ஸ்டாலின் பேச்சை போடும்போது சொதப்பிய டேப்! "என்னடா இது.." உச்சக்கட்ட டென்ஷன் மோடில் எடப்பாடி! பரபரப்பு
சென்னை: செந்தில் பாலாஜியை கடந்த காலங்களில் மிகக் கடுமையாக விமர்சித்த ஸ்டாலின், இப்போது மட்டும் ஏன் புகழ்கிறார் என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். செந்தில் பாலாஜி கொடுப்பதைக் கொடுத்துப் பெற வேண்டியதைப் பெற்றுவிட்டார் எனச் சாடியுள்ள எடப்பாடி பழனிசாமி, கடந்த காலங்களில் ஸ்டாலினே செந்தில் பாலாஜியை ஊழல்வாதி என விமர்சித்திருந்ததாகவும் இப்போதும் மட்டும் அவர் புனிதமாகிவிட்டாரா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் தான் டெல்லிக்குச் சென்று திரும்பினார். அவர் டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துவிட்டு சென்னை திரும்பினார். எடப்பாடி பழனிசாமி- அமித் ஷா சந்திப்பு அப்போதே பேசுபொருளானது. இதற்கிடையே இன்று செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, திமுகவை மிகக் கடுமையாக விமர்சித்தார்.

எடப்பாடி பழனிசாமி
முதலில் தனது டெல்லி பயணம் தொடர்பாக விளக்கம் கொடுத்த எடப்பாடி, கார்களை மாறி அமித் ஷாவை சந்திக்கப் போனதாக வெளியான தகவல் உண்மை இல்லை என மறுத்தார். தனது அதிகாரப்பூர்வ காரிலேயே அமித் ஷாவை சந்தித்தாக குறிப்பிட்டார். மேலும், அமித் ஷாவை சந்தித்துவிட்டு வரும்போது முகத்தைத் துடைத்ததை வீடியோ எடுத்து தவறான தகவல்களைப் பரப்புவதாகவும் அவர் கூறினார்.
தொடர்ந்து திமுகவைச் சாடிய அவர், "கரூரில் நடந்த முப்பெரும் விழாவில் செந்தில் பாலாஜி கொடு போட்டால்.. ரோடே போட்டுவிடுவார் என்கிறார் ஸ்டாலின். இதே செந்தில் பாலாஜி பற்றி அதே கரூரில் ஸ்டாலின் என்னவெல்லாம் பேசினார் என்பது பற்றி மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்" எனச் சொன்ன அவர் அருகில் இருந்த நிர்வாகியிடம் இருந்து டேப்லெட் வாங்கி, அதில் ஸ்டாலினின் பழைய பேச்சைப் போட்டு காட்டினார்.
கடுகடுத்த எடப்பாடி
செந்தில் பாலாஜி அதிமுகவில் இருந்தபோது, கரூரில் நடந்த நிகழ்ச்சியில் அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசியிருப்பார். செந்தில் பாலாஜி பல்வேறு மோசடிகளைச் செய்துள்ளதாகவும் குறுநில மன்னர் போலச் செயல்பட்டு வருவதாகவும் ஸ்டாலின் விமர்சித்த வீடியோவை எடப்பாடி போட்டுக் காட்டினார்.
அந்த வீடியோவை போட்ட போது, முதலில் டேப்லெட்டில் வேறு ஏதோ காட்டியது. இதனால் ஸ்டாலின் பேச்சின் ஆடியோ மட்டும் வந்ததே தவிர, வீடியோ வரவில்லை. இதனால் கடுப்பான எடப்பாடி பழனிசாமி, "என்னடா இது" என்று அருகே இருந்த நிர்வாகியிடம் சலித்துக் கொண்டார். உடனே டேப்லெட்டை வாங்கிய அந்த நிர்வாகி அதைச் சரி செய்து கொடுத்தார். அதன் பிறகு வீடியோவும் சரியாக ப்ளே ஆனது.
புனிதமாகிவிட்டாரா?
அந்த வீடியோவை முழுமையாக பத்திரிக்கையாளர் சந்திப்பில்போட்டு காட்டிய எடப்பாடி பழனிசாமி, "இதுபோல பல வீடியோக்கள் இருக்கிறது. செந்தில் பாலாஜி பற்றி இதை எல்லாம் நாங்கள் சொல்லவில்லை. ஸ்டாலின் தான் கூறியிருக்கிறார். இப்போது அதற்குள் செந்தில் பாலாஜி புனிதமாகிவிட்டாரா என்ன? செந்தில் பாலாஜி மீது பல வழக்குகள் உள்ளன. அப்படியிருக்கும் போது அவருக்கு அமைச்சர் பதவி எல்லாம் கொடுத்து அழகு பார்த்தார்.
வேறு ஆளே இல்லையா?
ஏன் திமுகவில் வேறு ஆளே இல்லையா.. மூத்த தலைவர்கள் யாரும் இல்லையா.. இவருக்கு முக்கிய இலாகாக்களை ஒதுக்கப்பட்டது ஏன்? செந்தில் பாலாஜி கொடுக்க வேண்டியதைக் கொடுத்துப் பெற வேண்டியதைப் பெற்றுள்ளார். எனவே, இப்படிப்பட்டவர்கள் எங்களைப் பற்றி விமர்சிக்க எந்தவொரு தகுதியும் இல்லை" என்று சமரியாக விமர்சித்தார்.












Click it and Unblock the Notifications