இதுதான் அரசியல் நாகரீகம்.. Bye, Bye ஸ்டாலினை திடீரென தவிர்த்த எடப்பாடி பழனிசாமி.. நோட் பண்ணீங்களா!
சென்னை: கடந்த 2 நாட்களாக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது பேச்சில் Bye, Bye ஸ்டாலின் என்று கூறுவதை நிறுத்தி உள்ளார். திருவாரூர், மன்னார்குடியில் பேசிய எடப்பாடி பழனிசாமி அந்த வாக்கியத்தை கூறாமல் தவிர்த்து உள்ளார்.
'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' எழுச்சிப்பயணம் மேற்கொள்ளும் அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி. கடந்த 3 நாட்களாக டெல்டா மாவட்டங்களில் தீவிர பயணம் மேற்கொண்டு வருகிறார். திருவாரூர், மன்னார்குடி, திருவிடைமருதூர் மற்றும் கும்பகோணம் பகுதிகளில் அவர் பிரச்சாரம் செய்தார்.

இந்த பயணத்தில் எடப்பாடி பழனிசாமி தனது பேச்சில் Bye, Bye ஸ்டாலின் என்று கூறுவதை நிறுத்தி உள்ளார். முதல்வர் ஸ்டாலின் உடலநிலை சரியில்லாமல் மருத்துவமனையில் உள்ளார். 3 நாட்கள் அவர் மருத்துவமனையில் ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறி வருகின்றனர் . இதன் காரணமாக அவர் ஓய்வு எடுத்து வருகிறார். இப்படிப்பட்ட நேரத்தில் Bye, Bye ஸ்டாலின் என்று கூறுவது சரியாக இருக்காது என்று எடப்பாடி பழனிசாமி அதை நிறுத்தி உள்ளார்.
எடப்பாடி பழனிசாமி பேச்சு
முன்னதாக மன்னார்குடி தொகுதிக்குட்பட்ட மேலராஜ வீதியில் பெருமளவு குழுமியிருந்த மக்கள் கூட்டத்திடையே உரையாற்றிய இபிஎஸ்., ''மன்னார்குடி விவசாயம் நிறைந்த பகுதி. இந்த பூமியில் வாழ்பவர்கள் விவசாயத்தை நம்பித்தான் வாழ்கிறார்கள். ஆனால், விவசாய மக்களைப் பற்றி கவலைப்படாமல் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டங்களுக்கு விவசாய நிலங்களை எடுக்க ஸ்டாலின் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டார். அதிமுக அரசு அமைந்தபிறகு விவசாயிகளின் கோரிக்கை ஏற்று பாதுகாக்கபப்ட்ட வேளாண் மண்டலம் கொண்டுவந்து நிலங்களை அதிமுக பாதுகாத்தது. அதிமுக எப்போதும் விவசாயிகளுக்கு நன்மை செய்கிற அரசு. எந்தக் காலத்திலும் டெல்டா நிலங்களை எந்த ஒரு திட்டத்துக்கும் யாராலும் எடுக்க முடியாத அளவுக்கு சட்டப்பாதுகாப்பு கொடுத்திருக்கிறோம்.
சுரங்க விரிவாக்கத்துகாக வடசேரி பகுதியில் முயற்சி செய்தனர். ஏற்கனவே பாதுகாக்கப்பட்ட வேளாண்மண்டலமாக அதிமுக அறிவித்ததால் இந்த பகுதி பாதுகாக்கப்பட்டது. வடசேரி பகுதியைச் சேர்ந்த டி.ஆர்.பாலுவும் பழனிமாணிக்கமும் இதற்கு முயற்சி செய்தார்கள். எந்த அரசு நல்ல அரசு என்பதை நீங்களே சீர்தூக்கிப் பாருங்கள்.
அதிமுக ஆட்சியில் பயிர்க்கடனை இரண்டுமுறை தள்ளுபடி செய்தோம். இன்று வங்கியில் பயிர்க் கடன் கொடுக்க மறுக்கிறார்கள், சிபில் ஸ்கோர் கேட்கிறார்கள், இந்த திமுக தட்டிக்கேட்கத் திறனற்ற அரசாக உள்ளது. திமுக ஆட்சியில் 53 ஆயிரம் கோடி கடன் கொடுத்ததாக சொல்கிறார்கள், அதெல்லாம் பச்சை பொய். வருடாவருடம் கொஞ்சமாகக் கொடுப்பார்கள், அதை திருப்பி கட்டினால்தான் மீண்டும் கடன் கிடைக்கும்.
