மோடி, ஜின்பிங்கை வரவேற்பு ஏற்பாடு பக்கா.. இரவு நேரத்தில் மாமல்லபுரம் விரைந்த முதல்வர்! நேரில் ஆய்வு
Recommended Video
சென்னை: மாமல்லபுரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று நேரில் சென்று, சீன அதிபர் வருகை நிகழ்ச்சி ஏற்பாடு தொடர்பாக ஆய்வு நடத்தினார்.
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் நாளை மாலை மாமல்லபுரத்தில் சந்திக்கவுள்ளனர். அதிகாரப்பூர்வமற்ற நட்பு ரீதியிலான இந்த சந்திப்பு 12ஆம் தேதி சனிக்கிழமை வரை நீள்கிறது.
இரு தலைவர்களுக்கும், தமிழக அரசு சார்பில் உற்சாகமான வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில்தான் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மாமல்லபுரம் சென்று விழா ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை நேரில் பார்வையிட்டார்.
ஏற்கனவே, இன்று காலை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட குழு மாமல்லபுரம் சென்று ஆய்வு நடத்திய நிலையில், தற்போது முதல்வரும் அங்கு சென்றார்.
இன்று இரவு 7 மணி அளவில் மாமல்லபுரத்துக்கு வருகை தந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அர்ஜுனன் தபசு, ஐந்து ரதம் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்தார். துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், அமைச்சர்கள் தங்கமணி, விஜயபாஸ்கர், காமராஜ் ஆகியோரும் அப்போது உடனிருந்தனர்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்ட ஒரு அறிக்கையில், சீன அதிபர் மற்றும் நமது பிரதமர் நடுவேயான சந்திப்பு, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால், தமிழகமே உற்சாகமாக வரவேற்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.