மக்களின் 100 ஆண்டு கனவு... காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்துக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்!
புதுக்கோட்டை: காவிரி - வைகை - குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
காவிரியில் உபரியாக வெளியேறும் நீரை புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களின் வறண்ட பகுதிகள் வழியாக குண்டாற்றுடன் இணைப்பதன் மூலமாக இப்பகுதி மக்களின் 100 ஆண்டு கால கனவு நிறைவேற்றப்படுகிறது.
இந்த திட்டத்தின் மூலம் கரூர், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் குடிநீர் ஆதாரம் மேம்பட்டு நிலத்தடி நீர்மட்டமும் உயரும்.
முதல்வர் அடிக்கல் நாட்டினார்
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வட்டம் குன்னத்தூர் ஊராட்சியில் ரூ.6,941 கோடி மதிப்பில் காவிரி - தெற்கு வெள்ளாறு - வைகை - குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டத்தின் முதல் கட்டத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார். இதே போல் ரூ.3,384 கோடி மதிப்பில் விரிவாக்கம், புனரமைத்தல் மற்றும் நவீனப்படுத்தும் திட்டத்தின் கீழ் காவிரி உப வடிநிலத்தில் உள்ள நீர்ப்பாசன உள்கட்டமைப்புகளை புனரமைக்கும் பணிகளுக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார்.
ஓ.பன்னீர் செல்வம் பங்கேற்பு
புதுக்கோட்டை குன்னத்தூரில் நடந்த விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்த திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும் இணைப்பு திட்ட பணிகளை முதல்வர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், பல்வேறு அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மக்களின் 100 ஆண்டு கனவு
வெள்ளக் காலங்களில் காவிரியில் உபரியாக வெளியேறும் நீரை கரூர் மாவட்டம், மாயனூர் தடுப்பணையிலிருந்து திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களின் வறண்ட பகுதிகள் வழியாக குண்டாற்றுடன் இணைப்பதன் மூலமாக இப்பகுதி மக்களின் 100 ஆண்டு கால கனவு நிறைவேற்றப்படுகிறது.
மாட்டு வண்டியில் வந்த முதல்வர்
இந்த திட்டத்தின் மூலம் கரூர், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் 342 ஏரிகளும், 42 ஆயிரத்து 170 ஏக்கர் நிலங்களும் பயன்பெறும். 118.45 கி.மீ நீளத்திற்கு கட்டளைக் கால்வாயிலிருந்து கால்வாய் வெட்டப்பட்டு புதுக்கோட்டை மாவட்டம் தெற்கு வெள்ளாற்றுடன் இணைக்க திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளது. மேலும் கரூர், திருச்சி, புதுக்கோட்டையில் குடிநீர் ஆதாரம் மேம்பட்டு நிலத்தடி நீர்மட்டமும் உயரும். முன்னதாக இந்த விழாவில் கலந்து கொள்ள குன்னத்தூர் பகுதியில் முதல்வர் மாட்டு வண்டியில் வந்தார். இதனை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். வழிநெடுக முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.