புறக்கணித்த எடப்பாடி பழனிசாமி.. கடுப்பில் பாமக.. அன்புமணி எடுக்கபோகும் முடிவு
சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில் தினசரி பல்வேறு திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. தவெகவுக்கு மெஜாரிட்டி இல்லை என்பதால் அவர்களை ஆட்சியமைக்க அழைக்க முடியாது என்று ஆளுநர் ராஜேந்திர விஸ்நாத் அர்லேக்கர் உறுதியாக உள்ளார். தவெகவுக்கு காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம் கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. ஐயுஎம்எல், அமமுக தவெகவுக்கு ஆதரவில்லை என கூறிவிட்டனர். அதிமுக கூட்டணியிலும் பல்வேறு பஞ்சாயத்துகள் எழுந்துள்ளன. பாமகவினரை எடப்பாடி பழனிசாமி புறக்கணிப்பதால் அவர்கள் அதிருப்தியில் உள்ளனர். இதனால் விரைவில் அவர்கள் முக்கிய முடிவை எடுக்கவுள்ளார்களாம்.
சட்டமன்ற தேர்தலில் தவெக தமிழகத்தின் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர். ஆட்சியமைப்பதற்கு தேவையான 118 தொகுதிகள் அவர்களிடம் இல்லை. காங்கிரஸ் முதல் ஆளாக தவெகவுக்கு ஆதரவு தெரிவித்தது. சிபிஎம், சிபிஐ, விசிக, ஐயூஎம்எல் கட்சிகளிடம் தவெக ஆதரவு கோரியது. சிபிஎம், சிபிஐ கட்சிகள் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

அதிமுக பாமக பிரச்சனை
தவெகவுக்கு ஆதரவு கிடைக்கவில்லை என்பதால் அதிமுக ஆட்சியமைக்கும் முயற்சியில் இறங்கிறது. இதற்காக திமுகவிடம் அதிமுக ஆதரவு கோரியது. அதிமுகவுக்கு ஆதரவளிப்பதற்கு திமுகவும் முடிவு செய்திருந்ததாக தகவல் வெளியானது. திமுக ஆதரவை பெறுவதற்காக பாஜகவுடனான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுவதற்கும் அதிமுக முடிவு செய்திருந்ததாக தகவல்கள் வெளியாகின.
அதிமுக எம்எல்ஏக்களை புதுச்சேரியில் உள்ள ரிசார்டில் தங்க வைத்தனர். அதிமுக மூத்த தலைவர்களும் தங்களின் ஆட்சி அமையும், எடப்பாடி பழனிசாமி முதல்வராவார் என்று கூறிவந்தனர். தேர்தலுக்கு பிறகு அதிமுகவினர் பாமகவை கண்டுகொள்ளவில்லை என்று புகார் எழுந்தது. எடப்பாடி பழனிசாமியின் செயல்பாட்டில் பாமகவினர் கடும் அதிருப்தியடைந்தனர். அதிமுக தலைமையிலான தேஜகூட்டணியில் பாமகவுக்கு 18 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.
எடப்பாடி செயல்பாட்டால் அதிருப்தி
இதில் பாமக 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது. 108 தொகுதிகளுடன் தமிழகத்தின் தனிப்பெரும் கட்சியாக தவெக வெற்றி பெற்றாலும் சேலம், தர்மபுரி, அரியலுார், வேலுார், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்களில் அந்தக் கட்சியினரால் சாதிக்க முடியவில்லை. முக்கியமாக வன்னியர்கள் சமுதாயத்தினர் வலுவாக உள்ள பகுதிகளில் தவெகவுக்கு கிடைக்கவில்லை. மறுபக்கம் அதிமுகவுக்கு அவர்கள் வலுவாக உள்ள கொங்கு பகுதிகளில் கூட எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை.
பாமக வலுவாக உள்ள பகுதிகளில் தான் அதிமுக ஓரளவு வெற்றி பெற்றுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ் சசிகலாவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும் வன்னியர் சமுதாய வாக்குகள் பெரிதாக பிரியவில்லை. அன்புமணி சரியாக செயல்படவில்லை என்றால் அதிமுக கூட்டணிக்கு இதைவிட மோசமான தோல்வி கிடைத்திருக்கும் என்று அவரின் ஆதரவாளர்க்ள நம்புகிறார்கள். இதை அதிமுகவினரும் புரிந்து வைத்துள்ளனர்.
கொந்தளிப்பு
ஆனால் தேர்தல் முடிவுக்கு பிறகு அன்புமணி மற்றும் பாமக வேட்பாளர்களை எடப்பாடி பழனிசாமி சந்திக்கவில்லை. பரம எதிரியான திமுகவினரிடம் பேசிய அதிமுக பாமகவை புறக்கணித்தது கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் உள்ள அதிமுக எம்எல்ஏக்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, நல்லது நடக்கும் பொறுத்திருங்கள் என்று கூறினார். இதனால் கடுப்பான பாமகவினர், நாங்கள் இல்லாமல் நல்லது நடந்துவிடுமா என்று கேள்வி எழுப்புகிறார்கள்.
பாமக நிர்வாகிகள் கூறுகையில், "தமிழக அரசியலில் உச்சகட்ட பரபரப்பு நிலவுகிறது. எங்கள் கூட்டணி சார்பில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை கலந்து பேசி முடிவு எடுப்பதற்காக எடப்பாடி பழனிசாமியை சந்திப்பதற்கு பாமக தலைமை முயற்சி செய்தனர். சௌமியா அன்புமணி உள்ளிட்ட 4 எம்எல்ஏக்களும் பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற முயற்சித்தனர். அவர் எங்களை சந்திக்கவில்லை. எந்த பதிலும் அளிக்காதது அதிருப்தியை தருகிறது. நாங்கள் இல்லாமல் அதிமுகவுக்கு நல்லது நடக்காது என்பதை புரிந்துகொளள் வேண்டும். இல்லையென்றால் நாங்கள் வேறு மாதிரியான முடிவுகளை எடுப்போம்" என்றனர்.












Click it and Unblock the Notifications