காலையிலேயே ஹேப்பி நியூஸ்.. அகமுடையார் கிளப்பும் ஆச்சரியம்.. எடப்பாடி பழனிசாமி போடும் "வாக்கு கோலம்"
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பசும்பொன் வருகை குறித்த சலசலப்புகள் இன்னமும் அரசியல் களத்தில் பரபரப்பாக ஓடிக் கொண்டேயிருக்கிறது. இதுகுறித்த பிரத்யேக செய்தி ஒன்று நமக்கு கிடைத்துள்ளது.
கடந்த அதிமுக ஆட்சி காலத்திலிருந்து, ஆலமரம் போன்ற அதிமுக, கொங்கு கோட்டையாக மட்டுமே சுருங்கிவிட்டதாக ஒரு விமர்சனம் உள்ளது.. அதற்கேற்றவாறு, சசிகலா, தினகரன், ஓபிஎஸ் போன்றோரை கட்சியிலிருந்தே எடப்பாடி பழனிசாமி தூக்கியெறிந்துவிடவும், முக்குலத்தோர் மக்களின் கோபத்தையும் எடப்பாடி பழனிசாமி, பெருவாரியாக சம்பாதித்து கொள்ள நேரிட்டதை மறுக்க முடியாது.

எடப்பாடி பழனிசாமி: இதற்கு நடுவில், வன்னியர் இடஒதுக்கீடு விவகாரம் சேர்ந்து கொண்டதால், அந்த கோபம் இன்றுவரை எடப்பாடி பழனிசாமி மீது எதிரொலித்தவாறே உள்ளது. இதைத்தான், பசும்பொன்னில் நடந்த "எதிர்ப்பு" நிகழ்வும் பிரதிபலித்தது. "ஒழிக" கோஷத்தை பார்த்து, அதிமுக தரப்பு அதிர்ந்து போனது என்றாலும், எடப்பாடி பழனிசாமி மட்டும் பசும்பொன் நிகழ்வை பாசிட்டிவ்வாக அணுகுகிறாராம்.
தனக்கு நெருக்கமானவர்களிடம் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, " தேவர் நினைவிடத்துக்குள்ளே என்னை விடாமல் அவர்கள் (ஓபிஎஸ், தினகரன் ஆட்கள் ) தடுத்து விடுவார்கள்.. என்னை ரொம்ப அசிங்கப்படுத்துவார்கள்... காரை வழிமறித்து ரகளை செய்வார்கள் என்றெல்லாம் நினைச்சேன். ஆனா, அப்படி ஒன்னும் பெரிசா நடக்கலை. இதுதான் அவங்களுடைய மொத்த செல்வாக்கும்..
முக்குலத்தோர்: அதனால், முக்குலத்தோர் சமூக மக்களிடம் நெருங்கி செல்லுங்கள்.. நிச்சயம் நம்மை அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள்.. அந்த சமூகம் தங்கள் பக்கம்தான் இருக்கிறார்கள் என்ற ஒரு மாயையை, இவர்கள் 2 பேரும் அங்கே உருவாக்கி வெச்சிருக்காங்க.. அதை ஈசியா உடைச்சிட முடியும்" என்று பகிர்ந்து கொண்டாராம் எடப்பாடி பழனிச்சாமி. இதற்கு பிறகுதான், "அதிமுக ஜாதி கட்சி கிடையாது, சமூக நீதிக்கட்சி" என்று போஸ்டர்களை ஓபிஎஸ், சசிகலா, தினகரன் என 3 பேருக்குமே பதிலடி தரப்பட்டதாம்.
இப்படிப்பட்ட சூழலில் இன்னொரு வியூகத்தையும் எடப்பாடி முன்னெடுக்க போகிறாராம்.. அதாவது, கடந்த, 2016ல், தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் எடுத்த கணக்கெடுப்பின்படி, அகமுடையார் சமுதாயத்தில், 32 லட்சம் ஓட்டுகளும், கள்ளர் சமுதாயத்தில், 15 லட்சம் ஓட்டுகளும், பிறமலை கள்ளர் சமுதாயத்திற்கு, 6 லட்சம் ஓட்டுகளும், மறவர் சமுதாயத்திற்கு, 14.6 லட்சம் ஓட்டுகளும் உள்ளன..
ஓபிஎஸ் & கோ: வரும் எம்பி தேர்தலில் கள்ளர், மறவர் ஓட்டுகளை, ஓபிஎஸ் & கோ பிரித்தாலும்கூட, அகமுடையார் சமுதாய ஓட்டுகள் கிடைத்தாலே, தென் மாவட்டங்களில் அசால்ட்டாக வெற்றி பெற்றுவிட முடியும் என்று எடப்பாடி நம்புகிறாராம். அதுவும் இல்லாமல், 10.5 சதவீத இடஒதுக்கீடு விவகாரத்தில், அகமுடையார் சமுதாயத்திற்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை..
காரணம், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் அவர்கள் இடம் பெறவில்லை... எனவே, தங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்பதை அச்சமூக மக்களே, எடப்பாடியிடம் தெரிவித்தும் வருகிறார்களாம். இந்த நம்பிக்கைதான், எடப்பாடி பழனிசாமிக்கு கூடுதல் பலத்தை தந்து வருகிறதாம்.
சாதனைகள் : எனவேதான், மருது பாண்டியர் போக்குவரத்து கழகம், மருது பாண்டியர் வாரிசுகளுக்கு ஓய்வூதிய திட்டம், மருது பாண்டியர்நினைவு நாளை அரசு விழாவாக அறிவித்தது, திருப்பத்தூரில் மணிமண்டபம்அமைத்தது போன்ற அனைத்துமே, அதிமுக ஆட்சியில் செய்த சாதனைகள் என்று, அகமுடையார் சமுதாயத்தினரிடம் பிரச்சாரம் செய்யவும் திட்டமிட்டு வருகிறார்களாம்.
ஆக, ஒட்டுமொத்தமாக, முக்குலத்தோரின் ஆதரவை, "எம்ஜிஆர்" பாணியில் முழு அளவில் பெறுவதற்கான அனைத்து ரூட்களையும் கையில் எடுத்துள்ளாராம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. ஒருவேளை, முக்குலத்தோரின் பெரும்பான்மையான வாக்குகளை, அதிமுக பெறும்பட்சத்தில், பாஜகவின் கூட்டணி கணக்கும், எடப்பாடி பக்கம் சாயலாம் என்கிறார்கள்.. பொறுத்திருந்து பார்ப்போம்...!!












Click it and Unblock the Notifications