மக்களின் காதில் பூ சுற்றிய திமுக, அட்டகாசம் எல்லை மீறிப் போயுள்ளது - அனல் காட்டிய எடப்பாடி பழனிசாமி
சென்னை : சாலை போடும் பணியில் ஈடுபட்ட பொறியாளர், பணியாளர்களை தாக்கியதாக எழுந்த புகார் குறித்து திமுக எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், திமுக ஆட்சிக்கு வந்தபின் அராஜகங்கள் பெருகியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடிபழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை திருவொற்றியூர் பகுதியில் சாலை போடும் பணியில் ஈடுபட்டு வந்த மாநகராட்சி உதவி பொறியாளர் மற்றும் பணியாளர்களை திமுக எம்எல்ஏவான சங்கர் தாக்கியதாக புகார் எழுந்தது.
அவரது கட்சிப் பதவி பறிக்கப்பட்ட நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது. இந்த நிலையில் அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்து அராஜகத்தில் ஈடுபட்ட திமுக எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக இணைய ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
உத்தர பிரதேச அரசியல் தலையெழுத்தை நிர்ணயிக்கும் ஓ.பி.சி ஜாதி பிரிவினர்.. ஐஸ் வைக்கும் கட்சிகள்
எடப்பாடி பழனிசாமி அறிக்கை
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்து, தமிழக மக்களின் காதுகளில் பூ சுற்றி ஆட்சிக்கு வந்தது முதல் திமுக-வினரின் அட்டகாசம் எல்லை மீறிப் போயுள்ளது எனவும், காவல் துறையினரையும், அரசு அதிகாரிகளையும் மற்றும் பொதுமக்களையும் மிரட்டுவதும், சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவதும் அன்றாட நிகழ்வுகளாகிவிட்டது என கூறியுள்ளார். ரேஷன் கடைகளில் தலையீடு சட்ட விரோதமாக மணல் அள்ளும்போது தடுக்கும் வருவாய் மற்றும் காவல்துறை அதிகாரிகளைத் தாக்குவது செய்யாத ஊரக வளர்ச்சிப் பணிகளுக்கு பில் பாஸ் செய்யுமாறு உள்ளாட்சித் துறை அதிகாரிகளை மிரட்டுவது என்று, அனைத்துத் துறைகளிலும் திமுகவினரின் சட்ட விரோதச் செயல்கள் குறித்த செய்திகள் நாள்தோறும் நாளிதழ்களிலும் ஊடகங்களிலும் வெளிவருகின்றன என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
தாக்குதல் நடத்திய திமுக எம்எல்ஏ
நேற்றைய ஆங்கில நாளேடு ஒன்றில், திருவொற்றியூர் தொகுதி திமுக எம்எல்ஏ குறித்த செய்தி ஒன்று வெளிவந்துள்ளது என குறிப்பிட்டுள்ள அவர், கடந்த புதன் கிழமை இரவு மாநகராட்சி ஒப்பந்ததாரர் திருவொற்றியூர் பகுதியில் உள்ள நடராஜன் தோட்டம் என்ற இடத்தில் சாலை போடும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார் எனவும், சாலை போடும் பணியை மாநகராட்சி உதவிப் பொறியாளர் மேற்பார்வை செய்ததாக கூறியுள்ள எடப்பாடி பழனிசாமி, அந்த சமயத்தில், ஒப்பந்ததாரர் தன்னை வந்து முறைப்படி பார்க்காததால் ஆத்திரமடைந்த திருவொற்றியூர் தொகுதி எம்எல்ஏ தனது அடியாட்களுடன் சென்று சாலைப் பணிகளை நிறுத்தியுள்ளதாகவும், சாலை போடும் பணியை மேற்பார்வை செய்த சென்னை மாநகராட்சி உதவிப் பொறியாளரையும், பணியாளர்களையும் மிருகத்தனமாகத் தாக்கி விரட்டியுள்ளார் என்று அந்தப் பத்திரிகையில் செய்தி வெளிவந்துள்ள எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
எம்எல்ஏவின் செயலுக்கு கண்டனம்
மேலும், சாலை போடும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட தார், ஜல்லி கலவை இயந்திரங்கள் மற்றும் வாகனங்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தியதாகவும், அடியாட்களால் அடித்து உதைக்கப்பட்ட உதவிப் பொறியாளரை மிரட்டி, காவல் நிலையத்தில் புகார் செய்யவிடாமல் செய்திருக்கிறார் என தனது அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ள பழனிசாமி, ஆளும் கட்சி திருவொற்றியூர் தொகுதி எம்எல்ஏ என்று பத்திரிகைச் செய்தி விளக்கமாகத் தெரிவித்துள்ளது எனவும், ஆளும் திமுக எம்எல்ஏவின் அடாவடி அராஜகம் பொது வெளியில் மக்களை சென்றடைந்ததை அறிந்த திமுக தலைமை, வேறு வழியின்றி அந்த சட்டமன்ற உறுப்பினரை திருவொற்றியூர் பகுதி திமுக செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கி இருப்பதாக நேற்றைய முரசொலி நாளிதழ் மூலம் அறிவித்துள்ளதை சுட்டிக் காட்டியுள்ளார்.
அரசின் இரட்டை வேடம்
இது திமுக அரசின் இரட்டை வேடத்தைக் காட்டுகிறது என தனது அறிக்கையில் கூறியுள்ள எடப்பாடி பழனிசாமி, ஆளும் கட்சி எம்எல்ஏ, அராஜகத்தில் ஈடுபட்டுள்ளார் என்று வெட்ட வெளிச்சமாகத் தெரிந்த பின்னும், அவரின் கட்சிப் பொறுப்பை மட்டும் பறித்துவிட்டு, வழக்குப் பதிவு செய்யாதது ஏன்? எனவும், ஏற்கெனவே திருவொற்றியூரில் மீனவக் குடும்பங்களின் மீது தாக்குதல் நடத்தியதாக இவர்கள் மீது அப்பகுதி மக்கள் ஊடகங்களில் பேட்டி அளித்துள்ள நிலையில், இதுவரை தவறு இழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டியுள்ளார்.
அரசுக்கு வலியுறுத்தல்
புண்ணுக்குப் புனுகு பூசும் வேலையையும், கண் துடைப்பு நடவடிக்கையையும், இந்த விடியா அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் எனவும், தாக்குதலுக்கு உள்ளான மாநகராட்சி உதவிப் பொறியாளர் மற்றும் சாலை போடும் பணியில் ஈடுபட்ட ஊழியர்களிடம் முறைப்படி புகாரினைப் பெற்று, அவர்களை மிருகத்தனமாகத் தாக்கிய திருவொற்றியூர் தொகுதி திமுக எம்எல்ஏ மீதும், மற்றும் அவரது ஆதரவு ரவுடிகள் மீதும் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ள எடப்பாடி பழனிசாமி, ஆளும் திமுகவினரின் அராஜகத்தால் உறைந்து போயுள்ள அரசு துறையைச்சேர்ந்தவர்கள், காவல் துறையைச் சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் இது போன்று தாக்குதலுக்கு உள்ளாகும்போது, பத்திரிகை, ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் அவற்றைத் தெரிவிப்பதோடு, தைரியமாக காவல் துறையினரிடமும் புகார் அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் எனவும், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்த திமுக எம்எல்ஏ மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த அரசை வலியுறுத்துகிறேன் என தனது அறிக்கையில் கூறியுள்ளார்.