பார்த்தீங்களா.. கட்டம் மாறிடுச்சு.. அப்பாவு முடிவை எதிர்நோக்கி காத்திருக்கும் ஈபிஎஸ் ஆதரவு வக்கீல்!
சென்னை : கடந்த 2016ஆம் ஆண்டு முதல் 2021 வரை யார் வெற்றியை எதிர்த்து சபாநாயகர் அப்பாவு சட்டப் போராட்டம் நடத்தினாரோ அவரே, இன்று அப்பாவுவின் முடிவுக்காக காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு கடந்த 2016ஆம் ஆண்டு ராதாபுரம் தொகுதியில் 49 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்ற நிலையில், தபால் வாக்குகள் எண்ணப்படாததைச் சுட்டிக்காட்டி வழக்குத் தொடர்ந்தார்.
ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து அதிமுகவின் இன்பதுரை உச்சநீதிமன்றம் சென்ற நிலையில், கடைசி வரை அந்த வழக்கில் முடிவு வரவேயில்லை. அதற்குள், அதே தொகுதியில் வென்று சபாநாயகரும் ஆகிவிட்டார் அப்பாவு.

ராதாபுரம் தேர்தல் வழக்கு
கடந்த 2016-ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளர் இன்பதுரை வெற்றி பெற்றார். அங்கு போட்டியிட்ட தி.மு.க வேட்பாளர் அப்பாவு வெறும் 49 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்தத் தேர்தலில் 203 தபால் வாக்குகள் எண்ணப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி, இன்பதுரை வெற்றியை எதிர்த்து அப்பாவு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தபால் ஓட்டுகள் மற்றும் 19, 20, 21 ஆகிய சுற்று வாக்குகளை மீண்டும் எண்ண உத்தரவிட்டது.

இன்பதுரை
இந்த உத்தரவை எதிர்த்து இன்பதுரை உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார், அதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற உத்தரவின்படி ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட கடந்த 2019-ஆம் ஆண்டு அக்டோபர் 4-ஆம் தேதி இடைக்கால தடை விதித்தது.

சபாநாயகர் அப்பாவு
இதற்கிடையே, 2021ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் அதே ராதாபுரம் தொகுதியில் அதிமுகவின் அதே இன்பதுரையை வீழ்த்தி வெற்றி பெற்றார் அப்பாவு. மேலும், திமுக அரசின் சார்பில் சட்டமன்ற சபாநாயகராகவும் நியமிக்கப்பட்டார். சட்டமன்ற தேர்தலில் தான் தான் வெற்றி பெற்றதாக வழக்கு போட்டு 5 ஆண்டுகள் வழக்கு நடத்திய நிலையில், கடைசி வரை நீதிமன்றத்தில் நீதி கிடைக்காத நிலையில், சட்டமன்றத்துக்கே தலைவர் ஆனார் அப்பாவு.

திரும்பப் பெறலாம்
இந்நிலையில், இன்பதுரையின் மேல்முறையீட்டு வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.கே.கவுல், எம்.எம்.சுந்தரேஷ் அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது. அப்போது இன்பதுரை சார்பில் ஆஜரான வக்கீல் கவுரவ் அகர்வால், வழக்கு தொடர்பான சட்டப்பேரவை காலம் நிறைவடைந்து விட்டதால், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள தேர்தல் வழக்கை அப்பாவு திரும்பப் பெற்றால் தங்களுக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை என வாதிட்டார்.

அப்பாவு முடிவு
இன்பதுரை தரப்பின் வாதத்தை பதிவு செய்து கொண்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள் இது தொடர்பாக எதிர்மனுதாரர் அப்பாவுவிடம் ஆலோசனை பெற்றுத் தெரிவிக்குமாறு அவரது வக்கீலுக்கு அறிவுறுத்தி, வழக்கு விசாரணையை ஆகஸ்டு 2-ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர். இதனால், இன்பதுரையின் விருப்பப்படி அப்பாவு இந்த வழக்கை வாபஸ் பெறுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அப்பாவு கையில்
ஓபிஎஸ் வகித்து வந்த சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியை பறித்து ஆர்.பி.உதயகுமாரை அந்தப் பதவிக்கு தேர்ந்தெடுத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. இதற்கிடையே தன்னை எதிர்க்கட்சி துணைத் தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கக்கூடாது என ஓபிஎஸ் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவுவிடம் கடிதம் அளித்துள்ளார். இந்த விவகாரத்திலும் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தான் இறுதி முடிவு எடுப்பார்.

சிக்கிய ஈபிஎஸ் தரப்பு
எடப்பாடி பழனிசாமி பரிந்துரைத்துள்ள எதிர்க்கட்சி துணைத் தலைவர் நியமனமும் அப்பாவு கையில் இருக்கிறது. எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளராகவும், அவரது நெருக்கமான வழக்கறிஞராகவும் இருக்கும் இன்பதுரைக்கு எதிரான தேர்தல் வழக்கை வாபஸ் பெறும் முடிவும் அப்பாவு கையில் இருக்கிறது. 5 ஆண்டுகளாக தன்னை அலைக்கழித்த இன்பதுரை விருப்பத்தை அப்பாவு நிறைவேற்றுவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications