அதிமுகவின் ஒவ்வொரு வாக்கும் முக்கியம்.. மாவட்டச் செயலாளர்களுக்கு எடப்பாடி சொன்ன முக்கிய மேட்டர்!
சென்னை: அதிமுகவின் ஒவ்வொரு வாக்கும் முக்கியம் என்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதனால் SIR பணிகளை தீவிரமாக அதிமுகவினர் கண்காணிக்க வேண்டும் என்று அறிவுறுத்திய எடப்பாடி பழனிசாமி, அடுத்த 3 மாதங்களுக்கு அதிமுக ஐடி விங் நிர்வாகிகள் நெருப்பாய் இருக்க வேண்டும் என்றும் கூறியதாக தெரிய வந்துள்ளது.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், ஜூலை மாதமே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டார். ஏப்ரல் மாதமே பாஜக உடனான கூட்டணி உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது. ஏற்கனவே மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் முதற்கட்ட பேச்சுவார்த்தையை நடத்தி முடித்திருக்கிறார்.

தற்போது ஜனவரி 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் மீண்டும் பியூஷ் கோயல் சென்னை வரவிருக்கிறார். அதேபோல் நயினார் நாகேந்திரனின் சுற்றுப்பயண நிறைவு விழாவில் அமித்ஷா பங்கேற்க உள்ளார். இந்த விழாவில் அமித்ஷா வருவது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கும் சூழலில், அதற்கு முன் தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய பியூஷ் கோயல் தயாராகி வருவதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தேர்தலுக்கு தயாராகும் வகையில் பல்வேறு அறிவுறுத்தல்கள் அளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், அதிமுகவின் ஒவ்வொரு வாக்கும் நமக்கு முக்கியம். அதனால் வரைவு வாக்காளர் பட்டியலை கண்காணித்து அதிமுகவினர் பணிகள் செய்ய வேண்டும்.
அதிமுக வாக்குகள் விடுபட்டிருந்தால், உடனடியாக அதனை வாக்காளர் பட்டியலில் சேருங்கள். அதேபோல் பிப்ரவரி மாதத்திலேயே தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம். அதனால் தேர்தல் பணிகளை உடனே தொடங்குங்கள். அதிமுக ஐடி விங் நிர்வாகிகள் அடுத்த 3 மாதங்கள் தீவிரமாக பணியாற்ற வேண்டிய தேவை இருக்கிறது.
ஆளுங்கட்சிக்கு எதிரான போராட்டங்கள், நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் தொடர்பாக சோசியல் மீடியாவில் தொடர்ச்சியாக பேச வேண்டும். அதேபோல் உட்கட்சி பூசலுக்கு இடம் கொடுக்காமல் மாவட்டச் செயலாளர்கள் நிர்வாகிகளை அனுசரித்து செல்ல வேண்டும் என்றும் கூறியதாக சொல்லப்படுகிறது. அதேபோல் வேட்பாளர்கள் பட்டியலையும் எடப்பாடி பழனிசாமி இறுதி செய்துவிட்டதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications