தமிழகத்தில் கஞ்சா விற்பனை படுஜோர்! எனது கேள்விக்கு என்ன பதில்! முதல்வர் பூசி மொழுகுகிறார்! -எடப்பாடி
சென்னை: தமிழகத்தில் கஞ்சா உட்பட பல போதைப் பொருட்கள் தாராளமாக விற்கப்படுவதாகவும் போதைப் பொருள் வியாபரிகளை காவல்துறையினர் சுதந்திரமாக நடமாட விட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
மேலும், தனது கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் பூசி மொழுகும் வேலையை முதல்வர் செய்கிறார் எனவும் அவர் கூறியிருக்கிறார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள பரபரப்பு அறிக்கையில் கூறியிருப்பதாவது;

தூங்குபவர்களை எழுப்பலாம்
"தூங்குபவர்களை எழுப்பலாம் - தூங்குவது போல் நடிப்பவர்களை தலைகீழாக நின்று போராடினாலும் எழுப்ப முடியாது." கஞ்சா விற்பனை முழுமையாக தடுத்து நிறுத்தப்படும் என்றும், அதற்காக ஆப்பரேஷன் கஞ்சா 2.0 ஒன்றை ஆரம்பித்த தமிழ்நாடு காவல்துறை, ஆப்பரேஷன் கஞ்சா 2.0 மூலம் கஞ்சா கடத்தலையும் மற்றும் விற்பனையையும் எவ்வளவு தடுத்தது என்றும், எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டன என்றும், எத்தனை குற்றவாளிகள் பிடிபட்டனர் என்றும், எவ்வளவு பேருக்கு தண்டனை பெற்றுத் தரப்பட்டது என்பதையும் இந்த விடியா அரசு விளக்க வேண்டும்.

கஞ்சா புழக்கம்
மேலும், ஆப்பரேஷன் கஞ்சா 2.0 வெற்றி எனில், ஏன் தற்போது ஆப்பரேஷன் கஞ்சா 3.0 நடவடிக்கையினை காவல்துறை தொடங்கியுள்ளது என்றும், காவல் துறையை தன்வசம் வைத்திருக்கும் இந்த விடியா அரசின் முதலமைச்சர் விளக்க வேண்டும். தமிழ்நாடு முழுவதும் கஞ்சாவை வயது வித்தியாசம் இல்லாமல் 18 வயதுக்குட்பட்ட மைனர் சிறுவர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் முதல் முதியவர்கள் வரை பயன்படுத்தி வருகின்றனர்.

கஞ்சா எங்கிருந்து வருகிறது?
கஞ்சா எங்கிருந்து கடத்தப்பட்டு வருகிறது? இதுவரை முழுமையாக கண்டுபிடிக்க முடியாதது ஏன்? கஞ்சா விற்பனையை அடியோடு ஒழிக்க நடவடிக்கை எடுக்காதது ஏன் ? போதைப் பொருள் விற்பனை செய்யும் வியாபாரிகளைக் கைதுசெய்ய தடுப்பவர்கள் யார் ? கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையை தடுத்திருந்தால் இதுபோன்ற சம்பவங்கள் நடந்திருக்காது என்பதில் ஐயமில்லை.

சந்தர்ப்பவாத திமுக ஆட்சி
கடந்த 19 மாதகால சந்தர்ப்பவாத திமுக ஆட்சியில், தமிழகம் முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் நடைபெற்ற, ஒருசில காவல் துறையினரின் அத்து மீறல்களையும், அதனால் வழக்குகளின் பெயரால் அழைத்துச் செல்லப்பட்டவர்கள் அகால மரணமடைந்ததையும், சட்டம்-ஒழுங்கு சீர்குலைவையும், போதைப் பொருட்களின் கேந்திரமாக தமிழகம் மாறியுள்ளது குறித்தும், அனைத்திந்திய அண்ணா திராவிடமுன்னேற்றக் கழகத்தின் சார்பில் நான் அறிக்கைகள் வாயிலாகவும், பேட்டிகளின் வாயிலாகவும், சட்டமன்றத்திலும் தெரிவித்திருந்தேன்.

பூசி மொழுகும்
நடைபெறும் படுபாதக செயல்களைத் தடுக்க இயலாத, காவல் துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் திரு. ஸ்டாலின் மற்றும் திமுக அமைச்சர்கள் எனது கேள்விகளுக்கு நேரடியாக பதில் அளிக்காமல், தவறுகளை மறைக்கும் வகையில் பூசி மொழுகும் வேலையை செய்து வருகிறார்கள்.

லாக்அப் மரணங்கள்
இனிமேல் இதுபோன்ற லாக்அப் மரணங்கள் நடைபெறாது என்று காவல்துறைத் தலைவர் அவர்களும் முதலமைச்சரும் உறுதி அளித்தனர். அதன் பிறகும், தமிழகமெங்கும் பல இடங்களில் காவல் நிலைய மரணங்கள் மற்றும் காவலர்கள் தாக்கியதால் மரணங்கள் நடந்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன. ஒருசில காவலர்களின் அதிகார வரம்பு மீறல்களினால் இதுபோன்ற நிலை தொடருமானால், புகார் கொடுக்கக்கூட பொதுமக்கள் காவல் நிலையம் செல்ல அஞ்சுவார்கள்.

சுதந்திரமாக நடமாட
தமிழகம் முழுவதும் ஒருபுறம் விடியா அரசின் காவல் துறையினர் குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் முறையாக விசாரிக்காமல் அவர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் அதே நேரத்தில், இந்த சமுதாயத்தையே சீரழிக்கக்கூடிய போதைப் பொருள் வியாபாரிகளை சுதந்திரமாக நடமாட விட்டுக்கொண்டிருக்கிறார்கள். கஞ்சா உட்பட பல போதைப் பொருட்கள் தாராளமாக விற்கப்படுகின்றன. தமிழகத்தில் இருந்து விலை உயர்ந்த போதைப் பொருட்கள் வெளி மாநிலங்களுக்கும், வெளி நாடுகளுக்கும் கடத்தப்படுகின்றன.

தகுதி இல்லாதவர்களிடம் ஆட்சி
எந்தத் தகுதியும் இல்லாதவர்களிடம் ஆட்சி அதிகாரம் கிடைத்தால், அந்த மாநிலம் எந்த அளவுக்கு அதல பாதாளத்திற்கு சென்று சீரழியும் என்பதற்கு தமிழகத்தின் தற்போதைய நிலையே சான்றாகும். இனியாவது காவல் துறையினரை தங்களது ஏவல் துறையாக பயன்படுத்தாமல், சட்டம்-ஒழுங்கையும், குற்றச் செயல்களையும் கட்டுப்படுத்தும் வகையில், அவர்களை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று இந்த விடியா திமுக அரசின் முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்.












Click it and Unblock the Notifications