தமிழ்நாட்டில் "ஸ்பேஸை" கண்டுபிடித்த அமித் ஷா.. எடப்பாடிக்கு பாஜக எடுத்த "பாடம்".. என்ன நடந்தது?
சென்னை: அதிமுகவில் உட்கட்சி மோதல் உச்சம் தொட்டுள்ளது. இந்த மோதலில் பாஜகவின் சப்போர்ட் யாருக்கு என்ற கேள்வி எழுந்துள்ளது. எடப்பாடி தலைமையில் ஒற்றை தலைமை இருப்பதை பாஜக விரும்புகிறதா? அல்லது ஓபிஎஸ்ஸை இணைத்துக்கொண்டு இரட்டை தலைமை இருக்க வேண்டும் என்று பாஜக விரும்புகிறதா என்று கேள்வி எழுந்துள்ளது.
அதோடு அதிமுக + பாஜக கூட்டணி தொடருமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலையும், சட்டசபை தேர்தலையும் பாஜக - அதிமுக ஒன்றாக கூட்டணி அமைத்துதான் சந்தித்தன. இதில் லோக்சபா தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்தது. பாஜக ஒரு இடங்களில் கூட வெல்லவில்லை. அதிமுகவில் ஓ பி ரவீந்திரநாத் மட்டும் வெற்றிபெற்றார். இதனால் பாஜகவை எடப்பாடி பழனிசாமி கைவிடுவாரா என்றும் கேள்விகள் எழுந்துள்ளன.
இது தொடர்பான கேள்விகளுக்கு மூத்த பத்திரிகையாளர் மணி ஒன்இந்தியா அரசியலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். அவரின் பேட்டி பின்வருமாறு..

சமம்
கேள்வி: எடப்பாடி - ஓபிஎஸ் இருவரையும் பாஜக சரி சமமாக பார்க்கிறது என்று நினைக்கிறீர்கள்?
அப்படி சொல்ல முடியாது. என்னை பொறுத்தவரை, அவர்கள் இரண்டு பேரையும் பாஜக கண்டுகொள்ளவில்லை. குஜராத், இமாச்சல பிரதேச தேர்தலில் பாஜக கவனம் செலுத்தியது. அதன்பின் கர்நாடகா, தெலுங்கானா தேர்தலில் பாஜக கவனம் செலுத்தும். அதற்கான வேலைகளை அவர்கள் செய்வார்கள். அந்த தேர்தல் முடிந்த பின்புதான் அவர்கள் தமிழ்நாடு பக்கம் திரும்புவார்கள். தமிழ்நாட்டில் பாஜகவிற்கு ஒரு ஸ்பேஸ் இருக்கிறது என்ற நம்பிக்கை அவர்களுக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால்தான் அமித் ஷா சமீபத்தில் தமிழ்நாடு வந்த போது பாஜக அலுவலகத்திற்கு சென்றார். எப்போதும் தமிழ்நாடு பாஜக அலுவலகம் செல்லாத அமித் ஷா சமீபத்தில் சென்றது இதனால்தான். தமிழ்நாட்டில் பாஜகவிற்கு ஒரு ஸ்பேஸ் இருக்கிறது என்ற நம்பிக்கை அவர்களுக்கு ஏற்பட்டு உள்ளது

பாஜக ஸ்பேஸ்
கேள்வி: என்ன ஸ்பேஸ் கிடைத்துவிட்டது என்று நினைக்கிறீர்கள்?
பதில்: தமிழ்நாட்டில் பாஜக வளர்வதற்கான ஒரு இடம் கிடைத்துவிட்டது. பழைய அதிமுக வாக்குகள் எல்லாம் உடையும் வாய்ப்புகள் உள்ளன. அதாவது திமுக எதிர்ப்பு வாக்குகள் தங்களுக்கு கிடைக்கும் என்று பாஜக நினைக்கிறது. இப்போது கூட்டணி வைப்பார்கள். எதிர்காலத்தில் பாஜக தனி எதிர்க்கட்சியாக உருவாக வேண்டும் என்பதுதான் அந்த கட்சியின் பிளான். அதிமுக தங்களை கூட்டணியில் இருந்து வெளியேற்றினால், பல சிறிய கட்சிகளை வைத்துக்கொண்டு பாஜக புது கூட்டணியை கூட உருவாக்கும். ஆனால் அதற்கெல்லாம் நேரம் இருக்கிறது. இன்னும் ஒன்றரை வருடத்திற்கு மேல் உள்ளது.

அமித் ஷா பிளான்
கேள்வி: சமீபத்தில் அமித் ஷாவை ஏன் சந்திக்க வேண்டும் என்று எடப்பாடி கேட்கிறாரே? அவர் பாஜகவிற்கு எதிராக திரும்புகிறாரா?
பதில்: கடந்த 3 தேர்தல்களும் எடப்பாடிக்கு பெரிய பாடம். பாஜகவோடு கூட்டணி வைத்து பாடம் கற்றுக்கொண்டனர். பாஜகவோடு கூட்டணி வைத்தால் தங்களுக்கு வாய்ப்பு இல்லை என்று நினைக்கிறார்கள். ஆனால் பாஜகவை வெளிப்படையாக எதிர்க்க அவர்கள் யோசிக்கிறார்கள். எங்கே பாஜகவை எதிர்த்தால் சிபிஐ, அமலாக்கத்துறை விசாரணை நம் பக்கம் திரும்பிவிடுமோ என்று அவர்கள் நினைக்கிறார்கள். அதனால்தான் பாஜகவை எதிர்க்க யோசிக்கிறார்கள். இன்னொரு பக்கம் விஜயபாஸ்கர், எஸ்பி வேலுமணி போன்றவர்கள் மீது உள்ள வழக்குகள் என்ன ஆகும் என்ற கேள்வி எழுந்துள்ளது. விஜயபாஸ்கரை வைத்து எடப்பாடியை பாஜக லாக் செய்கிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

பாஜக வேண்டாம்
கேள்வி: தேர்தல் நேரத்தில் பாஜக வேண்டாம் என்ற முடிவை எடப்பாடி எடுப்பாரா?
பதில்: எடுக்க வாய்ப்புகள் உள்ளன. எடப்பாடியை சாதாரண தலைவராக மதிப்பிட முடியாது. அவரால் தனியாக நிற்க முடியும் என்ற நம்பிக்கை எடப்பாடிக்கு இருக்கிறது. ஆனால் அதற்கு பாஜக விடாது. எடப்பாடி தனியாக அதிமுகவை வழிநடத்தி.. இரட்டை இலை சின்னமும் இருந்து.. பாஜக கூட்டணியும் இல்லை என்றால் கண்டிப்பாக அந்த கட்சிக்கு நிறைய இடங்கள் கிடைக்கும். அப்படி வந்தால் எடப்பாடி மிகப்பெரிய போர்ஸ்ஸாக வளர்ந்துவிடுவார். அதை பாஜக அனுமதிக்காது. இன்னொரு லீடர் தமிழ்நாட்டில் உருவாவதை பாஜக விரும்பவில்லை. ஆனால் எடப்பாடி அப்படி வளர்ந்தால்தான் தமிழ்நாட்டில் இருதுருவ அரசியல் தொடர்ந்து நீடிக்கும்.

கழற்றிவிடுவார்
கேள்வி: எடப்பாடி எதிர்காலத்தில் தங்களை கழற்றிவிடுவார் என்று பாஜக தெரியுமா?
பதில்: அது பாஜகவிற்கு தெரியும். அதனால்தான் இன்னும் எடப்பாடியை முழுமையாக பாஜக அங்கீகரிக்கவில்லை. எடப்பாடிக்கு நெருக்கமான ஆட்கள் மீதான வழக்குகள் இன்னும் அதனால்தான் நிலுவையில் உள்ளது. குட்கா வழக்காக இருந்தாலும் சரி ஐடி வழக்காக இருந்தாலும் சரி. அதெல்லாம் நிலுவையில்தான் இருக்கிறது. இந்த வழக்கில் எல்லாம் டெல்லி என்ன செய்கிறது என்று பார்க்க வேண்டும். எடப்பாடிக்கு செக் வைக்க இது போன்ற வழக்குகளை பாஜக பயன்படுத்துகிறதா என்று பார்க்க வேண்டும். எது வேண்டுமானாலும் நடக்கலாம். பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும், என்று குறிப்பிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications