வருத்தமெல்லாம் இல்லை.. ஆனா எடப்பாடி சிறைக்கு செல்லும் காலம் வெகு தொலைவில் இல்லை.. புகழேந்தி காட்டம்
சென்னை: முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சிறைக்குச் செல்லும் காலம் வெகு தொலைவில் இல்லை என அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட புகழேந்தி தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிகலா, டிடிவி தினகரன் அணியில் இருந்தவர் பெங்களூர் புகழேந்தி. பின்னர் இவர் டிடிவி தினகரனிடம் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். அவருக்கு செய்தித் தொடர்பாளர் பதவி கொடுக்கப்பட்டது.
இந்த நிலையில் பல்வேறு டிவி விவாதங்களில் இவர் பேசி வருகிறார். பாமக இல்லை என்றால் அதிமுக 20 இடங்களில்தான் வென்றிருக்கும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.

அன்புமணி
மேலும் முன்னாள் துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வத்தையும் அன்புமணி விமர்சனம் செய்திருந்தார். இதற்கு அதிமுக செய்தித் தொடர்பாளர் புகழேந்தி பதிலடி கொடுத்தார். அதில் பாமக இல்லையென்றால் அதிமுக வெற்றி பெற்றிருக்காது என சொல்வது சரியில்லை. ஓபிஎஸ் கையெழுத்து போட்டதால்தான் அதிமுக எம்எல்ஏக்கள் உதவியுடன் அன்புமணி ராமதாஸ் எம்பியானார்.

பாமக குறை
ஓபிஎஸ் குறித்து பேசினாலோ அதிமுகவை பாமக குறை கூறினாலோ வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம் என புகழேந்தி மிகவும் காட்டமாக பதில் அளித்திருந்தார். இந்த நிலையில் அதிமுகவின் செய்தித் தொடர்பாளர் புகழேந்தியை கட்சியில் இருந்து நீக்கி ஓபிஎஸ்- ஈபிஎஸ் உத்தரவிட்டனர்.

எடப்பாடி
அதில் கட்சிக்கு அவப்பெயரை உண்டாக்கும் வகையில் செயல்பட்டதால் புகழேந்தியை நீக்குவதாக கூட்டறிக்கையை இருவரும் வெளியிட்டனர். இதுகுறித்து புகழேந்தி அளித்த பேட்டியில் கட்சியிலிருந்து நீக்கியதால் எந்த வருத்தமும் எனக்கு இல்லை. ஆனால் கட்சியில் சர்வாதிகாரியைப் போல எடப்பாடி பழனிச்சாமி செயல்படுகிறார்.

எடப்பாடி பழனிச்சாமி
ஒரு நல்ல அரசியல் எதிரியை இனிதான் அவர் சந்திக்கப் போகிறார். எடப்பாடி பழனிச்சாமி சிறைக்குச் செல்லும் காலம் வெகு தொலைவில் இல்லை. அதற்காக இனி நான் வெளியிலிருந்து பேச போகிறேன் என புகழேந்தி தெரிவித்துள்ளார். இவரது அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தெரியவில்லை.












Click it and Unblock the Notifications