மேட்டூர் அணை நீர் கடைமடைக்கு சேரவில்லை என்று இன்று காலை விவசாயிகள் என்னிடம் மனு கொடுத்தனர். இந்த அரசு தூர்வாருவதிலும் ஊழல் செய்துள்ளனர். முறையாக தூர்வாரவில்லை. அதிமுக ஆட்சியில் தான் தூர்வாருவதை முழுமையாக செய்தோம், இதற்கென அதிகாரிகளை நியமித்தோம், பொறியாளர்களை நியமித்து கண்காணித்தோம். ஏரி, குளம் குட்டை எல்லாம் நீர் தேங்குவதற்கு குடிமராமத்துத் திட்டம் கொண்டுவந்தோம். தூர்வாரி அந்த வண்டல் மண்ணை விவசாயிகளுக்கு இலவசமாக கொடுத்தோம், இதனால் ஏரி ஆழமாச்சு, விளைச்சல் நல்லா கிடைச்சது. இந்த ஆட்சியில் எல்லாத்தையும் நிறுத்திட்டாங்க.
டெல்டா மாவட்டம் இது, நானும் டெல்டாக்காரன் என்கிறார் ஸ்டாலின். மேட்டூரில் தண்ணீர் திறந்துவிட்டார், விவசாயிகள் எல்லாம் ஆர்வமாக இருந்தனர். ஆனால், அறுவடை செய்யும்போது தண்ணீர் இல்லாமல் பயிர் காய்ந்துவிட்டது. கர்நாடகத்தில் பேசி இருக்கணும். பயிர்க்காப்பீடு திட்டத்தில் விவசாயிகள் சேர்க்கப்படவில்லை, இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம். பேரிடர் நிவாரணம் கூட கொடுக்கவில்லை. அதிமுக ஆட்சியில் ஒவ்வொரு ஆண்டும் பயிர்க்காப்பீட்டில் விவசாயிகளைச் சேர்த்து அதிக இழப்பீடு அதாவது 12 ஆயிரம் கோடி பெற்றுக்கொடுத்தோம்.
கஜா புயல் உள்ளிட்ட பல்வேறு புயல்களால் பயிர்கள் சேதம் அடைந்தது. அதற்கேற்றவாறு நிவாரணம் கொடுத்தோம். இரண்டரை ஏக்கர் அளவுக்குத்தான் நிவாரணம் வழங்க முடியும். அதிமுக அரசில் ஏக்கரை கணக்கிடாமல் முழு நிவாரணம் வழங்கினோம். 24மணிநேரம் மும்முனை மின்சாரம் கொடுத்தோம். திருவாரூரில் நான் தங்கியிருந்தபோது அடிக்கடி கரன்ட் கட் ஆகுது. திமுக ஆட்சி வரும்போதெல்லாம் கரன்ட் கட் ஆகிறது.
விவசாயிகளுக்கு உரம் சரியாகக் கிடைப்பதில்லை திமுக ஆட்சியில். அறுவடை செய்து நெல் கொள்முதல் நிலையம் கொண்டுபோனால் வாங்குவதற்கு காலதாமதம் ஆகிறது. 18 ஆயிரம் நெல் மூட்டைகள் திறந்தவெளியில் அடுக்கியுள்ளனர். மழையில் நனைந்தால் நஷ்டம் ஏற்படும். அதிமுக ஆட்சியில் உடனுக்குடன் கொள்முதல் செய்து கூலியை உடனடியாகக் கொடுத்தோம். திமுக விவசாயிகள் விரோத ஆட்சி, விவசாயிகள் என்றாலே ஸ்டாலினுக்கு கசக்குது.
விவசாயத் தொழிலாளர்களுக்கு பசுமை வீடுகள் கொடுத்தோம், இலவச ஆடு, மாடு, கோழி, உழவர் பாதுகாப்பு திட்டம் கொடுத்தோம். முதியோர் உதவித்தொகை, சட்டமன்றத்தில் 110 விதியின்கீழ் அறிவித்து 5 லட்சம் முதியோருக்கு உதவித்தொகை கொடுத்தோம்.
உங்களுடன் ஸ்டாலின் என்று நோட்டீஸ் கொண்டுவருகிறார்கள். 46 திட்டங்களை 45 நாள்களில் தீர்த்துவைப்பாராம். அப்படி என்றால் இந்த நான்கு ஆண்டுகளில் என்ன செய்தீர்கள்? இன்னும் 8 மாதம்தான் இருக்கு, அதற்குள் எப்படி தீர்த்து வைப்பீர்கள். மக்களை ஏமாற்றும் நாடகம். ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது புகார் பெட்டி திட்டம் கொண்டுவந்தார். ஆட்சி அமைந்ததும் மனுக்களுக்கு தீர்வு கொடுப்பேன் என்றார், அப்புறம் எதுக்கு இது?, என்று எடப்பாடி பழனிசாமி பேசி உள்ளார்.












Click it and Unblock the Notifications