விடுவோமா? ஓபிஎஸ்ஸுக்கு போட்டியாக மீண்டும் மா.செக்கள் கூட்டம்.. தேதி குறித்தார் எடப்பாடி பழனிசாமி!
சென்னை: ஓபிஎஸ் அணி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெற உள்ள நிலையில், அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் வரும் ஜூலை 5ஆம் தேதி அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2024 மக்களவைத் தேர்தலை நோக்கி அனைத்து கட்சிகளும் நடைபோடத் தொடங்கியுள்ளன. தேர்தலுக்கு இன்னும் ஓராண்டிற்கும் குறைவான நாட்களே இருக்கும் நிலையில், தனது பலத்தை நிரூபிக்கும் வேலைகளில் இறங்கியுள்ளார் எடப்பாடி பழனிசாமி. மூட்டு வலியில் இருந்து ஓரளவுக்கு மீண்டுள்ள ஈபிஎஸ், மீண்டும் கட்சிப் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார்.
ஏற்கனவே உறுப்பினர் சேர்க்கையை அதிகப்படுத்த கட்சியினருக்கு உத்தரவு பிறப்பித்துள்ள எடப்பாடி பழனிசாமி, மாவட்ட செயலாளர்களின் நகர்வுகளை நேரடியாகவே கவனித்து வருகிறார். அடுத்தகட்டமாக, பூத் கமிட்டிகளை வலுப்படுத்துவது, வார்டு வார்டாக கூட்டம் நடத்தி மக்களிடம் திமுக ஆட்சியின் குறைகளை சுட்டிக்காட்டுவது உள்ளிட்ட அறிவுறுத்தல்களும் பறந்திருக்கின்றன.
எல்லா மாவட்டங்களிலும் திமுக அரசுக்கு எதிராக கூட்டங்கள் நடத்தி மக்கள் மன்றத்தின் ஆதரவைப் பெறும் முயற்சியை தீவிரப்படுத்த எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார். இதுகுறித்து முக்கிய முடிவுகளை எடுப்பதற்காக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்டவுள்ளார் எடப்பாடி பழனிசாமி.
அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் வரும் ஜூலை 5ஆம் தேதி காலை 9 மணிக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
ஓபிஎஸ் அணியினர் விரைவில் கொங்கு மண்டலத்தில் மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளனர். ஏற்கனவே திருச்சியில் பிரமாண்ட மாநாட்டை நடத்திய நிலையில் அடுத்தகட்டமாக கொங்கு மண்டலத்தில் மாநாடு நடத்தத் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், மாவட்ட செயலாளர்களுடன் ஓபிஎஸ் நாளை (ஜூலை 1) சென்னையில் ஆலோசனை நடத்த உள்ளார்.
இந்நிலையில் தான், அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஜூலை 5ல் நடைபெறும் என ஈபிஎஸ் தரப்பு அறிவித்துள்ளது. ஓபிஎஸ் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடத்தும் போதெல்லாம் எடப்பாடி தரப்பும் கூட்டம் நடத்துவது வழக்கம். அந்த வகையில் இப்போதும் மாசெக்கள் கூட்டம் நடைபெற உள்ளது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை பற்ற வைத்துள்ளது.













Click it and Unblock the Notifications