பஞ்சாயத்து இருக்கு.. அத்தனை பிளஸ் இருந்தும் பெரிய ‘ட்விஸ்ட்’.. சீற தயாராகும் எடப்பாடி! 3 பாயின்ட்ஸ்!
மா.செக்கள் கூட்டத்தில் இந்த 3 விஷயங்களைப் பற்றித்தான் எடப்பாடி பழனிசாமி தரப்பு ஆலோசிக்கப் போகிறதாம்.
சென்னை : எடப்பாடி பழனிசாமியின் கோட்டை என்று மார்தட்டிப் பேசிய கொங்கு மண்டலத்திலேயே அவர் படுதோல்வியை சந்தித்துள்ளார், ஒற்றை தலைமை எடுபடவில்லை என்று வாதத்தை ஓபிஎஸ் தரப்பினர் கடுமையாக ஒலித்து வருகின்றனர். இந்நிலையில், மார்ச் 9ஆம் தேதி நடைபெற உள்ள மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அதிரடி காட்டப்போகிறாராம் ஈபிஎஸ்.
அதிமுகவுக்கு பலம் வாய்ந்தது எனக் கூறப்பட்ட கொங்கு கோட்டையிலேயே பெரிய அளவில் திமுக ஓட்டை போட்டது, எடப்பாடி பழனிசாமிக்கு சிக்கலை ஏற்படுத்திவிட்டது.
ஆளுங்கட்சியான திமுகவுக்கு டஃப் கொடுத்து அனைத்து வகைகளிலும் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் செயல்பட்ட போதும் இப்படிப்பட்ட தோல்வி அமைந்தது அதிமுகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இடைத்தேர்தல் முடிவைத் தொடர்ந்து, அதிமுகவின் ஜூலை 11 பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உயர் நீதிமன்றத்தை நாடியுள்ள பரபரப்பான சூழலில் வரும் 9ஆம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.

படுதோல்வி
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் 1,10,556 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் தென்னரசு 43,981 வாக்குகளும் பெற்றனர். இருவருக்குமான வித்தியாசம் 66,575 வாக்குகள். கடந்த முறை ஈரோடு கிழக்கில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட தமாகா வேட்பாளர் யுவராஜா 8 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்ற நிலையில், தற்போது அதிமுக வேட்பாளர் தென்னரசு 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்திருப்பது அதிமுகவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

25 சதவீதம் தான்
கொங்கு மண்டலத்தில், அதிமுக பலம் வாய்ந்தது என்றும், எடப்பாடி பழனிசாமி செல்வாக்கு இருக்கிறது என்றும் ஈபிஎஸ் தரப்பினர் கூறி வந்த நிலையில், அதிமுக 25% வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியடைந்தது எடப்பாடி பழனிசாமி தரப்பினரை அதிர்ச்சி அடைய வைத்தது. இந்த தேர்தல் தோல்விக்கு பல்வேறு காரணங்களை எடப்பாடி பழனிசாமி பட்டியலிட்டார். ஈரோடு கிழக்கு தொகுதி மக்களுக்கு திமுகவினர் பணமும், பரிசுப் பொருட்களும் கொடுத்ததாகவும், வாக்காளர்களை ஆடு மாட்டை அடைப்பது போல் பட்டியில் அடைத்ததாகவும் குற்றம்சாட்டினார். வாக்கு பதிவின்போது இரட்டை இலைக்கு வாக்களித்தால், கை சின்னத்தில் லைட் எரிவதாகவும் குற்றம்சாட்டினார்.

ஓபிஎஸ் குற்றச்சாட்டு
ஆனால், ஓபிஎஸ் தரப்பினர், எடப்பாடி பழனிசாமி தங்களை மதிக்காமல், ஓபிஎஸ் பிரச்சாரம் செய்வதாக அறிவித்தும், அவரை மரியாதைக்காக கூட அழைக்காமல் புறக்கணித்து அதிமுகவின் வீழ்ச்சிக்கு எடப்பாடி பழனிசாமி காரணமாகிவிட்டார் என்றும், அதிமுகவில் ஏற்பட்ட ஓபிஎஸ் - ஈபிஎஸ் பிரிவு தொண்டர்களை சோர்வடையச் செய்துவிட்டது என்றும், ஈபிஎஸ் முதல்வரான பிறகு 8 தேர்தல்களில் தோல்விகளைச் சந்தித்திருக்கிறது, இனியும் அதிமுகவுக்கு அவர் தலைமை வகிக்கக்கூடாது என்றும் வாதங்களை முன்வைத்துள்ளனர்.

