Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆளுநரை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமியிடம் உற்சாகம் மிஸ்சிங்.. பேட்டி முழுக்க ஒரே ஆதங்கம், குமுறல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கோடநாடு எஸ்டேட் வழக்கு தொடர்பாக இன்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து ஆலோசனை நடத்திய எடப்பாடி பழனிச்சாமியிடம் பெரும் ஆதங்கம் தென்பட்டது.

இன்று காலை ராஜ்பவன் சென்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்துவிட்டு வெளியே வந்த எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். எடப்பாடி பழனிசாமி வழக்கத்தைவிட உற்சாகம் குறைந்து காணப்பட்டார். அவரது பேட்டியில் மற்றும் குரலில் ஆதங்கம் அதிகமாகத் தென்பட்டது.

எடப்பாடி பழனிச்சாமி பேட்டியிலிருந்து முக்கிய அம்சங்கள் இதோ:

வழக்குகள் ஏன்

வழக்குகள் ஏன்

திமுக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, கொரோனா நோய் தொற்று கட்டுப்பாடு மற்றும் ஆட்சி நிர்வாகம் உள்ளிட்டவற்றில் தோல்வியடைந்துள்ளது. அதை மறைப்பதற்காக முந்தைய ஆட்சியாளர்கள் பலர் மீது பொய் வழக்கு புனையப்படுகிறது. ஊழல், வசூல் செய்தல் , பழிவாங்குதல் ஆகியவைதான் திமுக அரசின் குறிக்கோளாக இருந்து வருகிறது. நூறு நாளில் வசூல் செய்ததுதான் திமுக அரசின் சாதனை. அரசு உயர் அதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை பணியிடமாற்றம் செய்ததுதான் அவர்களின் 100 நாள் சாதனையாக உள்ளது. திமுக அரசு அமைந்த 100 நாட்களில் மக்கள் பெரும்பாலும் வேதனை மற்றும் சோதனையைத்தான் அடைந்திருக்கிறார்கள். அதிமுக ஆட்சிக்காலத்தில் துவங்கப்பட்ட பல்வேறு பணிகள் அப்படியே கிடப்பில் போடப்பட்டிருக்கிறது. ஆட்சி பொறுப்பேற்றது முதல் எந்த பணியையும் செய்யாமல் திமுக அரசு முடங்கி கிடக்கிறது . மக்களுக்கு பயன் தர வேண்டிய திட்டங்களை திமுக அரசு முடக்கி வைத்திருக்கிறது. இதுதான் அந்த அரசின் சாதனை.

அவதூறு பரப்புகிறார்கள்

அவதூறு பரப்புகிறார்கள்

ஏழை எளிய மக்களுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் மூலமாக வருமானம் கிடைத்து வந்தது ஆனால் அந்த திட்டத்தை முடக்கி வைத்து விட்டார்கள். முன்பு திமுக ஆளும் கட்சியாக இருந்த போது ஊழல் செய்ததாக 13க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இப்போது அவற்றை எல்லாம் விரைவாக முடித்து வைப்பதற்கு திமுக அரசு திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. ஆனால் அதை மறைப்பதற்காக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், வேலுமணி ஆகியோர் மீது வழக்குகள் தொடர்ந்து, சோதனைகள் நடத்தியுள்ளனர். வேண்டுமென்றே திட்டமிட்டு அவதூறுகளை பரப்பி வருகிறார்கள் . அதிமுக தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகள் மீதும் வழக்குகளைப் போட்டு திமுக அரசு மீது விமர்சனங்கள் இல்லாமல் பார்த்துக் கொள்கிறார்கள்.

