57 கணினிகளில் 80 டெண்டர்கள்.. சிஏஜி அறிக்கையால் ஈபிஎஸ்க்கு சிக்கல்!பாயிண்டை பிடித்த மா சுப்பிரமணியன்
சென்னை: அதிமுக ஆட்சியில் ஊழல் தலைவிரித்தாடி உள்ளது என வெளியான சிஏஜி அறிக்கையின் அடிப்படையில் அமைச்சர் மா சுப்பிரமணியன் பல்வேறு விஷயங்களை கூறியுள்ளார். குறிப்பாக 2019-2021 காலக்கட்டத்தில் 87 கணினிகளை பயன்படுத்தி 80க்கும் அதிகமான டெண்டர் போடப்பட்டுள்ளதாக சிஏஜி அறிக்கையை மேற்கோள் கூறியுள்ளார். இதனால் எடப்பாடி பழனிச்சாமி புதிய சிக்கலை எதிர்கொள்ளலாம் என கூறப்படுகிறது.
சிஏஜி எனும் தலைமை கணக்கு தணிக்கை அறிக்கை கடந்த வெள்ளிக்கிழமை தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கையில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக ஆட்சியில் பல்வேறு விதிமீறல்கள் நடந்ததாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

குறிப்பாக முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி வைத்திருந்த நெடுஞ்சாலை துறை தொடர்பான டெண்டர்களில் விதிமீறல்கள் ஏராளமாக நடந்து இருப்பதாக கூறப்பட்டு இருந்தது. மேலும் பிரதமர் மந்திரி வீடு கட்டும் திட்டம், இலவச மடிக்கணினி திட்டம் உள்பட பல திட்டங்களில் நிதிகள் வீணடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அமைச்சர் பேட்டி: இந்நிலையில் தான் சென்னையில் தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது சிஏஜி அறிக்கையின் அடிப்படையில் முந்தைய அதிமுக அரசை மா சுப்பிரமணியன் கடுமையாக விமர்சனம் செய்தார். மேலும் அதிமுக ஆட்சியில் நடந்த முறைகேடுகள் குறித்து சிஏஜி அறிக்கை விபரங்களை அவர் பட்டியலிட்டார். இதுபற்றி மா சுப்பிரமணியன் கூறியதாவது:
57 கணினி பயன்பாடு: அதிமுக ஆட்சியில் நெடுஞ்சாலை துறையில் 2019-2021 வரை 57 கணினிகளை பயன்படுத்தி 80க்கும் மேற்பட்ட டெண்டர் போடப்பட்டுள்ளது. ஒரே கணினிகளில் இருந்து ஊழியர்களை பயன்படுத்தி டெண்டர் கோரப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சியில் ஊழல் எப்படி தலைவிரித்து ஆடியது என்பதை சிஏஜி தணிக்கை அறிக்கையில் விளக்கி உள்ளது. அதிமுக ஆட்சியில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் வெவ்வேறு பெயர்களில் மெகா ஊழலை சிஏஜி அறிக்கை அம்பலப்படுத்தி உள்ளது.
பிரதமர் வீடு கட்டும் திட்டம்: பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் விளம்பரம் வெளியிட்டதில் ரூ.2.18 கோடி முறைகேடு நடந்துள்ளது. அதோடு பட்டியலின மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்களை அடையாளம் காண்பதில் பெரும் முறைகேடு ஏற்பட்டதால், பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் சமூகநீதியை பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு சிதைத்துள்ளது. பழங்குடியினருக்கான 60 சதவீத வீடுகள் அந்த மக்களை சென்றடையவில்லை என சிஏஜி தெரிவித்துள்ளது. மேலும் கடந்த அதிமுக ஆட்சியில் தகுதியற்ற பயனாளிகளுக்கு 3,354 வீடுகள் முறைகேடாக ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் சி.ஏ.ஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் நடந்த முறைகேடு, மற்றும் ஊழல்களுக்கு சாட்சியாகும்.
மடிக்கணினி திட்டம்: மேலும் காவல்துறை கட்டுப்பாட்டறை நவீன மயமாக்கும் திட்டத்தில் கடந்த அதிமுக அரசின் அலட்சியத்தால் காவல்துறைக்கு ரூ.14.37 கோடி வீண் செலவு ஏற்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கை கட்டி காக்கும் காவல்துறையை நவீனப்படுத்துவதில் அக்கறை செலுத்தாமல் இருப்பதில் கவனமாக இருந்திருக்கிறது அதிமுக அரசு. அதோடு தமிழ்நாடு மின் உற்பத்தி பகிரமான கழகத்தை அதிமுக அரசு தவறாக பயன்படுத்தி உள்ளது. கடந்த அதிமுக அரசில், இலவச லேப்டாப் திட்டத்தில் ரூ.68.50 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. காலனி வழங்கும் திட்டத்தில் ரூ5.4 கோடி வீண் செய்யப்பட்டுள்ளது" என சாடியுள்ளார். இந்த சிஏஜி அறிக்கையின் மூலம் எடப்பாடி பழனிச்சாமிக்கு தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications