ஏங்க.. இதுக்கு என்ன சொல்றீங்க.. ரிசல்ட் நாள் அதுவுமா.. திமுக மீது எடப்பாடி பழனிசாமி வீசிய "டமார்"
எடப்பாடி பழனிசாமி திமுக அரசுக்கு முக்கிய கோரிக்கை வைத்துள்ளார்
சென்னையில் வாக்குப்பதிவின்போது ஒருவரை தாக்கிய வழக்கில் மாஜி அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.
திமுகவை சேர்ந்த நரேஷ் என்பவர் அளித்த புகாரின் பேரில் சென்னை தண்டையார் பேட்டை போலீசார், ஜெயக்குமார் உள்பட 40 பேர் மீது வழக்குப்பதிவு செய்து இருந்தனர்.
தாக்குதல், கலகம் செய்ய தூண்டுதல், கொலை மிரட்டல், ஆபாசமாக திட்டுதல் உள்ளிட்ட 10 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

ஜெயக்குமார்
இதற்கு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். இதுபற்றி செய்தியாளர்களிடம் சொல்லும்போது, கள்ள ஓட்டு போட முயன்றவரை காவல் துறையில் ஒப்படைத்தது குற்றமா? முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தது தவறு என முதல்வர் சொல்கிறாரா? எதையும் சட்டரீதியாக சந்திக்க அதிமுக தயாராகவே உள்ளது" என்றார். இதையடுத்து இன்று நடக்க போகும் வாக்கு எண்ணிக்கை குறித்து எடப்பாடியிடம் கருத்து கேட்கப்பட்டது..

குற்றச்சாட்டுகள்
அதற்கு எடப்பாடி பழனிசாமி, "வெற்றி பெறும் அதிமுக வேட்பாளர்களை தோல்வியுற்றதாக அறிவிக்க வாய்மொழி உத்தரவுகள் வந்துள்ளதாக ஏற்கனவே தகவல் வந்துவிட்டது.. இதுக்கு என்ன சொல்றீங்க? ஒவ்வொரு வார்டு முடிவுகளையும் அறிவித்து, சான்றிதழ்களை வழங்கிய பிறகே அடுத்த வார்டு வாக்குகளை எண்ண வேண்டும்" என்றார்.

அராஜக போக்கு
கடந்த ஒரு மாத காலமாகவே திமுக அராஜக போக்கை கடைப்பிடிப்பதாகவும், வாக்காளர்களுக்கு பரிசுப்பொருட்கள், உள்ளிட்டவற்றை தருகிறது என்றும் அதிமுக மேலிடம் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது.. திமுகவின் இந்த போக்கை கையும் களவுமாக பிடித்து வீடியோ ஆதாரங்களுடன் தந்தாலும் போலீசார் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என்றும், காவல்துறை ஏவல்துறையாக செயல்பட்டு வருவதாகவும் எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் உள்ளிட்டோர் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர்.

புது கோரிக்கை
பொங்கல் பரிசு தொகுப்பில் 500 கோடி ரூபாய் திமுக ஊழல் செய்துள்ளது என்று எடப்பாடி பழனிசாமி சொல்லி வரும் நிலையில்,குற்றம் புரிபவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் துணைபோவது வேதனையளிக்கிறது என்று அடுத்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.. இன்றைய தினம் வாக்கு எண்ணிக்கை நடப்பதால், ஒவ்வொரு வார்டு முடிவுகளையும் அறிவித்து, சான்றிதழ்களை வழங்கிய பிறகே அடுத்த வார்டு வாக்குகளை எண்ண வேண்டும் என்ற எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கைக்கு, அரசு எந்த அளவுக்கு செவிசாய்க்கும் என்று தெரியவில்லை.












Click it and Unblock the Notifications