தேர்தல் அறிக்கைக்கு தொடர்பு இல்லை

தேர்தல் அறிக்கைக்கு தொடர்பு இல்லை

ஜெயலலிதா கோடநாடு எஸ்டேட் சென்று அவ்வப்போது ஓய்வெடுப்பது வழக்கம். இதற்காக அங்கே எஸ்டேட் பங்களா கட்டி வைக்கப்பட்டுள்ளது. சயன் கூட்டாளிகள் அத்துமீறி அந்த இல்லத்துக்கு சென்று காவலாளியை கொலை செய்து இருக்கிறார்கள். அந்த வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு முடிவடையும் தருவாயில் இருக்கிறது. இப்போது திமுக அரசு புதிதாக விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். தேர்தல் அறிக்கையில் இந்த விஷயம் பற்றி விசாரிக்கப்படும் என்று திமுக கூறியதாக ஸ்டாலின் தெரிவிக்கிறார். தேர்தல் அறிவிப்புக்கும் இதற்கும் சம்பந்தம் கிடையாது. இது முறையாக விசாரிக்கப்பட்டு முடிவடைந்த வழக்காகும்.

குற்றவாளிகளுக்கு வாதாடுகிறார்கள்

குற்றவாளிகளுக்கு வாதாடுகிறார்கள்

இந்த வழக்கை, ஏற்கனவே டிராபிக் ராமசாமி என்ற சமூக ஆர்வலர் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்தார். ஆனால் அது டிஸ்மிஸ் செய்யப்பட்டது. உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள், இந்த வழக்கை வேகமாக முடிக்க வேண்டும் என்று ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளனர். குற்றவாளிகள் அனைவரும் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் ஏற்கனவே பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் . இப்படியான குற்றவாளிகளுக்கு திமுக ஏன் இவ்வளவு அக்கறை காட்டுகிறது. அந்த குற்றவாளிகளுக்கு திமுகவைச் சேர்ந்த ராஜ்யசபா உறுப்பினர் என்.ஆர்.இளங்கோ ஆஜராகி வாதாடுகிறார். எப்போதெல்லாம் நீதிமன்றத்தில் வழக்கு வருகிறதோ அப்போதெல்லாம் திமுக தரப்பில் வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக வாதாடி இருக்கிறார்கள்.

நீதிமன்ற அனுமதியில்லாமல் சயனிடம் விசாரணை

நீதிமன்ற அனுமதியில்லாமல் சயனிடம் விசாரணை

ஒரு அரசு குற்றவாளியை தண்டிக்க வேண்டும் நிலையில் இருக்கவேண்டும். குற்றவாளிக்கு பாதுகாப்பு வழங்கும் அரசாக இருக்க கூடாது . ஆட்சி மாற்றம் நடந்த பிறகு குற்றவாளிகளுக்கு ஆதரவாக அரசு செயல்பட ஆரம்பித்திருக்கிறது அரசு. சயன் அளித்த வாக்குமூலத்தில் எனது பெயர் இருப்பதாக பத்திரிகைகளில் செய்திகள் வெளியிட்டிருக்கிறார்கள். உண்மையிலேயே அவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்தாரா என்பது தெரியவில்லை. பத்திரிக்கை செய்தி அடிப்படையில்தான் நான் இதை குறிப்பிடுகிறேன். நீதிமன்றத்தில் முறையாக அனுமதி பெறாமல் அரசின் தலையீடு காரணமாக மீண்டும் சயன் என்பவரிடம் விசாரணை நடத்தப்பட்டிருக்கிறது. இந்த வழக்கு சாட்சிகளிடம் விசாரணை முடிவடைந்து இறுதி கட்டத்தில் விசாரணை இருக்கிறது. இப்போது மறுவிசாரணை தேவை என்று முதலமைச்சர் சொல்கிறார்.

