாலின் ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் இணைந்தே ஜனநாயகம் என்று கூறி நன்றி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களில் அபார வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடித்துள்ளது. திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்துள்ளது. அதிமுக கூட்டணி 75 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
இதன் மூலம் ஸ்டாலின் தமிழகத்தின் முதல்வராவது உறுதியாகி உள்ளது. நாளை திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளது. அதன்பிறகு ஸ்டாலின் ஆட்சியமைக்க ஆளுநரிடம் உரிமை கோருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தலைவர்கள் வாழ்த்து
இந்நிலையில் பிரதமர் மோடி, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், கேரள முதல்வர் பினராயி விஜயன், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்பட பலரும் முக ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்,

ஸ்டாலினுக்கு வாழ்த்து
தற்போது எடப்பாடி பழனிசாமியும் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்கவுள்ள .மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

ஸ்டாலின் பதில்
இதற்கு பதில் அளித்துள்ள முக ஸ்டாலின், எடப்பபாடி பழனிசாமிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன், மிகச்சிறந்த தமிழகத்தை உருவாக்க தங்களது ஆலோசனையும் ஒத்துழைப்பும் தேவை. ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் இணைந்ததே ஜனநாயகம், அத்தகைய ஜனநாயகத்தை காப்போம் என்று பதில் அளித்துள்ளார்.

ஆக்கப்பூர்வமாக செயல்படுவோம்
வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், வெற்றி பெற்ற ஸ்டாலின் அவர்களுக்கும் திமுக கூட்டணி கட்சியை சார்ந்த வெற்றி பெற்ற அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நாம் அனைவரும் தமிழக மக்களின் நலனுக்காக ஆக்கப்பூர்வமாக அயராது பணியாற்ற உறுதியேற்போம் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications