ரேஷன் கடைகளில் இலவச மாஸ்க்.. அரசு பரிசீலனை.. முதல்வர்
சென்னை: ரேஷன் கடைகளில் இலவசமாக மாஸ்க் வழங்குவது குறித்து அரசு பரிசீலனை செய்கிறது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் ஆலோசனை நடத்திய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தொற்று நோய் இன்று தமிழகத்திலும் பரவியுள்ளது. அதை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு அனைத்து விதமான நடவடிக்கையையும் எடுத்து வருகிறது.
தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இந்த வைரஸ் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டதன் விளைவாக நோய் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் சற்று தொற்று அதிகரித்துள்ளன. அதை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

வைரஸ் தொற்று
சென்னை மாநகராட்சி பகுதியில் வைரஸ் தொற்றை என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்த ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சென்னையில் தொற்று அதிகமாக உள்ளது குறித்து ஆலோசிக்கப்பட்டது. குடிசை பகுதிகள் நெருக்கமாக உள்ள பகுதி என்பதால் எண்ணிக்கை கூடுதலாக உள்ளது. அதை கட்டுப்படுத்த கடும் முயற்சி எடுத்து வருவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

கொரோனா தொற்று
கொரோனாவை தடுக்க அதிகமான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நாளொன்றுக்கு 13 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. மாநகராட்சி பகுதியில் நாளொன்றுக்கு 4 ஆயிரம் பேருக்கு பரிசோதனை நடத்தப்படுகிறது. அப்போது யாருக்கு கொரோனா தொற்று உறுதியாகிறதோ அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கும் பரிசோதனை செய்யப்படுகிறது.

கொரோனா
அவ்வாறு பரிசோதனையில் அவர்களுக்கும் கொரோனா இருந்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதனடிப்படையில் 23,495 பேர் தொற்று கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் நோய் குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 13, 357 பேர் ஆவர், அதாவது 56 சதவீதம் பேராவர். தற்போது சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 10138 ஆகும்.

பிசிஆர்
இறந்தவர்களின் எண்ணிக்கை 184 ஆகும். மருத்துவர்கள், செவிலியர், சுகாதார பணியாளர்களின் சீரிய பணிகளால் குணமடைந்தோர் சதவீதம் 56 ஆக உள்ளது. தமிழகத்தில் உணவு பஞ்சம் இல்லை. அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கின்றன. தமிழகத்தில் 2.71 லட்சம் பிசிஆர் கருவிகள் 43 பரிசோதனை மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

வென்டிலேட்டர்
தமிழகத்திற்கு இதுவரை 12.56 லட்சம் பிசிஆர் கருவிகள் வந்துள்ளன. வெண்டிலேட்டர் பயன்படுத்தக் கூடிய அளவுக்கு தமிழகத்தில் கொரோனா நோய் முற்றவில்லை. எனினும் இந்தியாவிலேயே அதிக வென்டிலேட்டர் உள்ள மாநிலம் தமிழகம்தான். தமிழகத்தில் 3,371 வென்டிலேட்டர்கள் உள்ளன. ரேஷன் கடைகளில் இலவசமாக மாஸ்க் வழங்க பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது என்றார்.












Click it and Unblock the Notifications