கள்ள ஓட்டு போட வந்தவரை பிடித்துக் கொடுத்தது குற்றமா? ஜெயக்குமார் கைது.. எடப்பாடி கண்டனம்
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதற்கு அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நகர்ப்புர உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவின் போது திமுக தொண்டரை அரை நிர்வாணமாக்கி தாக்கியதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து தண்டையார் பேட்டை காவல் துறையினர் ஜெயக்குமாரை தற்போது அதிரடியாக கைது செய்துள்ளனர்.
ஜெயக்குமார்
கடந்த சனிக்கிழமை சென்னை ராயபுரத்தில் 49ஆவது வார்டில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் திமுகவினர் கள்ள ஓட்டுப் போடுவதாக சொல்லி, அங்கு சென்ற முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அங்கிருந்தவரை ஓட்டிப்போட விடாமல் தடுத்திருக்கிறார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் அந்த நபரை ஜெயக்குமார் தாக்கியதாகக் கூறப்பட்டது.

வழக்கு
இந்தச் சூழலில் திமுகவைச் சேர்ந்த நரேஷ் என்பவர் அளித்த புகாரில் தண்டையார்பேட்டை போலீசார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட 40 அதிமுகவினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். " முன்னாள் அமைச்சரான ஜெயக்குமார் அவர்கள் சட்டத்தைத் தன் கையிலே எடுத்துக்கொண்டு, தி.மு.கழக நிர்வாகியின் சட்டையைக் கழற்றி அவமானப்படுத்தியிருக்கிறார். கழகம் இதனைச் சட்டரீதியாக நிச்சயம் எதிர்கொள்ளும்'' என முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

கைது
இந்த புகாரின் அடிப்படையில், தண்டையார்பேட்டை காவல்துறையினர் இன்று இரவு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை அதிரடியாக கைது செய்துள்ளனர். தாக்குதல், கலகம் செய்யத் தூண்டுதல், கொலை மிரட்டல்,ஆபாசமாகத் திட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், அவர் கைது செய்யப்பட்டு, எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

கண்டனம்
''சென்னையில் கள்ள ஓட்டு போட முயன்ற நபரை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்த கழக அமைப்பு செயலாளர் ஜெயக்குமார் அவர்களை கைது செய்தது கடும் கண்டனத்திற்குரியது'' என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இந்நிலையில், ''கள்ள ஓட்டு போட்டவரை பிடித்து கொடுத்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது; குற்றவாளிகளை பிடித்துக்கொடுப்பது தவறா'' என்று வழக்கு தொடரப்பட்ட நிலையில் பழனிச்சாமி கேள்வி எழுப்பியிருந்தார்.

எடப்பாடி பழனிச்சாமி
''குற்றவாளிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துணைபோவது வேதனையளிக்கிறது. அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றால், தோல்வி அடைந்தவர்களாக அறிவிக்க வாய்மொழி உத்தரவு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டுமென வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள அதிகாரிகளுக்கு அமைச்சர்கள் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிகிறது. முறைகேடுகள் நடந்தால் அதிமுக சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கும்'' என்று எடப்பாடி பழனிசாமி ஏற்கெனவே தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications