ஸ்டாலினும் ஓபிஎஸ்ஸும் ரகசிய சந்திப்பு! அதிமுகவை ஒடுக்க எந்த காலத்திலும் முடியாது.. எடப்பாடி பழனிசாமி
சென்னை: சட்டசபையில் அதிமுக எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை ஓபிஎஸ்ஸுக்கு ஒதுக்கப்பட்டதை கண்டித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது உண்ணாவிரத போராட்டத்தை முடித்துக் கொண்டு பேசுகையில் அதிமுகவை ஒடுக்க எந்த காலத்திலும் முடியாது என்றார்.
சட்டசபை எதிர்க்கட்சித் துணைத் தலைவராக இருந்த ஓபிஎஸ்ஸை அதிமுகவிலிருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கினார். இதனால் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவி, பொருளாளர் பதவி உள்ளிட்டவை பறிக்கப்பட்டது.
இதையடுத்து புதிய சட்டசபை எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஆர்.பி. உதயகுமார் நியமிக்கப்பட்டார். இது தொடர்பாக சபாநாயகர் அப்பாவுவிடம் கடிதம் கொடுக்கப்பட்டது. அவரும் சட்டசபை கூட்டத் தொடரின் போது முடிவு அறிவிக்கப்படும் என்றார்.
ஆத்தி.. இது அதுல்ல! பார்த்ததும் “பதறிய” எடப்பாடி அண்ட் கோ - கைது செய்ய வந்த “பிங்க்” நிற இலவச பஸ்
சட்டசபை கூட்டத் தொடர்
இந்த நிலையில் நேற்று முன் தினம் சட்டசபை கூட்டத் தொடர் தொடங்கியது. அப்போது ஓபிஎஸ்ஸின் இருக்கை மாற்றப்படாமல் இருந்தது. சபாநாயகரின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வள்ளுவர் கோட்டம்
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று காலை போராட்டம் தொடங்கியது. ஆனால் இதற்கு போலீஸார் அனுமதி தரவில்லை. ஆயினும் தடையை மீறி எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக எம்எல்ஏக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக அதிமுக எம்எல்ஏக்கள், நிர்வாகிகள், கட்சி தொண்டர்களை போலீஸார் கைது செய்தனர்.
தமிழகத்தில் அதிமுகவினர் போராட்டம்
கைது நடவடிக்கையை கண்டித்து தமிழகத்தில் அதிமுகவினர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு எழுந்தது. கைது செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் பேருந்துகளில் ஏற்றி ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் அடைத்து வைத்திருந்தனர். இந்த நிலையில் அங்கிருந்தபடியே உண்ணாவிரதத்தை ஜூஸ் குடித்து முடித்து வைத்தார்.
அதிமுகவை ஒடுக்க எந்த காலத்திலும் முடியாது
அப்போது அவர் கூறுகையில் அதிமுகவை ஒடுக்க எந்த காலத்திலும் முடியாது. அதிமுகவை வீழ்த்த நினைத்தால் முதல்வர் மு.க.ஸ்டாலின் தான் வீழ்ந்து போவார். அதிமுகவை ஒடுக்க நினைத்தால் அது எந்த காலத்திலும் நடக்காது. எம்.ஜி.ஆர் தோற்றுவித்து ஜெயலலிதா காத்த இயக்கம் அதிமுக. எத்தனை சோதனைகள் வந்தாலும் அதை கடந்து தமிழகத்தின் முதன்மை கட்சியாக திகழ்ந்தது அதிமுக என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். மேலும் ஸ்டாலினும் ஓபிஎஸ்ஸும் அரை மணி நேரம் பேசிக் கொண்டிருந்தனர் என்றும் இபிஎஸ் குற்றம்சாட்டினார்.