2ஆம் கட்ட பிரசாரத்தைத் தொடங்கும் எடப்பாடி பழனிசாமி.. அமைச்சர்கள் தொகுதிகளை குறிவைக்கும் ஸ்டாலின்
சென்னை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரண்டாம்கட்ட பிரசாரத்தை இன்று தொடங்கும் நிலையில், அமைச்சர்கள் போட்டியிடும் தொகுதிகளைக் குறிவைத்து திமுக தலைவர் ஸ்டாலின் பிரசாரம் செய்கிறார்.
தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி ஒரேகட்டமாகச் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களிடம் கடந்த 12ஆம் தேதி முதல் வேட்பு மனுக்கள் பெறப்படுகிறது.
இந்தத் தேர்தலில் பாமக, பாஜக, தமாக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து அதிமுக போட்டியிடுகிறது. அதேபோல மறுபுறம் காங்கிரஸ், இடதுசாரிகள், மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகளுடன் திமுக களமிறங்குகிறது.

எடப்பாடி பழனிசாமி
இதில் அதிமுக சார்பில் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். அதன்பின்னர் உடனடியாக எவ்வித தாமதமும் இன்றி அவர் தனது தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கினார். எடப்பாடி தொகுதியில் தனது பிரசாரத்தைத் தொடங்கிய அவர், வேட்பாளர் பட்டியல் அறிவிப்புக்குத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பிரசாரத்தை மேற்கொண்டார். கடந்த வாரம் அதிமுகவின் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

இரண்டாம்கட்ட பிரசாரம்
அதைத்தொடர்ந்து 12ஆம் தேதியே வாழப்பாடியில் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளருக்கு வாக்கு சேகரித்தார். கடந்த திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்த அவர் மாலை எடப்பாடி தொகுதியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். இந்நிலையில், முதல்வர் பழனிசாமி இன்று தனது இரண்டாம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார். இன்று காலை திருத்துறைப்பூண்டியில் பிரசாரத்தைத் தொடங்கும் அவர் வேதாரண்யம், நாகை, பூம்புகார், மயிலாடுதுறை, சீர்காழி, காட்டுமன்னார்கோவில், சிதம்பரம் தொகுதிகளில் இரட்டை இலைக்கு வாக்குகளைச் சேகரிக்கிறார்.

ஸ்டாலின்
அதேபோல மறுபுறம் திமுக கூட்டணி சார்பில் மு.க.ஸ்டாலின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். தேர்தல் அறிவிப்புக்கு முன்னரே, மக்கள் கிரம சபைக் கூட்டம், விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் மூலம் அவர் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார். தேர்தல் அறிவிப்புக்குப் பின்னர், கூட்டணியை இறுதி செய்ய அவர் சென்னை திரும்பினார்.

அமைச்சர் தொகுதிகள்
கூட்டணி அனைத்தும் இறுதி செய்யப்பட்டவுடன், கடந்த திங்கள்கிழமை சென்னை கொளத்தூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார். அதைத்தொடர்ந்து அன்று மாலையே திருவாரூர் தொகுதியில் அவர் தனது பிரசாரத்தைத் தொடங்கினார். அதிமுக அமைச்சர்கள் போட்டியிடும் தொகுதிகளைக் குறிவைத்து அவர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். இன்று அமைச்சர் விஜயபாஸ்கர் போட்டியிடும் விராலிமலை, ஹெச் ராஜா போட்டியிடும் காரைக்குடி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக அவர் பிரசாரம் செய்கிறார்.












Click it and Unblock the Notifications