ஒற்றை தலைமை! ஓபிஎஸ்ஸை சமாதானப்படுத்தும் ஈபிஎஸ் ஆதரவாளர்கள்? கிரீன்வேஸில் கிரீன் சிக்னல் கிடைக்குமா?
சென்னை: ஒற்றைத் தலைமை யார் என்பது குறித்து ஓபிஎஸ் ஈபிஎஸ் ஆகியோர் தனித்தனியே ஆலோசனை நடத்திய நிலையில் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் ஓபிஎஸ் வீட்டுக்கு வந்துள்ளார்கள். இதனால் எடப்பாடி பழனிச்சாமியை சமாதானப்படுத்தும் முயற்சியா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு ஓபிஎஸ் தர்மயுத்தத்தால் தமிழக அரசியல் களமே பரபரத்தது. இந்த நிலையில் கடந்த 5 நாட்களாக சிறு சிறு பிரச்சினைகள் புகைந்து கொண்டே வந்தது.
அதிமுகவை யார் கைப்பற்றுவது என வரும் போது அந்த புகைச்சல் கொழுந்துவிட்டு எரிகிறது. ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ் இருந்தாலும் அதிமுகவின் அதிகார மையமாக பார்க்கப்படுபவர் எடப்பாடி பழனிச்சாமிதான்.

ஆதரவாளர்கள்
அவரது ஆதரவாளர்களுக்கு தேவையான பதவிகளையும் தேர்தலில் நிற்க வைக்க சீட்டுகளையும் பெற்று தருவார். ஆனால் ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுக்கு தேவையானவற்றை பெற முட்டி மோதினாலும் எடப்பாடி பழனிச்சாமி விட்டுக் கொடுப்பதில்லை. இதனால் அதிமுகவில் எடப்பாடி கோஷ்டி, ஓபிஎஸ் கோஷ்டி என பிரிந்து கிடக்கிறது.

ஒற்றைத் தலைமை
வரும் 23 ஆம் தேதி பொதுக் குழு கூட்டத்தில் ஒற்றைத் தலைமையாக எடப்பாடி பழனிச்சாமியை அறிவிக்க அவரது ஆதரவாளர்கள் தீவிரம் காட்டி வருகிறார்கள். எடப்பாடியும் டெல்லி செல்வாக்கு உள்ளிட்டவைகளை வைத்துக் கொண்டு கட்சியை கைப்பற்ற திட்டமிட்டுள்ளார்.

அதிமுக பொதுக் கூட்டம்
இந்த நிலையில் அதிமுக பொதுக் குழு கூட்டத்திற்கு முன்னோட்டமாக நேற்றைய தினம் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஒற்றைத் தலைமை குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் அது போல் எந்த பேச்சும் இடம் பெறவில்லை என வைத்திலிங்கம் கூறியிருந்தார்.

மூத்த நிர்வாகிகள்
இந்த நிலையில் நேற்றைய தினம் ஓபிஎஸ் வீட்டில் மூத்த நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர். அது போல் அந்த ஆலோசனை இன்றும் நடைபெற்றது. மனோஜ் பாண்டியன், ஆர் பி உதயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர். அது போல் இன்று காலை எடப்பாடி பழனிச்சாமி வீட்டிலும் வேலுமணி, தங்கமணி, சி விஜயபாஸ்கர், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தியிருந்தனர்.

எடப்பாடி பழனிச்சாமியுடன் ஆலோசனை
இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமியுடன் ஆலோசனை நடத்திய அவரது ஆதரவாளர்கள் திடீரென ஓபிஎஸ் வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு அவர்கள் ஓபிஎஸ்ஸை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது அதிமுகவில் சண்டை வேண்டாம், சமாதானமாக போய்விடலாம் என்ற ரீதியில் இந்த புறா விடுதூது நடந்துள்ளதாகவே தெரிகிறது.












Click it and Unblock the Notifications