"அது" நடந்திருக்க கூடாது.. குபீர்னு கொட்டிய "கரிசனம்".. எடப்பாடி பழனிசாமிக்காக பதறியது.. "ஆ, இவரா?"
சென்னை: முக்குலத்தோரை சமாதானப்படுத்தி, அவர்களின் ஆதரவை பெற வேண்டுமானால், எடப்பாடி பழனிசாமி இன்னும் நிறையவே மெனக்கெட வேண்டும் போல தெரிகிறது.. நேற்று பசும்பொன்னில் நடந்த சம்பவம் இதைத்தான் உணர்த்தியிருக்கிறது.
வடக்கே வன்னியர் ஓட்டுக்களும், மேற்கே கவுண்டர் ஓட்டுக்களும், தெற்கே முக்குலத்தோர் ஓட்டுக்களும் என அனைத்தும் கலந்ததுதான், அதிமுக என்ற ஆலமரம். மறைந்த முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா காலம்வரை, "சாதி முத்திரை" உட்பட எந்தவித அடையாளமும் விழுந்துவிடாமல், அனைவருக்குமான கட்சியாக விளங்கி கொண்டிருந்தது அதிமுக

ஆனால், சமீபகாலமாகவே, எடப்பாடி பழனிசாமி ஆட்சி காலத்திலிருந்தே, கொங்கு கோட்டையாகிவிட்டதால், அதிருப்தியின் பிடியில் சிக்கியது அதிமுக.. இறுதியில், சசிகலா, தினகரன், ஓபிஎஸ் போன்றோரை தூக்கியெறிந்து, முக்குலத்தோர் மக்களின் கோபத்தையும் எடப்பாடி பழனிசாமி சம்பாதித்து கொள்ள நேரிட்டதை மறுக்க முடியாது.
மதுரை மாநாடு: எனினும், முக்குலத்தோர் ஆதரவு இல்லாமல், எந்த தேர்தலையும் சந்திப்பது கடினம் என்பதை, மெதுவாகவே எடப்பாடி உணர்ந்து கொண்டுள்ளார் போலும். அதனால்தான், கடந்த 2 வருடம் இல்லாமல், மிகுந்த எதிர்பார்ப்புடன் பசும்பொன்னிற்கு நேற்றைய தினம் சென்றார்.. மதுரை மாநாட்டை நடத்தியபோதுகூட, இந்த அளவுக்கு எடப்பாடி பழனிசாமிக்கு எதிர்ப்புகள் இல்லை.. ஆனால், நேற்றைய தினம் ஒட்டுமொத்த அதிமுகவே அதிர்ச்சிக்குள்ளாகிவிட்டதாம்.
"தேர்தல் ஆதாயத்திற்காக வர வேண்டாம், பசும்பொன்னில் இருந்து வெளியேறுங்கள், எடப்பாடி பழனிசாமி ஒழிக, இபிஎஸ் ஒழிக, சசிகலாவை ஏமாற்றிய எடப்பாடி, தேவர் வாக்கை பெற வந்த எடப்பாடி" போன்ற முழக்கங்கள் எடப்பாடி பழனிசாமியை வட்டமிட்டன..
பேட்டி: ஆனால், எதைப்பற்றியுமே கவலைப்படாமல், தேவர் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்திவிட்டு, "தேசியமும் தெய்வீகமும் தனது இரு கண்கள் என வாழ்ந்தவர் முத்துராமலிங்கத் தேவர்" என்று பேட்டியையும் தந்துவிட்டு, அங்கிருந்து கிளம்பினார் எடப்பாடி பழனிசாமி. அப்போதும்கூட, திரும்பி செல்லும்போது, எடப்பாடி பழனிசாமி கார் மீது செருப்பு வீச்சு நடந்ததை யாரும் எதிர்பார்க்கவில்லை.
அதிமுக ஆட்சியில் 10.5 சதவீத இட ஒதுக்கீடு அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ராமேஸ்வரத்தை சேர்ந்த முருகவேல் மற்றும் பொதிகுளத்தை சேர்ந்த ராஜீவ் காந்தி ஆகிய 2 பேரும், எடப்பாடி பழனிசாமி சென்ற வாகனம் மீது செருப்பு மற்றும் கற்களை வீசியது, அதிமுகவுக்கே பெருத்த அதிர்ச்சியை தந்துவிட்டது.

வருத்தம்: இப்படிப்பட்ட சூழலில், ஓபிஎஸ் தன்னுடைய வருத்தத்தை பதிவு செய்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், நான் ஏற்கனவே எனது சமூக வலைதளங்களின் மூலமாக அறிவுறுத்தி இருந்தேன்... பசும்பொன் என்னும் புண்ணிய பூமிக்கு வருபவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு தொந்தரவோ துயரத்தையோ தரக்கூடாது என்பது என்னுடைய வேண்டுகோளாக உள்ளது என குறிப்பிட்டிருந்தேன். ஆனாலும், இப்படி நடந்துவிட்டது. இப்படி ஒரு சம்பவமே நடந்திருக்கக்கூடாது'' என்றார் ஓபிஎஸ்.












Click it and Unblock the Notifications