திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் எப்படி இருக்கிறார்...? மருத்துவரிடம் கேட்டறிந்த முதலமைச்சர்
சென்னை: சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் உடல்நிலை குறித்து மருத்துவரிடம் கேட்டறிந்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.
மேலும்,சிகிச்சைக்காக அரசு தரப்பில் இருந்து என்ன உதவி வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சி உறுப்பினராக இருந்தாலும் அன்பழகனின் உடல்நிலை பற்றி முதலமைச்சர் கேட்டறிந்தது ஆரோக்யமான அரசியலாக பார்க்கப்படுகிறது.
திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகனின் உடல்நிலையில் முன்னேற்றம்.. மருத்துவமனை புதிய தகவல்
கொரோனா தொற்று
சென்னை மேற்கு மாவட்டச் செயலாளரும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஜெ.அன்பழகன், தனக்கு ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக கடந்த 2-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
கண்காணிப்பு
மேலும், சிறுநீரகத்திலும் சிறிய அளவில் பிரச்சனைகள் இருப்பது தெரியவந்தது. இதனால் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட ஜெ.அன்பழகனை மருத்துவர்கள் குழு தீவிரமாக கண்காணித்து வருகிறது. இதனிடையே மூச்சுத்திணறல் நேற்று முன் தினம் மாலை திடீரென அதிகரித்த காரணத்தால் அவருக்கு வெண்டிலெட்டர் பொருத்தப்பட்டுள்ளது.
மருத்துவர் ரேலா
நேற்று மாலை ஜெ.அன்பழகன் உடல்நிலை கவலைக்கிடம் என மருத்துவ அறிக்கை வெளியிடப்பட்ட நிலையில், இன்று ஓரளவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இன்று காலை 11 மணியளவில் ஜெ.அன்பழகனுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர் ரேலாவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
உதவி செய்யத் தயார்
அப்போது, ஜெ.அன்பழகனின் உடல்நிலை மற்றும் அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், அரசு சார்பில் என்ன உதவிகள் வேண்டுமானாலும் செய்யத் தயார் என்றும் அவர் உறுதியளித்தார். மருத்துவரிடம் முதலமைச்சர் தொலைபேசியில் விவரம் கேட்டறிந்த நிலையில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அன்பழகன் சிகிச்சை பெற்று வரும் குரோம்பேட்டை ரேலா மருத்துவமனைக்கே நேரில் சென்று விவரம் கேட்டறிந்தார்.