முதலில் பின்வாங்கிய மாஜி
எனினும், அதிமுக நிர்வாகிகள் கடைசி நேரத்தில் தேர்தல் பணிகளில் சுணக்கம் காட்டியது, கூட்டணி பலம் இன்மை, அமைச்சர்கள் 'தேவையான' பணிகளைச் செய்யாதது என்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் தான் இத்தகைய பெரிய வாக்கு வித்தியாசத்திற்குக் காரணம் என்பதை ஈபிஎஸ் கண்டறிந்துள்ளாராம். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் முன்னாள் அமைச்சர் கேவி ராமலிங்கத்தை நிறுத்தவே ஈபிஎஸ் விரும்பினார். ஆனால், இரட்டை இலை சின்னம் கிடைக்காமல் போனால், டெபாசிட் போய்விடும் என பயந்து கேவி ராமலிங்கம் பின்வாங்கினார்.

எல்லா அமைச்சர்களும்
இதையடுத்தே தென்னரசு வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அதிமுக எடப்பாடி பழனிசாமி அணிக்குள்ளேயே தென்னரசு வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டதற்கு எதிர்ப்புகள் இருந்தாலும், ஈபிஎஸ் தரப்பின் பலத்தை நிரூபித்தே ஆக வேண்டிய களம் என்பதால் எல்லா முன்னாள் அமைச்சர்களும் ஈரோடு கிழக்கில் களமிறக்கப்பட்டனர். உச்ச நீதிமன்றம் மூலம் இரட்டை இலை சின்னம் கிடைத்ததால், அதிமுகவினரும் நம்பிக்கையுடனே வேலை பார்த்தனர். வாக்குப்பதிவுக்கு முன்னதாக பொதுக்குழு வழக்கிலும் சாதகமான தீர்ப்பு வந்ததும் ஈபிஎஸ்ஸுக்கு பிளஸ்ஸாக அமைந்தது. ஆனாலும் எதிர்பார்த்த அளவுக்கு சோபிக்கவில்லை.

பாஜக உள்ளடி
சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் பாஜக கொடியை பயன்படுத்த வேண்டாம், பாஜக நிர்வாகிகளை அழைத்துச் செல்ல வேண்டாம் என்பது உள்ளிட்ட ஆர்டர்கள் எடப்பாடி பழனிசாமியிடம் இருந்து பறந்தன. இதனால், பாஜகவினர் கடுமையாகவே அப்செட் ஆகினர். அண்ணாமலை ஒரு நாள் பிரச்சாரம் மேற்கொண்டிருந்தாலும், அதை அவர் விருப்பமின்றியே செய்ததாக அதிமுகவினரே கூறுகின்றனர். எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுகவினர் ஈரோடு கிழக்கில் பாஜக பிரச்சாரம் செய்வதையே விரும்பவில்லை என்ற தகவலால், பாஜகவினரின் சப்போர்ட்டும் பெரிதாக கிடைக்கவில்லை என்கிறார்கள் அதிமுகவினர்.

மா.செ.க்கள் கூட்டம்
இந்த நிலையில்தான், அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார். வருகிற 9ஆம் தேதி சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மா.செக்கள் கூட்டம் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் ஏற்பட்ட பெரிய தோல்வி தொடர்பாகவும், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் ஜூலை 11 பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து தொடர்ந்த வழக்கு உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

முக்கிய முடிவுகள் 3
குறிப்பாக, எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு நடைபெற்ற 8 தேர்தல்களில் அதிமுக தொடர்ந்து தோல்வியையே சந்தித்துள்ளது பற்றி ஓபிஎஸ் தரப்பு விமர்சித்து வரும் நிலையில், அந்த விவகாரம் அதிமுக தொண்டர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தி விடக்கூடாது என்பது பற்றியும் மேலும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையும் அதிமுக ஒற்றுமையின்மையால் தான் தோல்வியடைந்தது எனக் கூறியிருப்பது பற்றியும், ஐகோர்ட்டில் ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு பற்றியும் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்கிறார்கள் அதிமுக வட்டாரத்தினர்.












Click it and Unblock the Notifications