ஆதங்கப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி

ஆதங்கப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி

நேரடியாக எங்களை அரசியலில் சந்திக்க முடியாத திமுக , காழ்ப்புணர்ச்சி காரணமாக பொய் வழக்குகளை புனைந்து மக்களை திசை திருப்பப் பார்க்கிறார்கள். அவர்கள் ஏற்கனவே வெள்ளை அறிக்கை வெளியிட்டார்கள், அது மக்களிடம் எடுபடவில்லை. ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று திமுக தெரிவித்திருந்தது. ஆனால் அதை செய்ய முடியவில்லை. இவ்வாறு எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். இருப்பினும் வழக்கு நடைபெறட்டுமே, அதனால் என்ன என்று எடப்பாடி பழனிசாமி தெரிவிக்கவில்லை. வேகமாக வழக்கை முடித்து இருக்க வேண்டும் ஏன் மறுபடி விசாரணை நடத்துகிறார்கள் என்றும் , திமுக அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும் திரும்பத் திரும்ப கூறினாரே, தவிர வழக்கு பற்றி கவலை இல்லை என்று தெரிவிக்கவில்லை .

நீதிமன்றம் பார்த்துக்கொள்ளுமே

நீதிமன்றம் பார்த்துக்கொள்ளுமே

இதற்கு முன்பு முன்னாள் முதல்வர் கருணாநிதி அல்லது ஜெயலலிதா ஆகியோர் மீது வழக்குகள் ஏதாவது போடப்பட்டால் நாங்கள் சட்டப்படி சந்திப்போம் என்று தெரிவிப்பதோடு அவர்கள் முடித்துக் கொள்வார்கள். ஆனால் எடப்பாடி பழனிசாமி இந்த விஷயத்தில் நேரடியாக பதிலளிக்கவில்லை. மேலும் நீதிமன்றம் வேகமாக வழக்கை முடிக்க சொல்லிவிட்டது இவர்கள் மீண்டும் ஏன் வழக்கு விசாரிக்கிறார்கள் என்ற ரீதியில்தான் அவரது பேட்டி முழுக்க எதிரொலித்தது. வழக்கை வேகமாக முடிக்க சொன்ன நீதிமன்றம் ஒருவேளை அதை அரசு தாமதப்படுத்தினால் கண்டிப்பாக கண்டிக்கும் அல்லது அரசு இந்த விசாரணையில் உரிய முகாந்திரம் இருப்பதாக நீதிமன்றத்திடம் ஆவணங்களை சமர்ப்பணம் செய்தால் அதை நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளும். இது எல்லாம் சட்டத்துறை சார்ந்த விஷயங்கள். ஆனால் எடப்பாடிபழனிசாமி அதை மறுபடி மறுபடி குறிப்பிட்டு கூறியது இந்த வழக்கை விசாரிப்பதே தவறு என்று சொல்வதைப் போல இருக்கிறது என்கிறார்கள் திமுக வட்டாரத்தில். மேலும் திமுக அரசின் செயல்பாடுகளை விமர்சிக்கிறாரே தவிர இந்த வழக்கு தொடர்பாக நேரடியாக பதில் அளிக்கவில்லை என்றும் கூறுகிறார்கள்.

Recommended Video

    சட்டசபைக்கு வெளியே EPS, OPS தர்ணா | Kodanad Case | Oneindia Tamil
    எடப்பாடிக்கு கிடைத்த வாய்ப்பு

    எடப்பாடிக்கு கிடைத்த வாய்ப்பு

    எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது இந்த வழக்கை வேகமாக விசாரணை நடத்த உத்தரவிட்டு முடித்து வைத்து இருக்கலாம். அவ்வாறு செய்திருந்தால் இப்போது இந்த விவகாரம் மீண்டும் பூதாகரமாக கிளம்பி இருக்காது என்று ஆதங்கப்படும் அதிமுகவினரும் இருக்கிறார்கள். எப்படி இருந்தாலும் கோடநாடு எஸ்டேட் வழக்கு அடுத்தடுத்த நாட்களில் பல்வேறு அரசியல் பரபரப்புகளுக்கு காரணமாக அமையப் போகிறது என்பது மட்டும் நிச்சயம்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+